எருமை மாடு கூடத்தான் கறுப்பா இருக்கு... அப்போ அது திராவிடனா? - யுவனை கேட்கும் சீமான்
கருப்பு திராவிடன், பெருமைக்குரிய தமிழன்’ என்று ட்விட்டரில் பதிவிட்டிருக்கிறார் யுவன் சங்கர் ராஜா. அது குறித்து கருத்து கூறியுள்ள சீமான், தம்பி முதலில் குழப்ப வேண்டாம் என்று கூறினார்.
சென்னை: நீ திராவிடனா? தமிழனா? என்று யுவன் சங்கர் ராஜவை சீமான் கேள்வி எழுப்பியுள்ளார். யுவன்சங்கர் ராஜா கூறுவது சிறுபிள்ளைதனமாக உள்ளது என்று கூறிய சீமான், எருமை மாடு கூடத்தான் கறுப்பாக உள்ளது அது திராவிடனா என்று கேட்டுள்ளார்.
அம்பேத்கார் அன்ட் மோடி என்கிற புத்தகத்திற்கு இளையராஜா முன்னுரை எழுதியிருந்தார். அதில், "பிரதமர் மோடி தலைமையில் நாடு வளர்ச்சிப் பாதையில் சென்று கொண்டிருக்கிறது. அனைத்து துறைகளிலும் முன்னேற்றம் கண்டு வருகிறது. இந்தியாவின் உள்கட்டமைப்புகள் சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளது என்று இளையராஜா கூறியுள்ளார். அம்பேத்கரும் மோடியும் இந்தியா குறித்து பெரிய கனவு கண்டவர்கள்" என்று பிரதமர் மோடியைப் புகழ்ந்து எழுதியுள்ளார்.
இளையராஜாவின் இந்த கருத்து சமூக வலைத்தளங்களில் விவாதப்பொருளாகியுள்ளது. இளையராஜாவிற்கு ஆதரவாகவும் எதிராகவும் கருத்துக்கள் பதிவிட்டு வருகின்றனர்.
கருப்பு திராவிடன்.. தமிழன்.. அப்பா இளையராஜா கருத்துக்கு மகன் யுவன் பதிலடியா? என்னங்க நடக்குது?
யுவன் சங்கர் ராஜா
நேற்றைய தினம் இளையராஜாவின் மகன் யுவன் சங்கர் ராஜா கருப்பு நிற உடை அணிந்து, கருப்பு திராவிடன், பெருமைக்குரிய தமிழன்' என்று ட்விட்டரில் பதிவிட்டிருக்கிறார். அந்த பதிவு பலராலும் பகிரப்பட்டது. அண்ணாமலை கூட நானும் கருப்பு தமிழன்தான் என்று கூறியிருந்தார். யுவன் சங்கர் ராஜாவின் பதிவு பற்றி கருத்து கூறியுள்ள சீமான், தம்பி முதலில் குழப்ப வேண்டாம் என்று கூறினார்.
ஏன் இந்த குழப்பம்
இரண்டு அடையாளம் தேவையில்லை என்று கூறிய சீமான், நீ தமிழனாக இரு அல்லது திராவிடனாக இரு என்று சொன்னார். திராவிடன், தமிழன் ஏன் பல முகமூடிகளை அணிய வேண்டும் என்று கேட்டார் சீமான். எச்.ராஜா கூட மோடியை திராவிடன் என்று சொல்கிறார். முதலில் இந்தியன், பிறகு திராவிடன், அப்புறம் தமிழன், பிறகு எந்த சாதி என்று கேட்பார்கள் என்று கூறினார்.
எது திராவிடம் யார் திராவிடர்
தேவைப்பட்டால் இந்தியன் என்கிறார்கள், தேவைப்பட்டால் திராவிடன், தேவைப்பட்டால் தமிழன் என்று சொல்கிறீர்கள் என்றார். குழம்பாமல் பெருமைக்குறிய தமிழன் என்று சொல்லுங்கள் கேஜிஎப் பட ஹீரோ யாஷ் தான் பெருமைக்குரிய கன்னடன் என்றுதான் சொல்கிறார். அதே போல பெருமைக்குரிய தமிழன் என்று சொல்ல வேண்டியதுதானே.
விமர்சிக்க வேண்டாம்
யுவன் சின்னப்பிள்ளை அதை விட்டு விடுவோம் எல்லாவற்றையும் விமர்சிக்க வேண்டும் என்று நினைத்தால் அதுவே நோயாகிவிடும் என்று சொன்னார் சீமான். தொடர்ச்சியாக எதையாவது சொல்ல வேண்டும் என்று நினைத்து சொன்னால் அது நோயாகிவிடும். அது அவருடைய கருத்து.
எருமை மாடு கூட கருப்புதான்
கருப்பா இருப்பவர்கள் எல்லாம் திராவிடர்களா? தென் ஆப்ரிக்காவில் கூட கருப்பாகத்தான் இருக்கிறார்கள். உழைக்கும் வர்க்கத்தின் நிறம் கருப்பு. உட்கார்ந்து சாப்பிடுபவர்கள் தோலின் நிறம் மினுமினுப்பாக இருக்கும் என்று சொன்ன சீமான் எருமை மாடு கூட கருப்பாகத்தான் இருக்கிறது அப்போ அது திராவிடனா என்று கேள்வி எழுப்பினார் சீமான். கருப்பு என்றாலே திராவிடன் அல்ல தமிழர்கள் கருப்பாக இருக்கக் கூடாதா என்று கேட்டார்.