விஜய், அஜித் மீது சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் பரபர புகார்.. "பகையை உருவாக்குறாங்க"
சென்னை: நடிகர் விஜயின் வாரிசு மற்றும் அஜித்தின் துணிவு திரைப்படங்கள் கடந்த 11ம் தேதி ஒன்றாக திரைக்கு வந்தன. சென்னையில் உள்ள தனியார் திரையரங்கில் பேனர்கள் கிழிக்கப்பட்டு இருவரின் ரசிகர்களும் மோதிக்கொண்ட நிலையில் நடனமாடி லாரியில் இருந்து கீழே குதித்த கல்லூரி மாணவர் பலியானார். இந்நிலையில் தான் நடிகர்கள் விஜய், அஜித் மற்றும் திரையரங்கு உரிமையாளர் மீது இருதரப்பு இடையே பகைமையை உருவாக்குதல் மற்றும் மரணம் விளைவித்தல் குற்றம் ஆகிய பிரிவுகளில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு அம்சங்களுடன் சென்னை மாநகர போலீஸ் ஆணையர் அலுவலகத்தில் பரபரப்பான புகார் செய்யப்பட்டுள்ளது.
பொங்கலையொட்டி 8 ஆண்டுகளுக்கு பிறகு நடிகர்கள் விஜயின் வாரிசு மற்றும் அஜித்தின் துணிவு படங்கள் ஒன்றாக திரைக்கு வந்துள்ளன. கடந்த 11ம் தேதி வாரிசு, துணிவு திரைப்படங்கள் தமிழகம் முழுவதும் ரிலீசானது.
இதையடுத்து முன்கூட்டியே ரசிகர்கள் தியேட்டரில் டிக்கெட் முன்பதிவு செய்ததோடு, முந்தைய நாள் இரவிலேயே தியேட்டர்கள் முன்பு கூடி பட்டாசு வெடித்து கொண்டாடி மகிழ்ந்தனர்.

சென்னையில் ரசிகர்கள் மோதல்
இந்த வேளையில் தமிழகத்தின் சில இடங்களில் விஜய், அஜித் ரசிகர்கள் மோதிக்கொண்டன. கட்அவுட்டுகள் கிழிக்கப்பட்டன. குறிப்பாக சென்னை ரோகிணி திரையரங்கில் நள்ளிரவு 1 மணிக்கு துணிவும், காலை 4 மணிக்கு வாரிசு திரைப்படமும் சிறப்பு காட்சிகளாக வழங்கப்பட்டது. துணிவு படம்பார்க்க வந்த அஜித் ரசிகர்கள் திரையரங்கம் முன்பு வைக்கப்பட்டிருந்த விஜய்யின் வாரிசு பட பேனர்கள், கட் அவுட்களை திடீரென அடித்து நொறுக்கி கிழித்து எறிந்தனர். அதன்பிறகு வந்த விஜய் ரசிகர்கள் அஜித்தின் கட்-அவுட்களை கிழித்தெறிந்தனர். இதையடுத்து மோதல் ஏற்பட்ட நிலையில் கண்ணாடி உடைக்கப்பட்டது. போலீசார் தடியடி நடத்தினர்.

கல்லூரி மாணவர் பலி
முன்னதாக சிந்தாதிரிப்பேட்டை ரிச்சி தெருவை சேர்ந்த கல்லூரி மாணவரான அஜித் ரசிகர் பரத்குமார் (19) நண்பர்களுடன் ரோகிணி திரையரங்குக்கு துணிவு பார்க்க வந்திருந்தார். ரசிகர்கள் குவிந்த நிலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பூந்தமல்லி நெடுஞ்சாலையில் வாகனங்கள் மெதுவாக சென்ற நிலையில் லாரி மீது ஏறி நடனமாடிய பரத் குமார் கீழே குதித்தபோது முதுகு தண்டுவடத்தில் காயம் ஏற்பட்டு பலியானார். இது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

நடிகர் விஜய், அஜித் மீது புகார்
இந்நிலையில் தான் சென்னையை சேர்ந்த சமூக ஆர்வலர் செல்வக்குமார் மாநகர போலீஸ் ஆணையருக்கு இணையவழியில் புகார் ஒன்றை அனுப்பி உள்ளார். அதில் நடிகர்கள் விஜய், அஜித் மற்றும் திரையரங்கு உரிமையாளர் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் கோரிக்கை வைத்துள்ளார். இதுதொடர்பாக அவர் வழங்கிய புகாரில் பல்வேறு அம்சங்கள் குறிப்பிடப்பட்டுள்ளது.

புகாரின் சாராம்சம் என்ன?
அதாவது கடந்த 11ம் தேதி நடிகர் விஜயின் வாரிசு மற்றும் அஜித்தின் துணிவு திரைப்படங்கள் வெளியாகின. அப்போது இருவரின் ரசிகர்களும் மோதிக்கொண்டனர். இது மோதல், பிரச்சனையை உருவாக்கும் வகையில் உள்ளது. இதனால் நடிகர்கள் விஜய், அஜித் மீது இருபிரிவின் இடையே பகைமையை ஊக்குவித்தல் உள்ளிட்ட பிரிவில் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் தியேட்டர் வளாகத்தில் கொண்டாட்டங்களுக்கு அனுமதி அளித்த நிலையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யதாததால் அதன் உரிமையாளர் மீது மரணம் விளைவித்தல் குற்றத்துக்கான பிரிவில் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications