அரசியலில் கையை சுட்டுக் கொண்ட ஸ்டார்ஸ்! நடிகர் திலகம் முதல் நாட்டாமை வரை! இத்தனை பேர் இருக்காங்களே!
சென்னை : சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பிறந்தநாள் நேற்று கொண்டாடப்பட்ட நிலையில் அவரது அரசியல் வருகை குறித்த விமர்சனங்களும் தீவிரமாக முன்வைக்கப்பட்டு வருகிறது. ரஜினிகாந்த் கட்சி ஆரம்பிக்காமலேயே கழண்டு கொண்ட நிலையில் பல நடிகர்கள் முதல்வர் கனவில் கட்சி ஆரம்பித்து ஒன்று கூட்டணி அமைத்தோ அல்லது பிற கட்சிகளுடன் தங்கள் கட்சியை இணைத்தோ அரசியல் உலகில் ஜொலிக்க முடியாத நட்சத்திரங்களாக மாறிப் போயினர்.
ஒரு சில படங்களில் வில்லன், அதற்குப் பிறகு ஹீரோ, அப்படியே ஒரு அரசியல் கட்சி, தமிழகத்தின் முதல்வர் இப்படி முதல்வர் கனவில் வலம் வரும் நடிகர்கள் யாரும் இருக்க முடியாது. அதே நேரத்தில் இதற்கு விதிவிலக்காகவும் சில நடிகர்கள் இருக்கிறார்கள்.
தமிழக அரசியலைப் பொறுத்தவரை கிட்டத்தட்ட 60 ஆண்டுகளுக்கும் மேலாக திரை துறையைச் சேர்ந்தவர்களை தமிழகத்தை ஆண்டு வந்திருக்கிறார்கள். அந்த வகையில் திரைப்படங்களுக்கு கதை வசனம் எழுதிய அண்ணா, கதாசிரியராகவும் வசனகர்த்தாவாகவும் இருந்த கருணாநிதி, புரட்சித் தலைவர் என பெயர் வாங்கிய எம்ஜிஆர், புரட்சி நடிகை என பெயர் பெற்ற ஜெயலலிதா மற்றும் அவரது அரசியல் கட்சியைச் சார்ந்தவர்கள் முதல்வர் ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் என இந்த பட்டியல் நீண்டு கொண்டே போகும்.
“டுவிஸ்ட்” வைத்த ரஜினி.. கடிதத்தின் “டாப் ஸ்பாட்டில்” அண்ணாமலை - “அந்த” இடத்தில் உதயநிதி மிஸ்ஸிங்
நடிகர்களின் அரசியல்
இது தவிர இந்த கட்சிகளில் இணைந்து எம்எல்ஏ எம்பி ஏன் மத்திய அமைச்சரானவர்கள் கூட ஏராளமானோர் இருக்கிறார்கள். பிரச்சார பீரங்கிகளாகவும் அவர்கள் செயல்பட்டிருக்கிறார்கள். அந்த வகையில் எஸ்வி சேகர், குமரிமுத்து, ராதாரவி, நெப்போலியன், வாகை சந்திரசேகர், குண்டு கல்யாணம், நடிகைகள் லதா, விந்தியா, அம்பிகா, ராதா என பட்டியலை சொல்லி முடிக்க நேரம் போதாது.
அரசியல் பிரவேசம்
எடுத்த எடுப்பிலேயே முதல்வர் கனவில் கட்சி ஆரம்பித்து கையை சுட்டுக் கொண்ட நடிகர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். நடிகர் திலகம் சிவாஜி கணேசன் தொடங்கி தற்போது முதல்வர் கனவில் வலம் வரும் விஜய் வரை ஏராளமானோர் இருக்கிறார்கள். அவர்களைப் பற்றிய ஒரு சிறு பார்வையை தான் தற்போது பார்க்கப் போகிறோம். திமுக ஆட்சி அமைக்க வெகுவாக உதவியவர் புரட்சி நடிகர் என பெயர் பெற்ற எம்ஜிஆர். அதன் பிறகு கருத்து வேறுபாட்டால் தனிக்கட்சி ஆரம்பித்த அவர் அதன் பிறகு அசைக்க முடியாத சக்தியாக வலம் வந்தார். ஆனால் அவருக்கு பிறகாக கட்சி ஆரம்பித்த பல நடிகர்கள் அரசியலில் இருந்தே காணாமல் போய்விட்டனர்.
