ஏப்ரல்-1 தேதியா இன்னிக்கு..முட்டாள்கள் தினம்! ஓபிஎஸ்ஐ ஒன்னும் பண்ண முடியாது! புரட்டி போட்ட புகழேந்தி
சென்னை : சென்னை அதிமுக அலுவலகத்தில் நடைபெற்றுவரும் ஆலோசனை கூட்டத்தில் பன்னீர்செல்வத்தை கட்சியில் இருந்து நீக்க இருப்பதாக தகவல்கள் வெளியான நிலையில் அவ்வாறு செய்வதற்கு அதிமுக சட்டவிதிகளில் எவ்வித இடமும் இல்லை எனவும், ஓ பன்னீர்செல்வத்தை எடப்பாடி பழனிச்சாமி தரப்பால் எதுவுமே செய்ய முடியாது என அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட முன்னாள் செய்தி தொடர்பாளர் புகழேந்தி உறுதியாக கூறியுள்ளார்.
Recommended Video
அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரம் உச்சகட்டத்தில் இருக்கும் நிலையில் சென்னை ராயப்பேட்டையில், அதிமுக தலைமைக் கழக நிர்வாகிகள் கூட்டம் இன்று அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.
கூட்டத்திற்கு வராத திண்டுக்கல் சீனிவாசன் உள்ளிட்ட 5 பேர்.. காரணம் என்ன? - ஜெயக்குமார் பரபர விளக்கம்!
இந்த கூட்டத்தில் பொதுச்செயலாளராக முன்னிறுத்தப்படும் எடப்பாடி பழனிசாமி, அவைத் தலைவராக நியமனம் செய்யப்பட்டிருக்கு, தமிழ்மகன் உசேன், முன்னாள் அமைச்சர்கள் சிவி சண்முகம், செங்கோட்டையன், ஆர்.பி.உதயகுமார், பா.வளர்மதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
அதிமுக விவகாரம்
அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி இன்று தேர்வு செய்யப்படவும் வாய்ப்புள்ளதாக தகவல் வெளியான நிலையில், இபிஎஸ் பொதுச்செயலாளராக வேண்டும் என தொண்டர்கள் கோஷம் எழுப்பினர். இந்நிலையில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் நான் எந்தவிதமான ஒப்புதலையும் மேற்படி கூட்டத்திற்கு அளிக்கவில்லை. இப்படிப்பட்ட நிலையில், விதியை மீறி கூட்டப்பட்டுள்ள மேற்படி கூட்டம், கட்சியின் சட்டம் மற்றும் விதிகளுக்கு புறம்பானதாகும். இது அதிமுகவையும், அதிமுக தொண்டர்களையும் எவ்விதத்திலும் கட்டுப்படுத்தாது என ஓபிஎஸ் அறிக்கை வெளியிட்டிருந்தார்.
ஓ.பன்னீர்செல்வம்
இந்நிலையில் ஓபிஎஸ் நீக்கம் செய்வதற்கு அதிமுக சட்டவிதிகளை எவ்வித இடமும் இல்லை எனவும் ஓ பன்னீர்செல்வம் எடப்பாடி பழனிச்சாமி தரப்பால் எதுவுமே செய்ய முடியாது என அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட முன்னாள் செய்தி தொடர்பாளர் புகழேந்தி உறுதியாக கூறியுள்ளார். இது தொடர்பாக ஒன் இந்தியா தமிழிடம் பேசிய அவர்," இன்று ஜூன் 27 ஆம் தேதியா இல்லை, ஏப்ரல் 1ஆம் தேதியா என தெரியவில்லை. ஏன் என்றால் ஏப்ரல் 1ஆம் தேதிதான் முட்டாள்கள் தினம். அப்படித்தான் இருக்கிறது எடப்பாடி பழனிசாமியின் செயல்பாடுகள்.
கர்நாடகா புகழேந்தி
காரணம் பல்வேறு கலவரங்களுக்கு இடையே நடந்த அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் அனைத்து தீர்மானங்களையும் நிராகரிப்பதாக சிவி சண்முகம் கூறினார். மேலும் கழக ஒருங்கிணைப்பாளர் இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளும் காலாவதி ஆகிவிட்டதாக கூறியிருந்த நிலையில் அவர்கள் கையெழுத்திட்ட எதுவுமே செல்லாது. அதாவது பொதுக்குழு கூட்டம், மாநிலங்களவை உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் அறிவிப்பு உள்ளிட்ட படிவங்களில் அவர்கள் கையெழுத்திட்ட அனைத்தும் செல்லாது என அறிவிக்கப்படும்.
எதுவுமே செல்லாது
இதனால் சிவி சண்முகம் உள்ளிட்டவர்களின் பதவி பறி போகும் சூழல் உள்ளது. மேலும் அதிமுகவில் உள்ள அடிப்படை உரிமை சட்டங்களின்படி ஒருங்கிணைப்பாளர் இணை ஒருங்கிணைப்பாளர் பதவி 5 ஆண்டுகளுக்கு செல்லத்தக்கது. எனவே ஒருங்கிணைப்பாளர் இணை ஒருங்கிணைப்பாளர் பதவியிலிருந்து இருவரையும் யாராலும் நீக்க முடியாது. மேலும் பொருளாளர் பதவி என்பதும் அதிமுகவின் மிக முக்கிய பதவிகளில் ஒன்று அவ்வளவு எளிதாக அந்த பதவியில் இருந்து யாரையும் நீக்கமுடியாது. அதிமுகவின் அடிப்படை சட்ட விதிகள் கூட தெரியாதவர்கள் எப்படி இந்த ஆலோசனைக் கூட்டத்தை நடத்துகிறார்கள் என்று தெரியவில்லை.
எடப்பாடி பழனிச்சாமி தோல்வி
தனக்கு கீழே இருக்கும் நிர்வாகிகளின் தவறான வழிகாட்டுதலின் பேரில் அடுத்தடுத்து தோல்விகளை சந்தித்து வருகிறார் எடப்பாடி பழனிச்சாமி. தற்போதும் அதே போல் தான் அவருக்கு நிலை ஏற்படும் இதுபோன்ற நடவடிக்கைகள் தொடர்ந்தால் மீண்டும் நான் நீதிமன்றம் செல்வதற்கு தயங்கமாட்டேன் . கட்சியில் எனக்கு பதவியோ அல்லது என்னை மீண்டும் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்றோ கேட்கப்போவதில்லை. என்னைப் பொறுத்தவரை நிறைய தியாகங்கள் செய்து வீணாகிப் போய் விட்டார் பன்னீர்செல்வம் எனறே மக்கள் பேசிக்கொள்கிறார்கள்.
ஓபிஎஸ்க்கு ஆதரவு
அவர் மிகவும் நல்லவர் அவருக்கு ஆதரவாக இருக்க வேண்டும் என்ற நோக்கத்தில் தான் நான் தற்போது அதிமுகவில் பன்னீர்செல்வத்திற்கு ஆதரவாக செயல்பட்டு வருகிறேன். அதே நேரத்தில் சசிகலா அவர்களும் தனித் தனியே பயணம் மேற்கொள்வதை விட்டுவிட்டு அதிமுகவில் உண்மையிலேயே ஒற்றுமை ஏற்பட வேண்டுமென்றால் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக அனைவருமே ஒன்று சேர வேண்டும் என்பதை மறந்துவிடக்கூடாது. என்ன நடந்தாலும் எடப்பாடி பழனிச்சாமி பன்னீர்செல்வத்தை ஒன்றுமே செய்ய முடியாது" என உறுதியாகக் கூறுகிறார் புகழேந்தி.