2 நடிகர்களிடம் சென்றார் அண்ணாமலை.. அப்புறம்தான் பாஜக.. விடாமல் அட்டாக் செய்யும் காயத்ரி ரகுராம்!
சென்னை : அண்ணாமலை ஐபிஎஸ் பணியை ராஜினாமா செய்தபிறகு நேரடியாக பாஜக உறுப்பினராகவில்லை. அவர் இரண்டு நடிகர்களிடம் சென்றார். அதன்பிறகு பதவி வழங்கப்படும் என உறுதியளித்த பிறகுதான் பாஜகவுக்கு வந்தார் என பாஜகவில் இருந்து விலகிய காயத்ரி ரகுராம் தெரிவித்துள்ளார்.
அண்ணாமலை உடனான மோதலைத் தொடர்ந்து, அவரை மறைமுகமாக விமர்சித்ததால் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட காயத்ரி ரகுராம் தொடர்ச்சியாக அண்ணாமலையை நேரடியாகவே அட்டாக் செய்து வருகிறார்.
இந்நிலையில், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அண்ணாமலை போட்டியிடத் தயாரா என சவால் விடுத்தார். எம்எல்ஏவாக மாநிலத்திற்கு சேவை செய்ய விரும்பவில்லையா? தேசபக்தியோடு எம்.பியாக மட்டும் தான் விருப்பமா? தமிழ்நாடு மீது பக்தி இல்லையா? என சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளார்.
புலி பசித்தாலும் புல்லை தின்னாது! இறங்கி போன எடப்பாடி.. ஏன்? செம ட்விஸ்ட்! அட அண்ணாமலை வேற இருக்காரே
காயத்ரி ரகுராம்
பாஜகவில் அண்டை மாநில மற்றும் வெளிநாட்டு தமிழ் வளர்ச்சிப் பிரிவின் தலைவராகச் செயல்பட்டு வந்த காயத்ரி ரகுராம், பாஜகவில் சூர்யா சிவா, டெய்சி சரண் விவகாரத்தில் ட்விட்டரில் அண்ணாமலையை மறைமுகமாக விமர்சித்ததற்காக கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டார். மாநிலத் தலைவர் அண்ணாமலை காயத்ரியை 6 மாதங்களுக்கு இடைநீக்கம் செய்து உத்தரவிட்டார். தொடர்ந்து அண்ணாமலைக்கு எதிராகவும் அவர் பெண்களை குறிவைத்து அவதூறு கிளப்புவதற்காகவே வார் ரூம் வைத்திருப்பதாகவும் ட்விட்டரில் விமர்சித்து வருகிறார் காயத்ரி.
நாள்தோறும் அட்டாக்
அண்ணாமலையின் ஆதரவாளர்கள், காயத்ரியின் ட்விட்டர் பதிவுகளில் அவரை கடுமையாகத் தாக்கிப் பதிவிட்டு வருகின்றனனர். இதையடுத்து, பாஜகவில் இருந்து விலகுவதாகவும் சமீபத்தில் அறிவித்தார் காயத்ரி. அண்மையில் கட்சியில் இருந்து காயத்ரி ரகுராமை அதிரடியாக நீக்கினார் அண்ணாமலை. காயத்ரி ரகுராம் தினந்தோறும் அண்ணாமலையை கடுமையாக விமர்சித்து ட்விட்டரில் பதிவிடுவதை வாடிக்கையாக வைத்துள்ளார்.
அண்ணாமலைக்கு சவால்
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அண்ணாமலை போட்டியிட சவால் விடுகிறேன். நான் உங்களை எதிர்த்து நிற்பேன். உங்கள் நாடகம் மற்றும் போலி விளம்பரங்கள் டெல்லியில் வெளிவரட்டும். சவாலை ஏற்றுக்கொள்வீர்களா? என்று கடந்த 15ஆம் தேதி அன்று கேட்டிருந்தார் காயத்ரி ரகுராம். இந்நிலையில் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் நேற்று அறிவித்த நிலையில், மீண்டும் அண்ணாமலைக்கு சவால் விடுத்திருக்கிறார் காயத்ரி.
இரண்டு நடிகர்களிடம்
காயத்ரி ரகுராம் இன்று வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவுகளில், "வார்ரூம் என்பது அண்ணாமலையை பெருமை பீத்தல் செய்தது மகிழ்விப்பது மட்டும்தான். அவர்கள் பாஜகவின் சாதனைகளையோ, மோடியின் சாதனைகளையோ விளம்பரப்படுத்தவில்லை" எனத் தெரிவித்துள்ளார். மேலும், "தனக்கென தனி அரசியல் கட்சி அதுவே ஆரம்பத்திலிருந்தே இலக்கு. தேசிய முக்கிய பணியான ஐபிஎஸ் பதவியை ராஜினாமா செய்த பிறகு அண்ணாமலை நேரடியாக பாஜக உறுப்பினராகவில்லை. அவர் இரண்டு நடிகர்களிடம் சென்றார். அதன் பிறகு பதவி உறுதியளித்த பிறகுதான் பாஜகவுக்கு வந்தார். இது அனைவருக்கும் தெரியும்" என பதிவு செய்துள்ளார்.
இடைத்தேர்தலில் போட்டி
மேலும், "அண்ணாமலை நீங்கள் தமிழ்நாட்டில் மிகவும் பெரிய தலைவர். ஓப்டிக்ஸ்படி உங்களுக்கு நிறைய ரசிகர்கள் உள்ளனர். தமிழகத்தில் எங்கு போட்டியிட்டாலும் வெற்றி பெறலாம். ஈரோடு இடைத்தேர்தலில் நீங்கள் ஏன் என்னை எதிர்த்து போட்டியிட்டு வெற்றி பெறக்கூடாது? இடைத்தேர்தலில் கூட்டணியில் உள்ளீர்களா? அல்லது தனித்து போட்டியிடுகிறீர்களா? அல்லது சுயேச்சை வேட்பாளராக போட்டியிட முடியுமா? இடைத்தேர்தலுக்காக குழுவை அமைத்துள்ளீர்களா? நீங்கள் போட்டியிடுகிறீர்களா இல்லையா என்பதை ஏன் அறிவிக்கக்கூடாது.. அதற்கு ஏன் ஒரு குழு?" என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
எம்.எல்.ஏ ஆக மாட்டீர்களா?
பாஜக சார்பில் வேறொருவர் போட்டியிட உள்ளதாக வெளியான தகவலைக் குறிப்பிட்டு ட்விட்டரில் பகிர்ந்துள்ள காயத்ரி, "அப்போ அண்ணாமலை போட்டியிடவில்லையா? எம்.பி தேர்தலுக்கு மட்டும் தேச பக்தியா? எம்எல்ஏவாக மாநிலத்திற்கு சேவை செய்ய விரும்பவில்லையா? தமிழ்நாட்டு மீது பக்தி இல்லையா? 5 நிமிடத்தில் ஆட்சியை மாற்றிவிடுவார். அவர் தமிழ்நாட்டின் முதல்வராக முடியும். நீங்கள் போட்டியிடவில்லை என்றால் உங்கள் வார்ரூம் வருத்தமாக இருக்கும். உங்களை ஹீரோ அண்ணாமலையாக பார்க்கிறார்கள். பாஜகவுக்காக இல்லாவிட்டாலும் வார் ரூமுக்காக நீங்கள் போட்டியிட வேண்டும்." எனக் குறிப்பிட்டுள்ளார்.