திமுகவில் இணைகிறார் ம.நீ.ம முன்னாள் துணை தலைவர் மகேந்திரன்? காத்திருக்கு பெரிய பதவி!
சென்னை: கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து விலகிய மகேந்திரன், திமுகவில் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
Recommended Video
மக்கள் நீதி மய்யம் கட்சியின் துணைத்தலைவர் என்ற, கட்சியின் முக்கிய, பதவியில் இருந்தவர் மகேந்திரன். 2019ஆம் ஆண்டு லோக்சபா தேர்தலின்போது கோவையில் போட்டியிட்டு 1.44 லட்சம் வாக்குகளை பெற்று அனைத்து தரப்பையும் புருவம் உயர்த்த வைத்தவர் மகேந்திரன்.
இந்த நிலையில்தான் சமீபத்தில் நடைபெற்ற தமிழக சட்டசபை தேர்தலின்போது கோவை, சிங்காநல்லூர் தொகுதியில் மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் மகேந்திரன் போட்டியிட்டார். கோவை தெற்கு தொகுதியில் கமல்ஹாசன் போட்டியிட்டார்.

கவனம் ஈர்த்த மகேந்திரன்
கோவையில் மகேந்திரன் வாங்கிய வாக்குகளை பார்த்துதான் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு செல்வாக்கு இருப்பதாக நம்பி கமல்ஹாசன் சென்னையை தவிர்த்து விட்டு கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட்ட தாக தகவல்கள் வெளியாகியிருந்தன. இருப்பினும் இந்த சட்டசபை தேர்தலில் எந்த ஒரு தொகுதியிலும் மக்கள் நீதி மய்யம் வெற்றி பெறவில்லை. இருப்பினும் இந்த முறையும், மகேந்திரன் கவனம் ஈர்க்க தவறவில்லை. ஏனெனில், அதிமுக வென்ற இந்த தொகுதியில், திமுக 2வது இடமும், மகேந்திரன் 3வது இடமும் பிடித்தனர். 36,855 வாக்குகளை அறுவடை செய்தார்.

காலியாகும் கட்சி
கோவை தெற்கு தொகுதியில், வெற்றிக்கு மிக நெருக்கத்தில் வந்தபோதும், பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனிடம் 1358 வாக்குகள் வித்தியாசத்தில், தோல்வியடைந்தார் கமல்ஹாசன். இதையடுத்து அந்த கட்சியின் முக்கிய நிர்வாகிகள் ஒருவர் பின் ஒருவராக கட்சி அடிப்படை உறுப்பினர் பதவிகளை கூட ராஜினாமா செய்து விட்டு கிளம்ப தொடங்கிவிட்டனர்.

தினம் தினம் விலகல்கள்
ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் அடுத்தடுத்து விக்கெட்டுகள் விழுவதைப் போல தினமும் பல விக்கெட்டுகள் மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து விழுகின்றன. இன்று கூட, அந்தக் கட்சியின் பொதுச்செயலாளர்களில் ஒருவராக இருந்த சி.கே.குமரவேல் அடிப்படை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்து விட்டு குட்பை சொல்லிவிட்டார். அவர் திமுகவில் சேரப்போகிறார் என்ற தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கும் நிலையில் திமுக வட்டாரத்தில் இருந்து மற்றொரு தகவல் சுற்றி வருகிறது.

திமுகவில் மகேந்திரன்
அந்த தகவல் இதுதான். விரைவில் திமுகவில் மகேந்திரன் இணைய இருக்கிறார் என்பதுதான் அந்த தகவல். இதுகுறித்து மேலும் விசாரித்தோம். மக்கள் நீதி மய்யம் கட்சியின் துணைத்தலைவர் என்ற அளவுக்கு வளர்ந்தவர் மகேந்திரன். கோவையில் தனிப்பட்ட செல்வாக்கு அவருக்கு அதிகம் இருக்கிறது.