விஜயகாந்த்
குறிப்பிடத் தகுந்த வெற்றியைப் பெற்றவர் என்றால் கேப்டன் என அன்போடு அழைக்கப்படும் விஜயகாந்த் தான். அவர் ஆரம்பித்த தேசிய முற்போக்கு திராவிட கழகம் தமிழகத்தின் மூன்றாவது பெரிய கட்சியாக உயர்ந்ததோடு விஜயகாந்தை எதிர்க்கட்சி தலைவர் பதவிகளும் அமர்த்தியது. ஆனால் மற்ற நடிகர்கள் யாரும் அந்த அளவுக்கு வெற்றியை, ஏன் அதில் பாதியை கூட பெறவில்லை என்பதுதான் உண்மை. அதில் சிவாஜி, பாக்கியராஜ், டி ராஜேந்தர், கார்த்திக், கருணாஸ் என பலர் இருக்கிறார்கள்.
நடிகர் திலகம் சிவாஜி கணேசன்
எம்ஜிஆர் மறைவுக்குப் பிறகு தமிழ் திரை உலகில் தனி ஜாம்பவானாக வலம் வந்த சிவாஜி கணேசன், இந்திரா காங்கிரஸில் தனக்கு உரிய முக்கியத்துவம் தரப்படவில்லை என ஆத்திரத்தில் இருந்த நிலையில் சில ஆதரவாளர்கள் உசுப்பேற்ற 1988 ஆம் ஆண்டில் 'தமிழக முன்னேற்ற முன்னணி' என்ற கட்சியை தொடங்கினார். அப்போது அதிமுகவில் பிரபலமாக இருந்த சிலர் சிவாஜி கணேசனுக்கு பின்னால் அணிவகுத்தனர். அவர்களின் பேச்சை கேட்டு கட்சியை ஆரம்பித்த சிவாஜி கணேசன் மேல்மட்ட அளவிலேயே அரசியல் செய்து வந்ததால் தொண்டர்களை கவனிக்க தவறினார். இதனால் அவரது கட்சி சார்பில் போட்டியிட்ட அனைவரும் தோல்வியையே தழுவினர். ஜனதா தளம் கட்சியும் கை கொடுக்காத நிலையில் அதன் பிறகு மரணம் வரை அரசியல் பக்கம் தலை வைத்துக் கூட பார்க்கவில்லை சிவாஜி கணேசன். இப்படி அரசியல் குறித்து முதலில் அடி வாங்கிய நடிகர் என்றால் அது நடிகர் திலகம் சிவாஜி கணேசன் தான்.
பாக்கியராஜ்
எம்ஜிஆர் உயிரோடு இருந்தபோது தனது சினிமா வாரிசு என அவராலேயே பிரகடனப்படுத்தப்பட்ட பாக்கியராஜ். அவரது மறைவுக்கு பிறகு எம்ஜிஆர் மக்கள் முன்னேற்ற கழகம் என்ற பெயரில் கட்சியை ஆரம்பித்தார். ஆனால் கட்சி ஆரம்பித்த அவருக்கே அதன் கொள்கைகள் என்ன என்பது தெரியாது என்கின்றனர் அந்த கால அரசியல்வாதிகள். எம்ஜிஆரின் வாரிசு என்ற பிம்பம் அவருக்கு உதவாத நிலையில் அதிமுகவினர் கூட அவருக்கு ஆதரவு அளிக்கவில்லை. இதனால் ஒரு கட்டத்தில் திமுகவோடு இணைத்து விட்டார்.
