காங்கிரஸ் கட்சியில் இன்று இணைகிறாரா தமிழக தீயணைப்புத் துறை முன்னாள் டிஜிபி பி.கே.ரவி?
சென்னை: தமிழக தீயணைப்புத் துறை முன்னாள் டிஜிபி பி.கே.ரவி காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
1989 ஆம் ஆண்டு தமிழக பேட்ச்சை சேர்ந்தவர் ஐபிஎஸ் அதிகாரி பி.கே. ரவி. இவர் பீகார் மாநிலத்தை சேர்ந்தவர். மாநில சட்டம் ஒழுங்கு டிஜிபிக்கான ரேஸில் இவரும் இடம்பெற்றிருந்தார்.

மாநில டிஜிபிக்கான ரேஸில் முதலிடத்தில் சஞ்சய் அரோராவும் இரண்டாவது இடத்தில் பி.கே.ரவியும் இருந்தனர். இந்த நிலையில்தான் பி.கே.ரவிக்கு தமிழ்நாடு மின்சார வாரிய லஞ்ச ஒழிப்பு டிஜிபி பதவி ஒதுக்கப்பட்டது.
கடந்தாண்டு தீயணைப்புத் துறை டிஜிபியாக பணியாற்றி வந்த பி.கே.ரவி தமிழக அரசின் உத்தரவின் பேரில் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டார். இதற்கான காரணம் தெரியவில்லை . ஆனால் டிஜிபி அந்தஸ்தில் உள்ள அதிகாரி காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டிருப்பது காவல் துறையினரிடையே சலசலப்பை ஏற்படுத்தியிருந்தது.
இந்த நிலையில் அவர் ஊர்க்காவல் படைத் தலைவராக நியமிக்கப்பட்டிருந்தார். இவரது பதவிக்காலம் முடிவடைய 3 மாதங்கள் உள்ள நிலையில் பி.கே. ரவி விருப்ப ஓய்வு பெற்றுவிட்டார். இவர் தற்போது காங்கிரஸ் கட்சியில் இணையவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. டெல்லியில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே முன்பு பி.கே. ரவி இணைகிறார் என்கிறார்கள்.
இவர் பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர் என்பதால் வரும் 2024 நாடாளுமன்றத் தேர்தலில் பீகார் மாநிலத்தில் லோக்சபா தொகுதியில் போட்டியிடும் வாய்ப்பும் கிடைக்கும் என தெரிகிறது. ஏற்கெனவே தமிழ்நாடு கேடரை சேர்ந்த ஓய்வு பெற்ற டிஜிபி கருணாசாகர் பீகாரில் ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியில் சேர்ந்து 2024 நாடாளுமன்ற தேர்தலை சந்திக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.
பி.கே. ரவி 34 ஆண்டுகள் பணிகாலத்தில் இருந்த போது பல்வேறு முக்கிய வழக்குகளை திறம்பட விசாரித்து குற்றவாளிகளுக்கு தண்டனை வாங்கிக் கொடுத்திருந்தார். தீயணைப்புத் துறை டிஜிபியாக இருந்த போது விபத்தில்லா தீபாவளி என்ற முன்னெடுப்பை எடுத்தார். தமிழகம் முழுவதும் தீவிபத்துகளை தடுக்க 6,673 தீயணைப்பு வீரர்களை நியமித்தார். மேலும் 1,610 விழிப்புணர்வு நிகழ்ச்சிகளையும் பொதுமக்கள் நலனுக்காக நடத்தியுள்ளார்.












Click it and Unblock the Notifications