பெரிய பதவி
எனவே தமிழ்நாடு தொழில்துறை வளர்ச்சி கழகத்தின் (TIDCO) சேர்மன் பதவியை மகேந்திரனுக்கு வழங்கலாம் என்று திமுக திட்டமிட்டுள்ளதாம். இதற்கு மகேந்திரன் ஓகே சொல்லிவிட்டதாக மேற்கு மண்டல தகவல்கள் தெரிவிக்கின்றன. எப்போதுமே மேற்கு மண்டலத்தில் அதிமுக ஸ்ட்ராங்காக உள்ளது. போதாத குறைக்கு பாஜகவுக்கு கூட கணிசமாக ஓட்டுக்கள் வருகின்றன. ஆனால் அனைத்து மண்டலமும் கை கொடுத்தாலும் மேற்கு மண்டலம் மட்டும் திமுகவுக்கு எப்போதுமே சிம்மசொப்பனமாக இருந்து வருகிறது.

மேற்கு மண்டல பாலிடிக்ஸ்
இப்போது நடைபெற்ற சட்டசபை தேர்தலில் கூட மேற்கு மண்டலத்தில் மட்டும் திமுகவை விட அதிமுக அதிக வெற்றியை பதிவு செய்துள்ளது. இந்த நிலைமையை மாற்ற வேண்டும் என்று வெகுநாட்களாகவே ஸ்டாலின் தீவிர முயற்சி எடுத்து வருகிறார். மேற்கு மண்டலத்தில் உள்ளூர் தலைவர்களை வளர்த்துவிட வேண்டும் என்பதில் திமுக தலைமை உறுதியாக இருக்கிறது.

சிவசேனாதிபதி வருகை
காளை மாடுகள் ஆராய்ச்சியாளர் சிவசேனாதிபதி, மேற்கு மண்டலத்தில் ஆளுமைமிக்கவராக இருப்பதால் அவரை திமுகவில் சேர்த்துக்கொண்டு தொண்டாமுத்தூர் தொகுதியில் அமைச்சராக இருந்த வேலுமணிக்கு எதிராக சீட்டு கொடுத்த போட்டியிட வைத்தது திமுக தலைமை. சிவ சேனாதிபதி தோல்வியடைந்திருந்தாலும் கூட அவருக்கு ராஜ்யசபா எம்பி உள்ளிட்ட வேறு ஏதாவது உயர் பதவிகளை கொடுத்து மேற்கு மண்டலத்தில் அவரை தொடர்ந்து வலுவான ஒரு உள்ளூர் தலைவராக வளர்த்தெடுக்க வேண்டும் என்பதில் ஸ்டாலின் உறுதியாக இருக்கிறார்.

தொழில்துறையினர் முக்கியம்
அதேபோலத்தான் கோவை மண்டலத்தில் செல்வாக்கு மிக்கவராக இருக்கும் மகேந்திரனுக்கு "டிட்கோ" சேர்மன் பதவியை கொடுத்து திமுகவில் அவரை ஒரு தலைவராக வளர்த்தெடுக்க விரும்புவதாக கூறப்படுகிறது. மேற்கு மண்டலம் தொழில் நிறுவனங்கள் நிறைந்த பகுதியாகும். அங்கு தொழில்களை நடத்தும் தொழிலதிபர்கள், ஓட்டுக்கள் எந்த பக்கம் செல்லும் என்பதை தீர்மானிக்கிறார்கள். ஏற்கனவே மகேந்திரனுக்கு தொழிலதிபர்களிடம் நல்ல பழக்கம் உண்டு. தமிழ்நாடு தொழில்துறை மேம்பாடு கழகத்தில் தலைவராக பதவியேற்றால், பல்வேறு தொழில் அதிபர்களுடன் இன்னும் நெருங்கி பழகுவதற்கான வாய்ப்பு கிடைக்கும்.

திமுகவை நோக்கி ம.நீ.ம நிர்வாகிகள்
மேற்கு மண்டலத்தில், பல்வேறு தொழில் திட்டங்களை அமல்படுத்தி திமுக அரசுக்கு மேற்கு மண்டலத்தில், மகேந்திரன் நற்பெயர் ஈட்டி தருவார், இதெல்லாம் வருங்காலங்களில் திமுகவுக்கு ஆதாயமாக மாறும் என்று கணக்குப் போட்டு காய் நகர்த்தப்படுகிறதா கூறுகிறார்கள். "மகேந்திரன் மட்டுமல்ல, மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து பிரிந்து சென்ற பல்வேறு தலைவர்களும் விரைவில் திமுகவில் இணையப்போவதாக செய்தி வரத்தான் போகிறது.." என்று சொல்லி, கண் சிமிட்டுகிறார்கள், அறிவாலய வட்டாரத்தில்.












Click it and Unblock the Notifications