எல்லாம் “சாதி”.. சீமானுக்கு வந்துச்சே கோபம் - ஆ.ராசாவுக்கு ஆதரவு ஏன்? கொளுத்திப்போட்ட முன்னாள் தம்பி
சென்னை: திமுக எம்பி ஆ.ராசாவுக்கு ஆதரவாக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிக்கை வெளியிட்டுள்ள நிலையில், சீமானுக்கு இங்கு தேவைபட்டது ஆ.ராசாவின் சாதியும், பெரியாரின் சாதியும் தான் என திமுகவை சேர்ந்த ராஜீவ் காந்தி விமர்சித்துள்ளார்.
நீலகிரி தொகுதியின் திமுக எம்பியும் முன்னா மத்திய அமைச்சருமான ஆ.ராசா பேசிய கடந்த 2 நாட்களாக சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.
ஆ.ராசா தன்னுடைய உரையில், "கிறிஸ்துவராகவோ இஸ்லாமியராகவோ பெர்சியராகவோ இல்லாவிட்டால் நீ இந்துதான் என உச்சநீதிமன்றம் சொல்கிறது. இப்படிப்பட்ட கொடுமை வேறு எந்த நாட்டிலாவது உண்டா? இந்துவாக இருக்கும் வரை நீ சூத்திரன்.

ஆ.ராசா பேச்சு
சூத்திரனாக இருக்கும் வரை நீ விபச்சாரியின் மகன். இந்துவாக இருக்கும் வரை நீ பஞ்சவன். இந்துவாக இருக்கும் வரை நீ தீண்டத்தகாதவன். எத்தனை பேர் விபச்சாரியின் மகனாக இருக்க விரும்புகிறீர்கள்? எத்தனை பேர் தீண்டத்தகாதவராக இருக்க விரும்புகிறீர்கள்? என்ற கேள்வியை உரக்க எழுப்பினால்தான் அது சனாதனத்தை முறியடிக்கும் அடிநாதமாக அமையும்.

தனித் தமிழ்நாடு
விடுதலையும் முரசொலியும் தி.க.வும் எடுக்க வேண்டிய காலம் வந்துவிட்டது. தனித் தமிழ்நாடு கேட்டார் பெரியார், ஆனால் பெரியாரை முழுமையாக ஏற்றுக் கொண்ட திமுக அதிலிருந்து விலகி ஜனநாயகத்துக்காக இந்திய ஒருமைப்பாட்டுக்காக இந்தியா வாழ்க என சொல்லிக் கொண்டிருக்கிறோம்." என ராசா பேசியதை கண்டித்து பாஜகவினர் அவருக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

சீமான் அறிக்கை
இந்த நிலையில் நேற்று நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் "மனு தர்மத்தின் கொடுங்கோன்மையை எடுத்துரைத்து, சூத்திரர் (வேசி மக்கள்) எனும் இழிவை தமிழர்கள் சுமக்கக்கூடாதெனக் கூறியதால், திமுகவின் துணைப்பொதுச்செயலாளர் அண்ணன் ஆ.ராசா அவர்களைக் குறிவைத்து மதவாதிகள் தனிநபர் தாக்குதல் தொடுப்பதும், அவதூறு பரப்புரை செய்வதுமானப் போக்குகளை இனியும் சகித்துக்கொண்டு இருக்க முடியாது.

ஆ.ராசா கருத்து நியாயமானது
பிறப்பின் வழியே பேதம் கற்பிக்கும் வருணாசிரமக் கோட்பாட்டால் விளைந்த சமூக அநீதியை அறச்சீற்றத்தோடு முன்வைத்த அண்ணன் ஆ.ராசாவின் கருத்து மிக நியாயமானது. அதனை நாம் தமிழர் கட்சி முழுமையாக ஆதரிக்கிறது. அக்கருத்துக்குப் பக்கபலமாகத் துணைநிற்கிறது. ஐம்பதாயிரம் ஆண்டுகளுக்கு மூத்தத் தொன்மப்பெருமைகள் பல வாய்ந்த தமிழர் எனும் தேசிய இனத்தின் மக்கள் நாங்கள்." என்று நீண்ட அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

ராஜீவ் காந்தி
இது தொடர்பாக நாம் தமிழர் கட்சி முன்னாள் நிர்வாகியும், தலைமை கழக செய்தி தொடர்பு இணைச் செயலாளருமான ராஜீவ் காந்தி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அதில், "ராசா அண்ணனின் ஆசான் தந்தை பெரியார் சீமானுக்கு அவர் வந்தேறி...! ராசா அண்ணன் அவர்கள் பரப்புகிற திராவிட தத்துவம் சீமானுக்கு வீழ்த்த படவேண்டிய தத்துவம்! சீமானுக்கு இங்கு தேவைபட்டது ஒன்று தான். ராசா அண்ணனின் சாதியும்,பெரியாரின் சாதியும் தான்! தத்துவமும், ஜனநாயகமும் அல்ல!" என்று பதிவிட்டுள்ளார்.















Click it and Unblock the Notifications