மாற்றுத் திறனாளிகளுக்கு கூடுதலாக 25% கொரோனா நிதி தேவை என மனு.. தமிழக அரசுபதிலளிக்க ஹைகோர்ட் உத்தரவு
சென்னை: கொரோனா நிவாரான நிதியை சாதாரண மக்களுக்கு வழங்கும் தொகையிலிருந்து 25 சதவீதம் கூடுதலாக, மாற்றுத் திறனாளிகளுக்கு ஒதுக்க வேண்டும் என்று தொடரப்பட்ட வழக்கில் மத்திய மாநில அரசுகள் ஒரு வாரத்துக்குள் பதில் அளிக்குமாறு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கண் பார்வையற்றோருக்கான தேசிய கூட்டமைப்பு மற்றும் டிசம்பர் 3 இயக்கம் ஆகிய அமைப்புகளின் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், மாற்றுத் திறனாளிகளின் உரிமைகளை பாதுகாக்கும் சட்டத்தின் கீழ் அரசு வேலை வாய்ப்பில், அவர்களுக்கு 4 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளதைச் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், சாதாரண மனிதர்களுடன், மாற்றுத் திறனாளிகளை ஒப்பிட முடியாது எனவும், அவர்களுக்கு அதிகளவில் அடிப்படை தேவைகள் உள்ளதாகவும் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
கொரோனா தொற்று பரவலை தடுக்க அறிவிக்கப்பட்டுள்ள ஊரடங்கு காரணமாக வேலை வாய்ப்பை இழந்து தவிக்கும் மாற்றுத் திறனாளிகளுக்கு அரசு வழங்கும் ஆயிரம் ரூபாய் நிதியுதவி போதுமானதல்ல எனவும், மத்திய - மாநில அரசுகள், கொரோனா தடுப்புக்காக பொது மக்களிடம் இருந்து வசூலித்துள்ள நிதியில் சாதாரண மக்களுக்கு ஒதுக்கப்படும் நிதியை விட கூடுதலாக 25 சதவீதம் மாற்றுத்திறனாளிகள் கொடுக்க வேண்டும் எனவும் மனுவில் கோரியுள்ளார்.
இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் எம்எம் சுந்தரேஷ் , பி.டி.ஆஷா ஆகியோர் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, வழக்கை விசாரித்த நீதிபதிகள், இதுகுறித்து, மத்திய, மாநில அரசுகள் உரிய பதில் மனுவை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை ஜூன் 2ம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications