சசிகலா ஐடியா.. உடனே கட்டையைப் போட்ட ஈபிஎஸ் டீம்! “மூக்கை நுழைக்க நீங்க யாரு?” கேட்டாரே ஒரு கேள்வி!
சென்னை : "சசிகலா சொல்லும் கருத்தை எல்லாம் யாரும் பொருட்படுத்துவதாகத் தெரியவில்லை. அதிமுக பற்றி பேசுவதற்கு சசிகலா யார்? சசிகலா, டிடிவி தினகரன், ஓபிஎஸ் ஆகியோரை ஒருங்கிணைத்து தனிக்கட்சி தொடங்கினால் நல்ல விஷயம் தான்" என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
திமுகவை தோற்கடிக்க வேண்டுமென்றால், அதிமுக ஒன்றுபட வேண்டும், அனைவரும் ஒன்றிணைந்து திமுகவை வீழ்த்த வேண்டும், விரைவில் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமியை சந்திக்க திட்டம் உள்ளது என சசிகலா இன்று செய்தியாளர்களிடம் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், சசிகலாவின் கருத்துக்கு உடனடியாக பதிலடி கொடுத்துள்ளார் ஈபிஎஸ் அணியைச் சேர்ந்த அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்.
"பயமா.. எனக்கா.." ஓபிஎஸ் மற்றும் எடப்பாடி குறித்து வந்து விழுந்த கேள்வி.. சட்டென பதிலளித்த சசிகலா
அதிமுக - ஈபிஎஸ் அணி
தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சரும், அதிமுக நிறுவன தலைவருமான எம்.ஜி.ஆரின் 106வது பிறந்தநாளை முன்னிட்டு அதிமுக தலைமை அலுவலகத்தில் உள்ள எம்.ஜி.ஆர் சிலைக்கு அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் முன்னாள் அமைச்சர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இந்நிகழ்வில் கலந்துகொண்ட முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அறிவு வளரல
செய்தியாளர்களிடம் மாஜி அமைச்சர் ஜெயக்குமார் பேசுகையில், தமிழ்நாட்டில் இருக்கும் சிலருக்கு அறிவு வளரவில்லை. ஆள் மட்டும் உயரமாக இருக்கிறார்கள் எனத் தெரிவித்தார். அதற்கு செய்தியாளர்கள் யாரைச் சொல்கிறீர்கள் என்று கேள்வி எழுப்பியதற்கு நான் எப்போதும் யாரை திட்டுவேனோ அவர்தான் என மறைமுகமாக விமர்சனம் செய்தார் ஜெயக்குமார்.
கொள்ளை
மேலும், "சத்தியம் தவறாது உத்தமன் போலவே நடிக்கிறார். சமயம் பார்த்து பல வகையில் கொள்ளை அடிக்கிறார்" என்ற பாடலை பாடி திமுக அரசு நாட்டை கொள்ளை அடிக்கிறது என விமர்சனம் செய்தார். திமுகவை 13 வருடம் தலைதூக்க விடமால் வனவாசத்திற்கு அனுப்பியவர் எம்.ஜி.ஆர், நாட்டுக்காக எண்ணற்ற நல்ல திட்டங்களை கொண்டு வந்தவர் எம்.ஜி.ஆர். இலவச மின்சாரத்திற்கு முன்னோடி எம்.ஜி.ஆர் தான் என்றும் தெரிவித்தார்.
சசிகலா யார்?
தொடர்ந்து, அதிமுகவை ஒருங்கிணைக்க எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வத்தை விரைவில் சந்திக்க இருப்பதாக சசிகலா கூறி இருப்பது குறித்த கேள்விக்கு பதிலளித்த ஜெயக்குமார், "சசிகலா ஆயிரம் கருத்தை சொல்லலாம். அதை யாரும் பொருட்படுத்த வேண்டியதில்லை. அவர் கருத்தையெல்லாம் பெரிதாக எடுத்துக்கொள்ள மாட்டோம். எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக சீரும் சிறப்புமாக எழுச்சியோடு இருக்கிறது. சசிகலா யார் இதை பேசுவதற்கு?
