எகிறி வந்த எடப்பாடி.. படைதிரட்டிய பன்னீர்! பிரிந்து வந்த சசி, டிடிவி - ஜெ. நினைவிடத்தில் ஜோர்
சென்னை: டிசம்பர் 5 ஆம் தேதியான இன்று ஜெயலலிதாவின் நினைவு தினத்தை கடைபிடிக்கும் எடப்பாடி பழனிசாமி, ஓபிஎஸ், சசிகலா, டிடிவி தினகரன் ஆகியோர் தனித்தனியாக தங்களின் ஆதரவாளர்களோடு வந்து ஜெயலலிதா நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த உள்ளார்கள்.
தமிழ்நாட்டின் மறைந்த முதலமைச்சரும், அதிமுகவின் முன்னாள் பொதுச்செயலாளருமான ஜெயலலிதா உடல்நலக்குறைவால் கடந்த 2016 ஆம் ஆண்டு டிசம்பர் 5 ஆம் தேதி இரவு காலமானதாக அறிவிக்கப்பட்டது.
ஜெயலலிதா மறைவை தொடர்ந்து முதலமைச்சராக பதவியேற்ற ஓ.பன்னீர்செல்வம், சசிகலாவுக்கு எதிராக தர்ம யுத்தத்தில் ஈடுபட்டதால் அவர் தனி அணியாக பிரிந்து சென்றார்.
சீமைச்சாமி அண்ணனை மறக்க முடியுமா? ஜெயலலிதாவின் பாதுகாப்பு அதிகாரி மறைவு பற்றி பூங்குன்றன் உருக்கம்!
உட்கட்சிப்பூசல்
இதனை தொடர்ந்து தமிழ்நாடு முதலமைச்சராக எடப்பாடி பழனிசாமியை தேர்வு செய்தார் சசிகலா. அதன் பின்னர் சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா மீண்டும் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டார். அடுத்த சில மாதங்களில் சசிகலா டிடிவி தரப்புக்கும் எடப்பாடி பழனிசாமி தரப்புக்கும் இடையே மோதல் வெடித்தது.
எடப்பாடி, சசிகலா பிளவு
இதனை தொடர்ந்து அதிமுக 3 அணிகளாக பிரிந்து செயல்பட்டது. அடுத்த சில மாதங்களில் டெல்லியின் தலையீடு காரணமாக எடப்பாடி பழனிசாமியும் ஓ.பன்னீர்செல்வமும் இணைந்தனர். 2021 ஆம் ஆண்டு சட்டசபைத் தேர்தல் வரை இருதரப்பினரும் ஒற்றுமையாக செயல்பட்டு வந்த நிலையில் முதலமைச்சர் வேட்பாளர் தேர்தல் தொடங்கி பல்வேறு விவகாரங்களில் மீண்டும் விரிசல் ஏற்பட்டது.
ஈபிஎஸ் - ஓபிஎஸ் மோதல்
இது கடந்த ஜூன் மாதம் அதிமுக பொதுக்குழு கூட்டம் தொடர்பான மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தின்போது பெரிய மோதலாக வெடித்தது. இபிஎஸ் தனது ஆதரவாளர்களை அழைத்து பொதுக்கூட்டம் நடத்தி இடைக்கால பொதுச்செயலாளராக பதவியேற்றுக்கொண்டார். ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்களையும் கட்சியில் இருந்து நீக்கினார். ஓபிஎஸும் இதற்கு எதிராக சட்டப்போராட்டம் நடத்தி வருகிறார்.
டிடிவி, சசிகலாவின் அரசியல்
மறுபக்கம் சசிகலா விடுதலையை தொடர்ந்து அவரோடு இணைந்து டிடிவி தினகரன் பணியாற்றுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இருவரும் தனித்தனியாகவே செயல்பட்டு வருகின்றனர். ஆனால், சசிகலாவின் தலைமையின் கீழ் செயல்படும் முடிவில் டிடிவி தினகரன் இருக்கிறார் என்றும் கூறப்படுகிறது.
ஜெயலலிதா நினைவிடம்
இந்த நிலையில் அதிமுகவில் திருப்புமுனையை ஏற்படுத்திய நாளான டிசம்பர் 5 ஆம் தேதியான இன்று ஜெயலலிதா நினைவிடத்துக்கு தனித்தனியாக சென்று தலைவர்கள் அஞ்சலி செலுத்துகிறார்கள். அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் அமைச்சர்கள், தனது ஆதரவாளர்கள் நிர்வாகிகளுடன் கருப்பு சட்டை அணிந்து அமைதி ஊர்வலமாக சென்று அஞ்சலி செலுத்தினார்.
ஓபிஎஸ் பேரணி
இவர்களை தொடர்ந்து முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களுடன் காலை 10:30 மணியளவில் தனது ஆதரவாளர்களுடன் பேரணியாக சென்று அஞ்சலி செலுத்தினார். இதில் எம்.எல்.ஏக்கள் வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன், முன்னாள் எம்.பி மைத்ரேயன் மற்றும் தனது ஆதரவாளர்களை திரட்டிச் சென்றார் ஓ.பன்னீர்செல்வம்
டிடிவி, சசிகலா
அதன் தொடர்ச்சியாக அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் தினகரன் காலை 11 மணியளவில் தனது ஆதரவாளர்ளுடன் ஜெயலலிதா நினைவிடத்துக்கு அமைதி பேரணி சென்று அஞ்சலி செலுத்தினார். டிடிவி தினகரனை தொடர்ந்து சசிகலா காலை 11:30 மணியளவில் ஜெயலலிதா நினைவிடத்துக்கு சென்று அஞ்சலி செலுத்தினார்.