டி.ராஜேந்தர்
சிவாஜி காலத்திலும் பாக்கியராஜ் காலத்திலும் ஏன் ரஜினி காலத்தில் கூட முன்னணி நடிகராக வலம் வந்தவர் டி ராஜேந்தர். பெண்களை தொடாமல் கண்ணியமாக நடிப்பது தாய் தங்கை அக்கா சென்டிமென்ட் படங்கள் அவருக்கு ஆயிரக்கணக்கான பெண் ரசிகர்களை பெற்றுக் கொடுத்தது. பல திரைப்படங்களில் தன்னை கலைஞரின் ரசிகனாகவே காட்டிக் கொண்டார் டி ராஜேந்தர். அப்போது சட்டமன்ற உறுப்பினராகவும் பணியாற்றி இருக்கிறார். தொடர்ந்து திமுகவிலிருந்து விலகிய அவர் 2005ஆம் ஆண்டில் அனைத்திந்திய லட்சிய திராவிட முன்னேற்றக் கழகம் என்ற பெயரில் கட்சி தொடங்கினார். ஆனால் அதற்குப் பிறகு அவரது கட்சியினர் வார்டு உறுப்பினராக கூட தேர்ந்தெடுக்கப்படவில்லை என்பது சோதனையும் சோதனை. தற்போது வரை அந்த கட்சியை அவர் நடத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
கார்த்திக்
மற்ற நடிகர்கள் கூட சீரியஸ் அரசியல் செய்து வந்த நிலையில் திடீரென நானும் அரசியலில் குதிக்கிறேன் எனக் குறித்து காமெடி அரசியல் செய்தவர் நவரச நாயகன் என அழைக்கப்பட்ட கார்த்திக். முதலில் ஃபார்வர்டு பிளாக் கட்சியில் இணைந்து தமிழக தலைவராக பொறுப்பேற்ற அவர் தொடர்ந்து குழப்பமான முடிவுகளை எடுத்து வந்தார். பின்னர் அகில இந்திய நாடாளும் மக்கள் கட்சி என்ற தனிக்கட்சி, கூட்டணி, பெயர் மாற்றம், கொடி மாற்றம் என அடுத்தடுத்து அவர் செய்த அரசியல் அட்ராசிட்டிகள் அதிகம், திரையுலகில் நவரச நாயகனாக ஏற்றுக் கொண்ட அவரை அரசியலில் காமெடியனாக கூட மக்கள் ஏற்றுக் கொள்ளவில்லை என்பதுதான் உண்மை.
கமல்ஹாசன்
சிவாஜி, பாக்கியராஜ், டி ராஜேந்தர், கார்த்திக் வரிசையில் காமெடி அரசியல் செய்யாமல் சீரியஸ் அரசியல் செய்து வருபவர் உலக நாயகன் கமலஹாசன். நீண்டகாலமாக அரசியல் கருத்துக்களை தனது திரைப்படத்தில் தெரிவித்து வந்தவர் திடீரென அரசியலில் குதிப்பதாக அறிவித்து மதுரையில் இருந்து தனது அரசியலை துவக்கினார். மக்கள் நீதி மய்யம் என்ற அவரைக் கட்சிப் பெயரின் அர்த்தம் புரிவதற்கு பல நாட்கள் ஆனது. தொடர்ந்து வித்தியாசமான அரசியலை முன்னெடுக்கிறேன் என்ற பெயரில் பொதுஜனத்தோடு பொருந்தி போகாத அவரது கொள்கை பேச்சுகளால் பெரிய அளவில் மாற்றத்தை கொண்டு வர முடியவில்லை. அதே நேரத்தில் சென்னை கோவை உள்ளிட்ட ஏ சென்டர் பகுதிகளில் ஓரளவு வாக்குகள் அவருக்கு கிடைத்தது நம்பிக்கையை ஏற்படுத்தினாலும் இன்னும் தன்னை நிரூபிக்க அரசியல் களத்தில் கமல்ஹாசன் போராடி வருகிறார் என்று தான் கூற வேண்டும். இன்னமும் கூட பல இடங்களில் அவரது கட்சி போர்ட் கூட இல்லை என்பது தான் நிதர்சனமான உண்மை. வரும் தேர்தல்களை மக்கள் மனங்களை வென்று ஆட்சி கட்டிலில் கமல்ஹாசன் அமர்வாரா என்பதை காலம்தான் முடிவு செய்ய வேண்டும்.