சசிகலா+தினகரன்+ஓபிஎஸ் கட்சி
டி.டி.வி.தினகரன், ஓபிஎஸ் ஆகியோரை வேண்டுமானால் சசிகலா ஒருங்கிணைத்து மூவரும் ஒரு தனிக் கட்சி ஆரம்பிக்கலாம் அது நல்ல விஷயம். அதற்கு நாங்கள் குறுக்க நிற்க மாட்டோம். எங்கள் கட்சியில் சசிகலா மூக்கை நுழைக்க வேண்டாம். கட்சியில் தொண்டர்கள் அனைவரும் ஒருமித்த கருத்தோடு இருக்கும் நிலையில் இது போன்ற கருத்துகளை சசிகலா கூறுவதை தொண்டர்கள் தேவையில்லாத கருத்தாகத்தான் எடுத்துக் கொள்வார்கள்.
ஏற்க மாட்டார்கள்
ஓபிஎஸ், சசிகலாவின் குரலில் பேசுகிறார். ஓபிஎஸ், சசிகலாவுக்கும் எங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. ஓபிஎஸ் ஒரு சுயநலவாதி. அவரைப் பொறுத்தவரை அவரது குடும்பம் வாழவேண்டும். நானும் இருக்கிறேன் என்று காட்டிக் கொள்கிறார். அவர்கள் மூவரும் ஒன்று பட்டால் உண்டு வாழ்வு. ஓபிஎஸ் கருத்தை அதிமுக தொண்டர்களும், தமிழ்நாட்டு மக்களும் யாரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்." எனத் தெரிவித்தார்.
கூட்டத்தில் ஆப்சென்ட் ஏன்
ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என அழைப்பு வந்ததால் தான் ரிமோட் வோட்டிங் தொடர்பான ஆலோசனை கூட்டத்திற்கு நாங்கள் செல்லவில்லை. வேறு ஒன்றும் இல்லை எனத் தெரிவித்தார் ஜெயக்குமார். மேலும், ஓபிஎஸ் தரப்பினர் சென்று இருக்கிறார்கள் என்று கேள்விக்கு, அவர்கள் சுயேசையாக கூட சென்று இருப்பார்கள் அது பற்றி எங்களுக்கு கவலை இல்லை. இடைக்கால பொதுச் செயலாளர் என்று எங்களுக்கு கடிதம் வந்திருந்தால் நாங்கள் தேர்தல் ஆணையத்தின் ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டிருப்போம் என ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
உதயநிதி முக அழகிரி சந்திப்பு
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், மு.கஅழகிரியைச் சந்தித்தது குறித்த கேள்விக்கு பதிலளித்த ஜெயக்குமார், கருணாநிதிக்கு பிறகு திமுக குடும்பமே கழகம் என ஆகிவிட்டது. அதிமுக ஆட்சியில் ஸ்டாலின் தைரியமாக மதுரை சென்றார். ஆனால் கருணாநிதி ஆட்சியில் ஸ்டாலின் மதுரை செல்லவில்லை. அந்த அளவிற்கு சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு இருந்தது எனத் தெரிவித்தார்.
வாக்குறுதிகள் அம்பேல்
மேலும், "ஒரே நாடு ஒரே தேர்தல் நல்ல விஷயம். 2024-ல் ஒரே சமயத்தில் தேர்தல் வந்தால் மக்களுக்கு நல்ல விஷயம். மக்களும் அதைத்தான் எதிர்பார்க்கிறார்கள். ஒரு கட்சி தவிர மற்ற எல்லா கட்சிகளுக்கும் மகிழ்ச்சி தான். திமுகவிற்கு மட்டும் தான் வயிற்றில் புளியைக் கரைக்கும். 2024ல் நாடாளுமன்ற தேர்தலுடன் சட்டமன்ற தேர்தல் நடத்த வாய்ப்பு இருக்கிறது என்பதால் திமுக பீதியில் இருக்கிறது. 2 வருடம் முடியப்போகும் நிலையில் குடும்ப தலைவிகளுக்கு 1000 ரூபாய், நீட் தேர்வு ரத்து, கல்வி கடன் ரத்து தேர்தல் வாக்குறுதிகள் எல்லாம் அம்பேல். தமிழ்நாட்டு மக்களுக்கு பட்டை நாமம் போட்ட அரசு திமுக அரசு" என விமர்சித்தார்.