தமிழகத்தில் 69% இட ஒதுக்கீட்டைப் பாதுகாக்க... உடனடி நடவடிக்கை தேவை.. ஓபிஎஸ் - ஈபிஎஸ் அறிக்கை
சென்னை: மகாராஷ்டிராவில் மராத்தா இனத்தவருக்கு வழங்கப்பட்ட இட ஒதுக்கீட்டை உச்ச நீதிமன்றம் ரத்து செய்துள்ளதைச் சுட்டிக்காட்டி, தமிழ் நாட்டில் 69 விழுக்காடு இட ஒதுக்கீட்டைக் காப்பாற்ற, அரசு விரைந்து செயல்பட வேண்டும் என அதிமுக அறிக்கை வெளியிட்டுள்ளது.
மகாராஷ்டிராவில் பூர்வகுடிகளான மராத்தா இனத்தவர்களுக்குக் கல்வி, வேலைவாய்ப்பில் 16% இட ஒதுக்கீடு வழங்கி 2018ஆம் ஆண்டு சட்டம் நிறைவேற்றப்பட்டது. இருப்பினும், இச்சட்டத்திற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கில் மராத்தா சாதியினருக்கான இட ஒதுக்கீட்டின் மூலம் ஒட்டுமொத்த இட ஒதுக்கீடு அளவு 50%-க்கு அதிகமாகி இருக்கிறது. ஆகையால் மராத்தா சாதியினருக்கு இட ஒதுக்கீடு வழங்கிய மகாராஷ்டிரா அரசின் சட்டம் செல்லாது என தீர்ப்பு வழங்கினர்.
ஸ்டாலின் கேபினட்.. இளைஞர் + சீனியர்.. பள்ளிக் கல்வித்துறை, உயர் கல்விக்கு சரியான அமைச்சர்கள் சாய்ஸ்
அதிமுக அறிக்கை
இந்நிலையில், உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பைச் சுட்டிக்காட்டி சமூக நீதியின் தொட்டிலான தமிழ் நாட்டின் 69 விழுக்காடு இட ஒதுக்கீட்டைக் காப்பாற்ற, தமிழ் நாடு அரசு விரைந்து செயல்பட வேண்டும் என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
நடவடிக்கை தேவை
இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், தமிழ் நாட்டு மக்களின் உயர்வுக்கும், சமூகநீதி பாதுகாப்புக்கும் அடிப்படையாக விளங்கக்கூடிய 59 விழுக்காடு இட ஒதுக்கீட்டு முறையைப் பாதுகாக்கத் தேவையான சட்ட ரீதியான நடவடிக்கைகளைத் தமிழ் நாடு அரசு உடனடியாக மேற்கொள்ள வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டிருக்கிறது.
மரத்தா இட ஒதுக்கீடு
மஹாராஷ்டிா மாநிலத்தில் "மராத்தா" 'சமூகத்தினருக்கென்று கல்வியிலும், வேலைவாய்ப்பிலும் அளிக்கப்பட்ட தனி, உள் ஒதுக்கீட்டை ரத்து செய்து உச்சநீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு நேற்று அளித்திருக்கும் தீர்ப்பின் எதிரொலியாக, தமிழ் நாட்டில் நடைமுறையில் இருக்கும் 69 விழுக்காடு இட ஒதுக்கீடு என்னவாகுமோ என்ற கவலையும், அச்சமும் தமிழ் நாட்டு மக்களுக்கு ஏற்பட்டிருக்கிறது.
தமிழகத்தில் இட ஒதுக்கீடு
தமிழகத்தில் பிற்படுத்தப்பட்டோர். மிகவும் பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர் ஆகியோருக்கு கல்வி நிறுவனங்கள் மற்றும் வேலைவாய்ப்புகளில் 69 சதவீத இடதுக்கீடு வழங்க வகை செய்து, 1993-ல் தமிழ் நாடு சட்டமன்றப் பேரவையில் அதற்கென தனியாகச் சட்ட முறையினை நிறைவேற்றி, மத்திய அரசின் ஒப்புதலோடு அச்சட்டத்திற்குச் சட்டப் பாதுகாப்பு வழங்கி, அதை 9வது அட்டவணையில் சேர்த்தவர் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா.
இட ஒதுக்கீட்டுக் கொள்கையின் ஆன்மா
அரசியலமைப்புச் சட்டத்தின் 102-ஆவது திருத்தத்தின்படி, மாநில அரசுகள் தங்களுடைய ஆளுமைக்கு உட்பட்ட கல்வி நிறுவனங்களில் சேர்க்கை மற்றும் அரசு வேலை வாய்ப்புகளில் இட ஒதுக்கீட்டுக்கான பரிந்துரையை மட்டுமே மத்திய அரசுக்குச் செய்ய முடியும் என்று இப்போது அளிக்கப்படுகின்ற சட்ட விளக்கம், இந்தியாவின் பன்முகத் தன்மையால் வெவ்வேறு விதமாகச் செயல்படுத்தப்பட்டுவரும் இட ஒதுக்கீட்டுக் கொள்கையின் ஆன்மாவைச் சிதைத்துவிடும் என்ற அச்சம் எழுகிறது.
அதிகாரத்தைப் பறிக்கவில்லை
அரசமைப்பு சட்டத் திருத்தம் 102 என்பது மத்திய அரசினால் வழங்கப்படும் வேலைவாய்ப்பு மற்றும் மத்திய அரசின் கல்வி நிறுவனங்களில் இட ஒதுக்கீடு செய்வதற்கு மட்டுமே பொருந்தும். எனவே, அரசமைப்புச் சட்டத்தின் 102-வது திருத்தம், மாநில அரசுகள், அவர்கள் கட்டுப்பாட்டில் உள்ள நிறுவனங்களில் இட ஒதுக்கீடு செய்வது குறித்த அதிகாரத்தைப் பறிக்கவில்லை என்று மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் கே.கே. வேணுகோபால் மிகவும் தெளிவாக உச்ச நீதிமன்றத்தில் எடுத்துக்காட்டியுள்ளார்.
உடனடி நடவடிக்கை தேவை
ஏழை, எளிய சாமானிய மக்கள் கல்வி பெறவும், அரசு வேலைவாய்ப்பு பெறவும், அதன் மூலம் சமூக நீதி நிலைநாட்டப்பட்டு, சமூகத்தால் வஞ்சிக்கப்பட்ட மக்கள் சமூக நீதிக் கொள்கைகளால் தூக்கிவிடப்படவும் இட ஒதுக்கீடு முறை மிகச் சிறந்த வழி என்பதால், தமிழக அரசு உடனடியாக சட்ட வல்லுநர்களின் ஆலோசனையைப் பெற்று. 69 விழுக்காடு இட ஒதுக்கீடு காப்பாற்றப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறோம்" என அவர்கள் தங்கள் அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.