கருணாஸ்
நாட்டுப்புற பாடல் இசை மக்கள் கலைஞனாக தனது பயணத்தை ஆரம்பித்து காமெடியனாகவும் நாயகனாகவும் சினிமா துறையில் போராடி வென்றவர் கருணாஸ். மண் சார்ந்த நாயகனாக திண்டுக்கல் சாரதி படத்தில் மக்கள் அவரை ஏற்றுக் கொண்ட நிலையில் அதற்குப் பிறகான பாடங்கள் அவருக்கு தோல்வி முகத்தை தந்தது. இதையடுத்து தனது வழக்கமான பாணியை கடைபிடித்தவர் முக்குலத்தோர் புலிப்படை என்ற அமைப்பை ஆரம்பித்து அரசியல் பயணத்தை தொடங்கினார். அதன்பிறகு அதிமுகவோடு கூட்டணி அமைத்து எம்எல்ஏவாகவும் உயர்ந்தார். அதன்பிறகான தேர்தல்களில் கருணாஸின் கட்சி கிட்டத்தட்ட காணாமல் போய்விட்டது என்று தான் கூற வேண்டும். களத்தில் உயிர்ப்போடு இருந்தாலும் தேர்தல் அரசியலைப் பொறுத்தவரை கருணாஸின் கட்சி அவருக்கு கை கொடுக்கவில்லை வரும் தேர்தல்களை அவரது யூகங்களை பொறுத்து தான் வெற்றி தோல்வி அமையும்.
சரத்குமார்
மற்ற நடிகர்களைப் போலவே வில்லனாக தொடங்கி நாயகனாக தனது திரைப்பயணத்தை வெற்றிகரமாக அமைத்துக் கொண்டவர் சரத்குமார். மக்கள் அளவில் நாயகனாக அனைத்து தளங்களிலும் அவருக்கு ரசிகர்கள் பட்டாளமும் இருந்தது. விக்ரமன் கேஎஸ் ரவிக்குமார் உள்ளிட்டோரின் இயக்கத்தில் அவர் நடித்த படங்கள் பட்டிதொட்டியெங்கும் அவரை கொண்டு சேர்த்தது. திமுக ஆதரவாளராக பயணித்து எம்எல்ஏவாகவும் இருந்திருக்கிறார். அவர் ஆரம்பித்த சமத்துவ மக்கள் கட்சி அதிமுக கூட்டணியில் இடம்பெற்று சட்டமன்றத்திற்குள் நுழைந்தார். ஆனாலும் தற்போது எனக்கு ஓட்டு போட மாட்டேங்கிறீங்களே என அவரே சொல்லும் வகையில் தான் இருக்கிறது. இதிலிருந்தே அவரது கட்சியின் நிலை அனைவருக்கும் புரியும்.
வருங்கால கட்சிகள்
இதுவரை நாம் பார்த்தது ஓரளவு மக்களுக்கு முகம் தெரிந்த அரசியல் கட்சிகள் தான். இது தவிர ஏராளமானோர் மூலை முடுக்குகள் எல்லாம் அரசியல் கட்சி என்ற பெயரில் ஆரம்பித்து அட்ராசிட்டி செய்து கொண்டிருக்கின்றனர். இது தவிர விஜய், விஷால், லெஜன்ட் சரவணன் என வருங்கால அரசியல் கட்சிகளின் பட்டியலும் நீண்டு கொண்டே தான் செல்கிறது. அவர்களாவது வரலாறு படைப்பார்களா அல்லது பத்தோடு பதினொன்றாக போய் விடுவார்களா என்பது காலத்தின் கையில் தான் உள்ளது.