நேற்று ஸ்டாலின்.. இன்று திருமாவளவன்.. டார்கெட் ஒன்று தான்.. ஒரே பாணி தாக்குதல்! அதிமுக ஷாக்!
சென்னை: தேர்தல் முடிந்தவுடன் அதிமுக என்ற ஒரு கட்சியே இருக்காது என்றும் அதிமுகவில் வெற்றி பெறுகிற ஒவ்வொருவரும் பிஜேபி உறுப்பினர்கள்தான் என்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Recommended Video
தமிழகத்தில் சட்டசபை தேர்தல் வரும் ஏப்ரல் 6ம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் அதிமுக-பாஜக-பாமக மற்றும் தமாகா உள்ளிட்ட சில கட்சிகள் இணைந்து ஒரு அணியாகவும், திமுக, காங்கிரஸ், மதிமுக, விசிக மற்றும் இடதுசாரிகள் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் இணைந்து ஒரு அணியாகவும் போட்டியிடுகின்றன.
இதேபோல் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம், சமக, ஐஜேகே உள்ளிட்ட கட்சிகள் இணைந்து ஒரு அணியும், டிடிவி தினகரனின் அமமுக, விஜயகாந்தின் தேமுதிக, எஸ்டிபிஐ மற்றும் சில கட்சிகள் இணைந்து ஒரு அணியாகவும் தேர்தலை சந்திக்கின்றன. சீமானின் நாம் தமிழர் கட்சி தனியாக தேர்தலை சந்திக்கிறது.
விழுப்புரத்தில் பிரச்சாரம்
விழுப்புரம் தொகுதியில் அதிமுக வேட்பாளராக அமைச்சர் சிவி சண்முகம் போட்டியிடுகிறார். திமுக சார்பில் டாக்டர் லட்சுமணன் போட்டியிடுகிறார். இருவருமே அதிமுகவில் ஒன்றாக வேலை செய்தவர்கள் என்பதால் கடும் போட்டி காணப்படுகிறது. இந்நிலையில் திமுக வேட்பாளர் டாக்டர் லட்சுமணனை ஆதரித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் பிரச்சாரம் மேற்கொண்டார்.
பிஜேபி உறுப்பினர்கள்
விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன் அப்போது பேசுகையில், தேர்தல் முடிந்தவுடன் அதிமுக என்கிற ஒரு கட்சியை இருக்காது அப்படியே அதிமுகவில் யாராவது வெற்றி பெற்றாலும் அவர்கள் பிஜேபி உறுப்பினர்களாக தான் இருப்பார்கள் என்று காட்டமாக பேசினார்.
பீகாரில் வென்றது எப்படி
பீகார் மாநிலத்தில் மறைந்த முன்னாள் அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான், முதல்வர் நிதிஷ் குமார் போன்றவர்களை பழிவாங்கி சூழ்ச்சியால் வென்றது பாரதிய ஜனதா கட்சி. மதவாத சக்திகளை அரசியலில் திணிக்கிறது பாஜக என்று திருமாவளவன் தெரிவித்தார்.
பாஜகவை ஆதரிக்ககூடாது
மேலும் அவர் பேசுகையில், பாஜக இடம் பெற்றுள்ள மதவாத கூட்டணியை ஆதரிக்க கூடாது என்றும் மதசார்பற்ற ஜனநாயக கூட்டணியான திராவிட முன்னேற்றக் கழகக் கூட்டணியில் இடம்பெற்றுள்ள வேட்பாளர்களுக்கும் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகின்ற விடுதலை சிறுத்தை கட்சி வேட்பாளருக்கு பானை சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். இதனிடையே நேற்று ஸ்டாலினும் அதிமுகவில் வெற்றி பெறுகிறவர்கள் பாஜக உறுப்பினர்கள் தான் என்று ஓ பன்னீர்செல்வத்தின் மகனை குறிப்பிட்டு கடுமையாக விமர்சித்து இருந்தார். இன்று திருமாவளவனும் அதிமுகவை அதே பாணியில் விமர்சித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.