தைரியமான முதல்வர்.. ஆளுநரை தகுதி நீக்கம் செய்யும் தீர்மானத்தை உடனே நிறைவேற்றணும்.. நாராயணசாமி பேச்சு
ஈரோடு : ஆளுநர் தான் ஒப்புதல் அளித்த உரையை படிக்காமல் தன்னிச்சையாக அவர் உரையை படித்திருப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது என்றும், தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியை தகுதி நீக்கம் செய்ய சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி வலியுறுத்தியுள்ளார்.
தமிழ்நாடு ஆளுநர் ரவி - திமுக அரசு இடையேயான மோதல் நேற்று வெளிப்படையாகவே வெடித்துள்ளது. தமிழ்நாடு சட்டமன்றத்தில் ஆளுநர் ஆற்றிய உரையில் சில பகுதிகளை தவிர்த்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஆளுநர், உரையை முழுமையாக வாசிக்காத நிலையில், அவர் வாசித்த உரை அவைக்குறிப்பில் ஏற்றப்படவில்லை.
இந்நிலையில், இதுகுறித்துப் பேசியுள்ள காங்கிரஸ் மூத்த தலைவர் நாராயணசாமி, கப்பெரிய ஜனநாயக படுகொலை நடந்திருக்கிறது. தமிழக அமைச்சரவையால் அங்கீகரிக்கப்பட்ட உரை ஆளுநருக்கு அனுப்பப்பட்டுள்ளது. அதற்கு அவர் ஒப்புதலும் கொடுத்துள்ளார். அதற்கு பிறகு சட்டமன்றத்தில் கவர்னர் அந்த உரையை திருத்தி தன் விருப்பத்திற்கு ஏற்ப மாற்றி படித்திருப்பது கண்டனத்திற்குரியது என அவர் தெரிவித்துள்ளார்.
பரபரப்பை கிளப்பிய ஆளுநர் விவகாரத்திற்கு மத்தியில்.. இன்று நடைபெறும் திமுக எம்எல்ஏக்கள் கூட்டம்!
வெளியேறிய ஆளுநர்
தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டத்தில் நேற்று பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி, அவரது உரையின் சில பகுதிகளை பேசாமல் தவிர்த்ததை முதல்வர் மு.க.ஸ்டாலின் சுட்டிக்காட்டி, தீர்மானம் கொண்டு வந்தார். எங்களது கொள்கைகளுக்கு மாறாக மட்டுமின்றி, அரசின் கொள்கைகளுக்கே கூட ஆளுநர் மாறாக நடந்து கொண்டு, தமிழக அரசு தயாரித்து, ஆளுநரால் இசைவளிக்கப்பட்டு, அச்சிடப்பட்ட உரையை முழுமையாக படிக்காதது பேரவை மரபுகளை மீறும் செயல், எனவே, அச்சிடப்பட்டு, உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட ஆங்கில உரை மற்றும் பேரவைத் தலைவரால் படிக்கப்பட்ட தமிழ் உரை ஆகியவை மட்டும் அவைக் குறிப்பில் ஏற வேண்டும் என்ற தீர்மானத்தை முன்மொழிந்தார் முதல்வர் ஸ்டாலின். அப்போது அவையில் இருந்து ஆளுநர் பாதியிலேயே வெளியேறினார்.
ஆளுநர் ரவியை தகுதி நீக்கம் செய்ய வேண்டும்
இந்நிலையில், தமிழ்நாடு ஆளுநர், அரசு வழங்கிய உரையை முழுமையாக வாசிக்காததற்கும், சட்டப்பேரவையில் இருந்து பாதியில் வெளியேறியதற்கும் திமுக மட்டுமல்லாது பல்வேறு கட்சிகளும் கண்டனம் தெரிவித்துள்ளன. ஆளுநர் தமிழ்நாட்டிலிருந்து வெளியேற வேண்டும் என்று திமுக கூட்டணி கட்சிகள் முழக்கம் எழுப்பி வருகின்றன. இந்நிலையில், தரம் கெட்ட வேலையை செய்து ஆளுநராக பதவி வகிக்க தகுதியிழந்த ஆளுநர் ரவியை, தகுதி நீக்கம் செய்ய தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் கொண்டு வர வேண்டும் என ஈரோட்டில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி வலியுறுத்தி உள்ளார்.
யாரையும் மதிக்கவில்லை
புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி, ஈரோட்டில் மறைந்த காங்கிரஸ் எம்எல்ஏ திருமகன் ஈவெரா இல்லத்தில் அஞ்சலி செலுத்தி விட்டு, ஈவிகேஎஸ் இளங்கோவன் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், "தமிழ்நாட்டில் மிகப்பெரிய ஜனநாயகப் படுகொலை நடந்திருக்கிறது. அமைச்சரவை அங்கீகரித்து ஆளுநரால் ஒப்புதல் அளிக்கப்பட்ட உரையை சட்டமன்றத்தில் படிக்காமல் ஆளுநர் அந்த உரையை திருத்தி தன் விருப்பத்திற்கு ஏற்ப மாற்றி படித்திருக்கிறார். இது இந்திய அரசியலமைப்பிற்கு எதிரான ஒரு செயல். ஆளுநர் ரவி இந்திய ஜனநாயகத்தை மதிக்கவில்லை, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை மதிக்கவில்லை, இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை மதிக்கவில்லை, அவர் தான்தோன்றித்தனமாக அந்த உரையை படித்திருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது.
முதல்வரின் தைரியம்
சட்டமன்றத்தில் முதலமைச்சர் மிகவும் தைரியமாக தீர்மானம் கொண்டு வந்திருக்கிறார். அவருக்கு பாராட்டுகளை தெரிவிக்கிறேன். உரையை மாற்றி படித்ததற்கு தமிழக சட்டமன்றம் கண்டனம் தெரிவித்திருப்பது பாராட்டுக்குரியது. ஜனநாயக மாண்பை காக்கும் வகையில் முதல்வர் கொண்டு வந்த தீர்மானம் இருக்கிறது. ஆளுநர் தன்னுடைய எல்லையை மீறி செயல்படக்கூடாது. ஆளுநர்கள் மத்திய பாஜக அரசின் கைப்பாவையாக செயல்பட்டு எதிர்மறையான அரசியலை செய்கின்ற வேலையை பார்க்கின்றனர். ஆளுநருக்கு என்று சில அதிகாரம் இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் டாக்டர் அம்பேத்கரால் கொண்டுவரப்பட்டது. அதை ஆளுநர் மீறிச் செயல்படுவது ஜனநாயகத்திற்கு புறம்பானது.
தகுதி அற்றவர்
ஆளுநர் தான் ஒப்புதல் அளித்த உரையை படிக்காமல் தன்னிச்சையாக தன்னுடைய உரையை அவர் படித்திருப்பது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று. இதுவரை இருந்த ஆளுநர்கள் அமைச்சரவையால் அங்கீகரிக்கப்பட்ட, ஒப்புதல் அளித்த உரையைத் தான் படித்தார்களே தவிர இதுபோன்ற, தரம் கெட்ட வேலையை எந்த ஆளுநரும் செய்ததில்லை. இதை ஆளுநர் ரவி செய்திருக்கிறார். ஆளுநராக இருக்கவே அவர் தகுதி அற்றவர். உடனடியாக அவரை தகுதி நீக்கம் செய்வதற்கு தமிழ்நாடு சட்டமன்றம் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்" எனத் தெரிவித்துள்ளார்.