1- 8 வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு முதல் கேஸ் விலை உயர்வு வரை.. இன்று நடைமுறைக்கு வருபவை என்னென்ன
சென்னை: இன்று நவ. 1ஆம் தேதி கேஸ் விலை தொடங்கி ஊரடங்கில் தளர்வுகள் வரை பல மாற்றங்கள் ஏற்படவுள்ளது. அவை குறித்து விரிவாகப் பார்க்கலாம்.
இந்தியாவில் வரும் நவ. 4ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படவுள்ளது. கொரோனாவால் கடந்த 2 ஆண்டுகளாகவே பல்வேறு தொழில்துறையினரும் மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
அவர்கள் பெரும்பாலும், இந்த பண்டிகை காலத்தையே எதிர்நோக்கிக் காத்திருக்கின்றனர். இந்நிலையில், இன்று நவ. 1ஆம் தேதி கேஸ் விலை தொடங்கி ஊரடங்கில் தளர்வுகள் வரை பல மாற்றங்கள் ஏற்படவுள்ளது.

கேஸ் சிலிண்டர் விலை
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலையைப் பொறுத்து இந்தியாவிலும் பெட்ரோல், டீசல் மற்றும் கேஸ் சிலிண்டர் விலை நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. பெட்ரோல், டீசல் விலைகள் தினசரி மாற்றி அமைக்கப்பட்டு வருகிறது. அதேநேரம் கேஸ் சிலிண்டரின் விலை மாதத்திற்கு இரு முறை மாற்றி அமைக்கப்படுகின்றன. அப்படிக் கடந்த பிப்ரவரி மாதம் முதலே கேஸ் சிலிண்டர் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. அப்போது 700 ரூபாய் என்ற அளவில் இருந்த வீடுகளில் பயன்படுத்தப்படும் கேஸ் சிலிண்டர் விலை பல்வேறு முறை விலை உயர்த்தப்பட்டு, தற்போது 915 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

மீண்டும் உயர வாய்ப்பு
கடந்த 8 மாதத்தில் மட்டும் கேஸ் சிலிண்டர் விலை 215 ரூபாய் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால் நடுத்தர வர்க்கத்தினர் கவலை அடைந்துள்ளனர். இந்நிலையில், சர்வதேச சந்தையில் கடந்த சில நாட்களாகவே கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக இன்றைய தினம் (நவ. 1) பெட்ரோல், டீசல் விலை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. வீடுகளில் பயன்படுத்தும் கேஸ் சிலிண்டர் விலை குறைந்தது 25 ரூபாய் உயர்த்த வாய்ப்புள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

பள்ளிகள்
இந்தியாவில் கடந்த 1.5 ஆண்டுகளாகவே கொரோனா பரவல் காரணமாக ஆன்லைன் மூலமே மாணவர்களுக்குப் பாடங்கள் கற்பிக்கப்பட்டு வந்தது. இதனால் மாணவர்கள் பள்ளிக்குச் செல்ல முடியாத சூழல் ஏற்பட்டது. இது மாணவர்களுக்கு மன ரீதியான பாதிப்பை ஏற்படுத்தும் என எச்சரித்த வல்லுநர்கள், விரைவில் பள்ளிகளைத் திறக்க வேண்டும் என வலியுறுத்தினர். தற்போது கொரோனா கட்டுக்குள் வந்துள்ள நிலையில், பள்ளிகளைத் திறப்பது குறித்து அனைத்து மாநில அரசுகளும் முடிவெடுத்து வருகின்றன. அதன்படி தமிழ்நாட்டில் முதல்கட்டமாக 9 முதல் +2 மாணவர்களுக்குக் கடந்த செப். 1ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட்டன.

பள்ளிகள் திறப்பு
அதைத் தொடர்ந்து இன்று (நவ. 1) முதல் 1 முதல் 8ஆம் வகுப்பு மாணவர்களுக்குப் பள்ளிகளைத் திறக்க தமிழ்நாடு அரசு அனுமதி அளித்திருந்தது. காலை, மாலை எனச் சுழற்சி முறையில் வகுப்புகளை நடத்தவும் கொரோனா நெறிமுறைகளை முறையாகப் பின்பற்றவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. பல மாதங்களுக்குப் பிறகு, பள்ளிகள் திறக்கப்படவுள்ளதால், மாணவர்களும் மீண்டும் வகுப்புகளுக்குத் திரும்ப ஆர்வத்துடன் உள்ளனர்.
Recommended Video

கொரோனா ஊரடங்கு
அதேபோல இன்று முதல் மாநிலத்தில் கொரோனா ஊரடங்கில் கூடுதல் தளர்வுகளும் அமலுக்கு வருகிறது. முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் கூடுதல் தளர்வுகளை அறிவிப்பது தொடர்பாக முடிவு எடுக்கப்பட்டது. அதன்படி தமிழகத்தில் நவம்பர் 1-ஆம் தேதி முதல் திரையரங்குகள் 100 சதவிகித இருக்கைகளுடன் இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.மேலும், டாஸ்மாக் கடைகளுடன் இருக்கும் பார்களை திறக்கவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

கூடுதல் தளர்வுகள்
கடைகள் செயல்படுவதற்கான நேரக் கட்டுப்பாடுகளைத் தளர்த்தியும் தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. பண்டிகை காலத்தைக் கருத்தில் கொண்டு கடைகள், உணவகங்கள் மற்றும் பேக்கரிகள் இரவு 11 மணி வரை திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. மேலும் விளையாட்டுப் போட்டிகள், பயிற்சிகள், நீச்சல் குளங்கள், ஆகியவற்றை திறக்கவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. கேரளாவைத் தவிர இதர மாநிலங்களுக்கு 100% இருக்கைகளுடன் ஏசி மற்றும் சாதாரண பேருந்துகளை இயக்கவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications