Oneindia Special: இது "சைல்ட் பஃப்ரீ ஆப்ஷன்" காலம்.. விளக்குகிறார் டாக்டர் ராஜபிரியா
சென்னை: கருக்கலைப்பை அடிக்கடி செய்து கர்ப்பப்பையை குழப்பமடையச் செய்யாதீர்கள் என குழந்தையின்மை சிகிச்சை நிபுணர் டாக்டர் ராஜபிரியா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து குழந்தையின்மை சிகிச்சை நிபுணர் டாக்டர் ராஜபிரியா ஐயப்பன் ஒன் இந்தியா தமிழுக்கு மகளிர் தினத்தையொட்டி பேட்டி அளித்தார். அவர் கூறுகையில் திருமணத்திற்கு முன்னர் ஆணும் பெண்ணும் உறவு கொள்வதற்கு தற்போது நிறைய வாய்ப்பு இருக்கிறது.
அதற்கேற்ப சூழல் அமைகிறது. இது சரியா தவறா என்பது குறித்து நாம் பேச வேண்டாம். ஆனால் இதில் எத்தனை பேர் தவறை செய்துவிட்டு திருமணம் செய்து கொள்கிறார்கள், எத்தனை பேர் இதை ஜஸ்ட் லைக் தட் என நினைத்து கடந்து போகிறார்கள்?
மகப்பேறு மருத்துவர்
நான் ஒரு மகப்பேறு மருத்துவராக சொல்ல விரும்புவது என்னவெனில் இந்த உடலுறவால் இரு பிரச்சினைகளை பெண்கள் சந்திக்க வாய்ப்பிருக்கிறது. ஒன்று உடலுறவால் மூலம் தொற்றும் நோய்கள், இன்னொன்று திருமணத்திற்கு முன்பே கரு தரிப்பது. இதனால் கருவை கலைக்கும் முறைக்கு செல்ல வேண்டியுள்ளது. அதனால் அந்த பெண் திருமணத்திற்கு கருத்தரிக்காமல் இருப்பது எப்படி என்பதை தெரிந்திருக்க வேண்டும்.
குழந்தைகள்
குழந்தைகளுக்கு சிறு வயதிலேயே குட் டச், பேட் டச் குறித்து சொல்லி கொடுக்க வேண்டும். அந்தரங்கத்தில் குழந்தையின் தாயை தவிர வேறு யார் கை வைத்தாலும் அது தவறுதான். அதை அந்த குழந்தையே உணர வேண்டும். குட் டச்சுக்கும் பேட் டச்சுக்கும் இருக்கும் வித்தியாசத்தை புரிந்து கொள்ள வேண்டும்.
திருமணம்
புதிதாக திருமணம் செய்து கொள்வோர் குழந்தை வேண்டாம் என்றால் அதற்காக திட்டமிடுதல் வேண்டும். தேவையில்லாமல் கருகலைப்பு செய்ய கூடாது. கர்ப்பப்பையின் பணியே அதனுள் இருக்கும் கருவை காப்பாற்றுவது தான். அதைவிட்டுவிட்டு நாம் திரும்ப திரும்ப கருக்கலைப்பு செய்து கொண்டே இருந்தால் நாளை ஒரு கருவை நிறை மாதம் வரை அது எடுத்துச் செல்லுமா இல்லை குறை பிரசவத்தை கொடுக்குமா என்பதை சொல்ல முடியாது.
கருக்கலைப்பு
கருக்கலைப்பை முறையாக மருத்துவரை அணுகி செய்ய வேண்டும். அதை விட்டுவிட்டு மெடிக்கல் ஷாப்பில் மருந்து வாங்கி போட்டால் பாதி கரு வெளியே வரும், மீதி உள்ளேயே தங்கி அது தொற்றை ஏற்படுத்தும். இதனால் கர்ப்பப்பை வலுவிழக்கும். எனவே கருத்தடை சாதனங்கள் இருக்கின்றன. அவற்றை பயன்படுத்திக் கொள்ளலாம். குழந்தை வேண்டும் என நினைக்கும் போது அந்த கருத்தடை சாதனையை நீக்கிவிட்டு கருவை உருவாக்குவதற்கான முயற்சிகளில் ஈடுபடலாம்.
மாதவிடாய் காலம்
மாதவிடாய் காலத்தில் பெண்கள் படும் அவதிகளை ஆண்கள் தற்போது புரிந்து கொண்டே வருகிறார்கள். இதற்கு அவர்களுடைய வளர்ப்பும் ஒரு காரணம். இங்கும் ஒரு தாய்தான் அந்த ஆண் குழந்தையை வழிகாட்ட வேண்டியுள்ளது. ஒரு தாய் மாதவிடாய் காலத்தில் அந்த ஆண் குழந்தையிடம் "எனக்கு உடம்பு சரியில்லை, 4 நாட்களுக்கு என்னை தொல்லை செய்யக் கூடாது" என சொல்ல வேண்டும். அதே போல் அந்த வீட்டில் அந்த ஆணுக்கு அக்காவோ தங்கையோ இருந்தால் அவர் படும் கஷ்டங்களை பார்த்து நாளை இந்த ஆணுக்கு திருமணம் நடந்தால் மனைவியிடம் அந்த 4 நாட்களுக்கு எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதை புரிந்து கொண்டு நடந்து கொள்வார்.
சைல்ட் ப்ரீ ஆப்ஷன்
லட்சக்கணக்கில் செலவு செய்து திருமணம் செய்து வைப்பது ஒரு குடும்பத்தை வாரிசை உருவாக்குவதற்கும் ,அந்த குடும்பம் விருத்தி அடைவதற்கும்தான் என பெரியவர்கள் நினைக்கிறார்கள். தம்பதியினர் இடையே Child Free option இருக்கிறது. சைல்ட் பஃப்ரீ ஆப்ஷன் என்றால் கல்யாணம் செய்து கொள்வோம், சந்தோஷமாக இருப்போம், ஆனால் நமக்கென குழந்தை வேண்டாம் என்பதுதான். இது இருவரும் பரஸ்பரமாக எடுக்கும் முடிவு. ஆனால் சில கேஸ்களில் ஆணுக்கோ பெண்ணுக்கோ குழந்தை பிறப்பதில் சிக்கல் இருந்தால் உடனே விவாகரத்து என்ற முடிவுக்கு செல்கிறார்கள் என்றார் டாக்டர்.