கொரோனா மருந்து... போலி சித்த மருத்துவர் திருத்தணிகாசலத்தின் ஜாமீன் மனு தள்ளுபடி
சென்னை: கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்துவிட்டதாக சமூக வலைதளங்களில் கூறி பரபரப்பை ஏற்படுத்திய போலி சித்த மருத்துவர் திருத்தணிகாசலத்தின் ஜாமீன் மனுவை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
Recommended Video
போலி சித்த மருத்துவர் திருத்தணிகாசலம் அண்மையில் சமூக வலைதளங்களில் வீடியோக்கள் வெளியிட்டார். அந்த வீடியோவில் கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்துவிட்டதாகவும், அரசுக்கு தனக்கு அனுமதி வழங்கவில்லை என்றும் கூறியிருந்தார். அவர் ஆவேசத்துடன் பேசிய வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகியது.

இதையடுத்து விசாரணை நடத்திய இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி மருத்துவதுறை இயக்குனர், திருத்தணிகாசலம் முறையாக சித்த மருத்துவம் படித்தவர் அல்ல என்றும், அவர் பாராம்ரிய முறைப்படி பயிற்சி பெற்றவர் அல்ல என்றும், போலி சித்த மருத்துவர் என்றும் கூறினார். அத்துடன் கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்துவிட்டதாக வதந்திர பரப்புவதாகவும் சென்னை மத்திய குற்றப்பிரிவில் புகார் அளித்தார்.
இந்த புகாரை ஏற்று மத்திய குற்றப்பிரிவின் சைபர் கிரைம் போலீசார் தகவல் தொழில் நுட்ப சட்டத்திலும், அரசுக்கு எதிராக தகவல் வெளியிட்டதாகவும் , தொற்று நோய் சட்டத்திலும் வழக்கு பதிவு செய்து திருதணிகாசலத்தை கைது செய்தனர். அவரை நீதிமன்ற காவலில் எடுத்து விசாரித்து வந்தனர்.
இந்நிலையில் கடந்த வாரம் எழும்பூர் நீதிமன்றத்தில் திருத்தணிகாசலம் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதையடுத்து குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்நிலையில் மீண்டும் ஜாமீன் கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி செல்வக்குமார் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, மனுதாரர் மீது குண்டர் சட்டம் போடப்பட்டுள்ளதை குறிப்பிட்டு ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். இதற்கிடையே தன் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்யக்கோரி திருத்தணிகாசலம் சார்பில் அவரது தந்தை கலிய பெருமாள் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.












Click it and Unblock the Notifications