'தலைசிறந்த கல்வியாளர்' அண்ணா பல்கலை. முன்னாள் துணைவேந்தர் மு. ஆனந்தகிருஷ்ணன் கொரோனாவால் காலமானார்!
சென்னை: அண்ணா பல்கலைக் கழகத்தின் முன்னாள் துணைவேந்தரும் கணினி, இணையத்தில் தமிழ் மொழியை பயன்படுத்துவதற்கான தொழில்நுட்ப நடவடிக்கைகளை மேற்கொண்டவருமான மு. ஆனந்தகிருஷ்ணன் (வயது 92) கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் காலமானார்.
பாரத் பயோடெக் நிறுவனத்தின் 4 கோடி கோவேக்சின் தடுப்பூசிகள் மாயமா? மத்திய அரசு விளக்கம்
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் பிறந்தவர் மு. ஆனந்தகிருஷ்ணன். சென்னை அண்ணா பல்கலைக் கழகத்தில் அவர் பொறியியல் பட்டம் பெற்றார்.
கான்பூர் ஐஐடி
பின்னர் அமெரிக்காவின் மின்னசோட்டா பல்கலைக் கழகத்தில், முதுநிலைப் பொறியியல், முனைவர் பட்டங்களை மு. ஆனந்தகிருஷ்ணன் பெற்றார். மத்திய சாலை ஆராய்ச்சி கழகத்தில் முதுநிலை அறிவியல் ஆய்வாளர், கான்பூர் ஐஐடி தலைவர் ஆகிய பதவிகளை அவர் வகித்தார்.
ஐநா சபை பதவி
அமெரிக்காவின் வாஷிங்டனில் இந்திய தூதரகத்தில் அறிவியல் ஆலோசகர், ஐக்கிய நாடுகள் சபைக்கான அறிவியல், தொழில்நுட்ப மேம்பாட்டு மைய துணை இயக்குநர், ஐ.நா. ஆலோசனை குழு செயலாளர் என உயர் பதவிகளை வகித்து தமிழ்நாட்டுக்கு பெருமை சேர்த்தவர் மு.ஆனந்தகிருஷ்ணன்.
சென்னை அண்ணா பல்கலை. துணைவேந்தர்
சென்னை அண்ணா பல்கலைக் கழகத்தின் துணைவேந்தராக 2 முறை பதவி வகித்தார். 1996-2001-ல் தமிழ்நாடு அரசின் உயர்கல்வி மன்றத்தின் தலைவராகவும் ஆனந்தகிருஷ்ணன் பணியாற்றினார். 2002-ம் ஆண்டு மத்திய அரசின் பத்மஶ்ரீ விருதும் ஆனந்தகிருஷ்ணனுக்கு வழங்கப்பட்டது.
தமிழ் இணைய முன்னோடி
அண்ணா பல்கலைக் கழகத்தின் துணைவேந்தராக ஆனந்தகிருஷ்ணன் பதவி வகித்த போதுதான் நுழைவுத்தேர்வு முறை ஒழிக்கப்பட்டு ஒற்றைச்சாளர முறை கொண்டுவரப்பட்டது. நாட்டில் செமஸ்டர் பாடத்திட்ட முறையை அறிமுகப்படுத்தினார். அத்துடன் கணினி மற்றும் இணையத்தில் தமிழ் மொழியை பயன்படுத்துவதற்கான தொடக்க கால தொழில்நுட்பங்களை உருவாக்கியதில் ஆகச் சிறந்த பங்களிப்பு செய்தவர் முனைவர் ஆனந்த கிருஷ்ணன். தமிழ் இணைய மாநாடுகள், உத்தமம் அமைப்புகள் ஆகியவற்றுக்கான முன்னோடியாகவும் திகழ்ந்தவர் மு. ஆனந்தகிருஷ்ணன்.
தமிழர்களில் தலை சிறந்த கல்வியாளர்
கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் தாக்குதலால் ஆனந்தகிருஷ்ணனுக்கு நுரையீரல் பாதிப்பு ஏற்பட்டது. இதனையடுத்து தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று ஆனந்தகிருஷ்ணன் காலமானார். தமிழகத்தில் தலை சிறந்த கல்வியாளர்களில் ஒருவரான பேராசிரியர் ஆனந்தகிருஷ்ணன் மறைவு தமிழர்களுக்கு மிகப் பெரும் பேரிழப்பாகும்.