உரிமையியல் வழக்கு தொடுப்பது அடிப்படை உரிமை.. யாராலும் பறிக்க முடியாது.. சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி
சென்னை: உரிமையியல் வழக்கு தாக்கல் செய்யும் மக்களின் அடிப்படை உரிமைகளை தேவையில்லாமல் பறிக்க முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
அரசியலமைப்புச் சட்டம் இந்தியக் குடிமக்களுக்கு பல்வேறு அடிப்படை உரிமைகளை வழங்கியிருக்கிறது. பேச்சுரிமை, கருத்துரிமை, அரசாங்கமோ, அரசு அதிகாரிகளோ தவறு செய்தால் அவர்கள் மீது வழக்கு தொடரும் உரிமை உள்ளிட்டவை இதில் அடங்கும். இந்த உரிமைகள் சில நேரங்களில் அரசு இயந்திரங்களால் தட்டிப் பறிக்கப்படும்போது, அதை பாதுகாப்பது நீதித்துறையின் கடமையாகும். இவ்வாறு, மனுதாரர் ஒருவரின் அடிப்படை உரிமையை நீதிமன்றத்தால் பறிக்க முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் ஒரு வழக்கில் இன்று தெரிவித்தது.

ரேஷன் கடைகளுக்கு அத்தியாவசிய பொருட்களை கொண்டு செல்லும் வாகன ஒப்பந்தம் மற்றும் டெண்டர் தொடர்பாக தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் அறிவிப்பு வெளியிடுவதற்கு எதிராக, கோவை கூடுதல் முன்சீப் நீதிமன்றத்தில் முத்துக்குமார் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், அவரது கோரிக்கையை ஏற்று மேற்குறிப்பிட்ட விவகாரத்தில் அறிவிப்பு எதையும் வெளியிடக்கூடாது என தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்திற்கு நீதிமன்றம் தடை விதித்தது.
இந்நிலையில், முத்துக்குமார் தொடர்ந்த வழக்கை ரத்து செய்ய கோரி, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் நிர்வாக இயக்குனர், சென்னை உயர்நீதிமன்றத்தில் மறுஆய்வு மனுவை தாக்கல் செய்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம், "அரசியலமைப்பு சட்டப்பிரிவு 227- ஐ உயர்நீதிமன்றம் தேவைப்படும்போது தான் பயன்படுத்த வேண்டும். சிறு தவறுக்காக உரிமையியல் நீதிமன்றத்தில் தொடரப்படும் வழக்கை இந்த பிரிவை பயன்படுத்தி ரத்து செய்யக் கூடாது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. எனவே, முத்துக்குமார் கோவை நீதிமன்றதில் தொடர்ந்த வழக்கை ரத்து செய்ய முடியாது" என நீதிபதி உத்தரவிட்டார்.
மேலும், உரிமையியல் வழக்கு தொடர்வது என்பது குடிமக்களின் அடிப்படை உரிமை என்றும், அந்த உரிமையை தேவையில்லாமல் பறிக்க முடியாது எனவும் கூறிய நீதிபதி, நுகர்பொருள் வாணிபக் கழக நிர்வாக இயக்குநர் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்தும் உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications