மோடி, அமித்ஷா அதை பற்றி பேசியதே இல்லை.. அவங்க வேற; நாங்க வேற.. கட் அண்ட் ரைட்டாக சொன்ன ஜெயக்குமார்!
சென்னை : ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி மீண்டும் இணைய வாய்ப்பே இல்லை என ஈபிஎஸ் அணியைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
ஓ.பன்னீர்செல்வம், டிடிவி தினகரன், சசிகலா ஆகியோருக்கு எந்த நிலையிலும் அதிமுகவில் இடமில்லை என திட்டவட்டமாக கூறியுள்ளார் ஜெயக்குமார்.
மேலும், அதிமுக உட்கட்சி விவகாரத்தில் பாஜக தலையிடுவதில்லை. அதை அவர்கள் விரும்புவதும் இல்லை என்றும், பாஜக உடன் எந்த பிரச்சனையும் இல்லை. சுமூகமான உறவு தான் இருக்கிறது என்றும் மாஜி அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான் ஜிந்தாபாத்.. ராகுலின் பாரத் ஜோடோ யாத்திரையில் கிளம்பிய கோஷம்? பாஜக வெளியிட்ட வீடியோ
ஓபிஎஸ் இணைப்புக்கு வாய்ப்பே இல்லை
சென்னை பட்டினப்பாக்கத்தில் உள்ள தனது இல்லத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர், "ஓபிஎஸ் விவகாரத்தில் பொதுக்குழு மூலம் நிரந்தர தீர்வு எடுக்கப்பட்டுவிட்டது. பொதுக்குழுவில் எடுக்கப்பட்ட முடிவின் படி கட்சி சிறப்பாக செயல்பட்டு வருகிறது. ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி மீண்டும் இணைய வாய்ப்பே இல்லை. கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபடும்போது எப்படிப் பொறுத்துக்கொள்ள முடியும்?
மூவருக்கு இடமில்லை
ஒட்டுமொத்தமாக திமுகவிற்காக ஓ.பன்னீர்செல்வம் செயல்படும்போது அவரை எப்படி கட்சியில் வைத்துக்கொள்ள முடியும்? வரும் நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக தலைமையில் தான் கூட்டணி அமையும். எங்களுடைய கூட்டணியில் ஓ.பன்னீர் செல்வம், டிடிவி தினகரன், சசிகலா ஆகியோருக்கு எந்த நிலையிலும் அதிமுகவில் இடமில்லை. " என்றார்.
மோடி அமித்ஷா பேசியதில்லை
தொடர்ந்து, அதிமுக - பாஜக உறவு பற்றி பேசிய ஜெயக்குமார், "அதிமுகவின் உள் விவகாரங்களில் பிரதமர் மோடியோ, உள்துறை அமைச்சர் அமித்ஷாவோ தலையிடவில்லை. பாஜகவின் கொள்கை சித்தாந்தம் வேறு, அதிமுகவின் சித்தாந்தம் வேறு. பாஜகவை பொறுத்தவரை ஒரு தோழமை உணர்வுடன் மட்டுமே எங்களது அணுகுமுறை உள்ளது. ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி இணைய வேண்டும் என பிரதமரோ, அமித்ஷாவோ பேசியது இல்லை, இனியும் அப்படி நடக்காது.
ஆளுநர் அரசியல்
பாஜகவுடன் எங்களுக்கு சுமூகமான உறவு உள்ளது. அதில் எந்த பிரச்சனையும் இல்லை. ஆளுநரை சந்திக்கும் போது அரசியல் பேசவில்லை. ஆளுநர் அவரது பணியைச் செய்கிறார். பல்வேறு வகையான பிரச்சனைகள் குறித்துப் பேசுகிறார். நாங்கள் எங்கள் பணியைச் செய்கிறோம். மக்கள் பிரச்னைக்கு குரல் கொடுக்கும் அசைக்க முடியாத சக்தியாக அதிமுக செயல்படுகிறது." எனத் தெரிவித்தார்.
முதல்வரின் ஊதுகுழல்
மேலும் பேசிய ஜெயக்குமார், "முதல்வர் விருப்பப்படிதான் காங்கிரஸ் செயல்படுகிறது. செல்வப் பெருந்தகையைப் பொறுத்தவரை அவர் மேல் ஊழல் குற்றச்சாட்டுகள் உள்ளன. முதல்வர் ஸ்டாலின் ஏற்பாடுகளால் தான் செல்வப் பெருந்தகை காங்கிரஸ் சட்டமன்ற கட்சி தலைவரானார். செல்வப் பெருந்தகை காங்கிரஸ் கட்சியைப் பற்றிப் பேசமாட்டார். எங்களைப் பற்றித்தான் பேசுவார். முதல்வரின் ஊதுகுழல் அவர். செல்வப் பெருந்தகை காங்கிரசின் தலைவராக வேண்டும். அதற்கு என்ன வழியோ அதைச் செய்து கொண்டுள்ளார். இந்தக் குற்றச்சாட்டை நாங்கள் சொல்லவில்லை. காங்கிரஸ் கட்சியின் ரஞ்சன்குமார் சொல்கிறார்." என விமர்சித்துள்ளார்.
பாஜக - அதிமுக
அதிமுக விவகாரத்தில் பாஜக தலையிடவில்லை என எடப்பாடி பழனிசாமி தரப்பினர் தொடர்ந்து கூறி வருகின்றனர். எனினும், ஓபிஎஸ், ஈபிஎஸ் இருவருமே மோடி, அமித்ஷாவை சந்திக்க தொடர் முயற்சிகள் மேற்கொண்டதும் சந்தித்ததும் பல்வேறு கேள்விகளை எழுப்பின. இந்நிலையில் தான் ஓபிஎஸ், தினகரன், சசிகலா மூவரையும் சேர்த்துக்கொள்ளவே மாட்டோம் என்றும், பாஜக எங்கள் உட்கட்சி விவகாரத்தில் தலையிடாது என்றும் தெரிவித்துள்ளார் ஜெயக்குமார்.