என் ஸ்டேட்டஸுக்கு தகுந்தமாதிரி கேளுப்பா.. ‘கண்டவங்க பத்தி ஏன்?’- பேரை கேட்டதுமே டென்ஷனான ஜெயக்குமார்
சென்னை : என் ஸ்டேட்டஸுக்கு தகுந்தமாதிரி கேளுப்பா.. ஸ்டேட்டஸ் இல்லாத ஆளுக்கெல்லாம் நான் பதில் சொல்ல முடியாது.. என புகழேந்தி பற்றிய கேள்வியை தவிர்த்தார் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்.
அதிமுகவில் ஓபிஎஸ், ஈபிஎஸ் மோதலைத் தொடர்ந்து, இரு தரப்பினரும் மாறி மாறி விமர்சித்து வருகின்றனர். இந்நிலையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய ஈபிஎஸ் ஆதரவாளர் ஜெயக்குமார், ஓ.பன்னீர்செல்வம் தரப்பினரை விளாசியுள்ளார்.
அப்போது ஓபிஎஸ் ஆதரவாளரான புகழேந்தி பற்றி செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பியபோது, அவர் பேசுவது பற்றி எல்லாம் என்னிடம் கேட்காதீர்கள், என் ஸ்டேட்டஸுக்கு நிகரானவர்கள் பற்றி கேளுங்கள் எனக் கூறினார்.

ஸ்டேட்டஸ் இல்லாத ஆளுக்கெல்லாம்
இன்று செய்தியாளர்களைச் சந்தித்த எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர் ஜெயக்குமாரிடம், ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர் புகழேந்தியின் விமர்சனம் குறித்து செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார். உடனே குறுக்கிட்ட ஜெயக்குமார், "தம்பி, வேற யார் சொன்னதைப் பற்றி வேண்டுமானாலும் கேளுப்பா.. அவங்களுக்கெல்லாம் பதில் சொல்ல முடியாது. என் ஸ்டேட்டஸுக்கு தகுந்தமாதிரி கேளுங்க.. ஸ்டேட்டஸ் இல்லாத ஆளுக்கெல்லாம் நான் பதில் சொல்ல முடியாது.

கண்டவங்களுக்கு எல்லாம்
ஸ்டாலின் சொல்வது பற்றி, சீமான் சொல்வது பற்றி, மற்ற பிரபலங்கள் சொல்வது கேளுங்க.. யாருனே தெரியாதவங்கள பற்றிய கேள்விகளை எல்லாம் விட்ருங்க.. நான் சத்தியமா சொல்றேன், நீங்க கேட்ட நபரின் பேட்டிகளை எல்லாம் நான் பார்ப்பதே இல்லை. அவர்கள் என்ன பேசுகிறார்கள் என்பது பற்றி எதுவுமே கேட்பதில்லை. போற வர கண்டவங்களுக்கு எல்லாம் பதில் சொல்ல முடியுமா? என் ஸ்டேட்டஸுக்கு நிகரானவர் பற்றி மட்டும் கேள்வி கேளுங்கள்" என தீர்மானமாகப் பேசினார்.

சட்டப்படி எதிர்கொள்வோம்
ஓபிஎஸ் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய இருப்பது குறித்துப் பேசிய ஜெயக்குமார், "எம்.ஜி.ஆர் வகுத்துத் தந்த பை-லா படி சரியான பாதையில் நாங்கள் செல்வதால் எங்களுக்கு நியாயம் கிடைத்தது. சட்டத்தின்படி நாங்கள் செல்கிறோம். இப்போது கேவியட் மனு தாக்கல் செய்துள்ளோம். அவர்கள் எங்கு சென்றாலும் சரி சட்டப்படி நாங்கள் அதனை எதிர்கொள்வோம்" எனத் தெரிவித்தார்.

பொதுக்குழுவா? - சிரிப்பு
ஓ.பன்னீர்செல்வம் பொதுக்குழு கூட்டத்தை நடத்த இருப்பதாக வெளியாகி வரும் தகவல்கள் குறித்த கேள்விக்கு பதிலளித்த ஜெயக்குமார், "முதலில் அவரை ஒரு பொதுக்கூட்டத்தை நடத்தச் சொல்லுங்கள், பொதுக்குழு கூட்டம் பற்றி அப்புறம் பார்க்கலாம்" எனக் கிண்டலாகக் கூறினார்.

உதயநிதி ரசிகர் மன்றம்
மேலும் பேசிய ஜெயக்குமார், "யூ-டர்ன் அடிப்பதில் பள்ளிக்கல்வித்துறை போல ஒரு கைதேர்ந்த துறை இப்போது கிடையாது. காலையில் ஒரு கருத்து, மாலையில் ஒரு கருத்து. கல்வி டிவி சி.இ.ஓ வை நியமித்து பிறகு வாபஸ் வாங்கினார்கள். இந்த ஆட்சியில் மோசமான துறை பள்ளிக்கல்வித் துறை தான். உதயநிதி ஸ்டாலினின் ரசிகர் மன்றங்களை கவனித்துக் கொள்வதுதான் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு ஏற்ற துறை. உதயநிதி ரசிகர் மன்றம் என்ற ஒரு துறையை ஏற்படுத்தி அமைச்சராக நியமித்து விடுங்கள். அதில் தான் அவர் பாஸ் மார்க் வாங்குவார்." எனத் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications