ஓபிஎஸ் அணி வெங்காயம்.. நாலு ஆணி ஒரு கோணிதான் இருக்கு! தேர்தல் ஆணையத்தையும் விட்டுவைக்காத ஜெயக்குமார்
சென்னை: ஓபிஎஸ் பக்கம் மூன்று நான்கு பேர் தான் உள்ளதாகவும், கொடியும் இரட்டை இலை சின்னமும் தங்களிடமே இருப்பதாகவும் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்து உள்ளார். ஓபிஎஸ் போலி லெட்டர் பேட் வைத்துக் கொண்டு போலி அரசியல் நடத்தி கொண்டிருப்பதாக குற்றம்சாட்டி உள்ள அவர், இல்லாத ஒரு பதவிக்கு தேர்தல் அதிகாரி கடிதம் எழுதி உள்ளார்.
நேற்று சென்னை ராயபுரத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அதிமுக வாக்குச்சாவடி பொறுப்பாளர்களின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இதில், முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கலந்துகொண்டு ஆலோசனை மேற்கொண்டார். அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், "திமுக ஆட்சியில் ஒப்பந்த ஊழியர்கள் போராடுகிறார்கள். இடைக்கால ஆசிரியர்கள் போராடுகிறார்கள்.

முதலமைச்சர் ஸ்டாலின் வாக்குறுதி
ஆட்சிக்கு வருவதற்கு முன்பு அரசு ஊழியர்களின் நலன்கள் பாதுகாக்கப்படும் என்று கூறினார்கள். ஆட்சிக்கு வந்த பிறகு அனைத்தையும் செய்து தருகிறேன் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார். ஆனால் இடைக்கால ஆசிரியர்கள் போராடி வருகிறார்கள். அதற்காக அமைக்கப்பட்ட குழு ஒரு கண் துடைப்பு குழு. அந்த குழு குறித்து அமைச்சர் துரைமுருகனிடம் கேட்டு பாருங்கள்.

நத்தை வேகத்தில் திமுக அரசு
குழு குறித்து அவர் அழகாக சொல்வார். அது சட்டமன்ற குறிப்பிலே உள்ளது. குழு என்றாலே சுற்ற விடுவது என்று கூறுவார். அவர் கூறுவதைப் போல சுற்றவிடும் வேலையை தான் திமுக செய்துள்ளது. நத்தை வேகத்தில் திமுக அரசு நடந்து வருகிறது. அதற்கு எடுத்துக்காட்டாக ஒப்பந்த ஊழியர்கள் போராடி வருகிறார்கள் அரசு வேலைகள் நிரப்பப்படவில்லை." என்றார்.

ஓபிஎஸ் பக்கம் 4 பேர்தான்
ஓபிஎஸ் உடனான மோதல் குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த ஜெயக்குமார், "எங்களிடம் பட்டா உள்ளது, சிட்டாவும் எங்களிடம் தான் உள்ளது. தேர்தல் ஆணையம் லெட்டர் எப்படி பொருந்தும்? எதிரணி என்று சொன்னால் கூட 20, 30 பேர் வேண்டும். ஓபிஎஸ் பக்கம் மூன்று நான்கு பேர் தான் உள்ளனர்.

சின்னமும் கொடியும்
நாலு ஆணி ஒரு கோனி வைத்து உள்ளவர்கள்தான் ஓபிஎஸ் தரப்பினர். அவர்களிடம் பட்டா சிட்டா உள்ளிட்ட எதுவுமே கிடையாது. கொடி எங்களிடம்தான் உள்ளது. இரட்டை இலை சின்னம் எங்களிடம் தான் உள்ளது. போலி லெட்டர் பேட் வைத்துக் கொண்டு போலி அரசியல் நடத்தி கொண்டிருக்கிறார் ஓபிஎஸ். இல்லாத ஒரு பதவிக்கு தேர்தல் அதிகாரி கடிதம் எழுதியுள்ளார்.

வெங்காயம்
போலியான அரசியலை செய்து வருவது தான் ஓபிஎஸின் வாடிக்கையாக உள்ளது. அவர்களிடம் தொண்டர்கள் ஆதரவு கிடையாது. ஓபிஎஸ் குழுவினர் ஒரு வெங்காயம். வெங்காயத்தை உரித்து பார்த்தால் ஒன்றுமே இருக்காது. அதுதான் அவர்கள். தலைவர்களின் சிலைகளை சேதப்படுத்துவது அநாகரிகமான செயல்.

தலைவர்கள் சிலை சேதம்
இரும்பு கரம் கொண்டு அடக்கி ஒடுக்கி அதை யாராக இருந்தாலும் சட்டத்தின் முன் நிறுத்தி தண்டனை வாங்கி தர வேண்டும். திமுக ஆட்சி தமிழக மக்களுக்கு புளித்து போய்விட்டது. தமிழக மக்கள் மற்றும் அரசு ஊழியர்கள் எப்போது இந்த அரசு மாறும் என்ற எண்ணத்தில் உள்ளனர்." என்று அவர் தெரிவித்து இருக்கிறார்.












Click it and Unblock the Notifications