இன்று நான்.. நாளை யாரோ? பாஜக தொண்டர்களை நினைத்தால் தான்.. வானதி கருத்துக்கு காயத்ரி ரகுராம் பதில்
சென்னை: தாமதிக்கப்பட்ட நீதி மறுக்கப்பட்ட நீதி என்றும், சூர்யா சிவா விவகாரத்தில் விசாரணை நடத்துவது தொடர்பாக தனக்கு எந்தவிதமான நோட்டீசும் வழங்கப்படவில்லை என காயத்ரி ரகுராம் தெரிவித்து உள்ளார்.
பாஜகவை சேர்ந்த சிறுபான்மை அணி தலைவராக இருப்பவர் டெய்சி. இவருக்கு பாஜக ஓபிசி பிரிவு மாநில பொதுச்செயலாளர் சூர்யா சிவாவுக்கும் இடையிலான தொலைபேசி உரையாடல் வெளியானது.
அந்த ஆடியோவில், டெய்சியை ஆபாசமான, தகாத வார்த்தைகளில் இழிவாக பேசிய சூர்யா சிவா, அவருக்கு கொலை மிரட்டல் விடுத்தது கட்சிக்கு உள்ளேயும் வெளியிடும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
தொகுப்பு ஊதியத்தில் கணினி உதவியாளர்கள்.. உடனடியாக பணி நிரந்தரம் செய்ய வேண்டும் - சீமான் கோரிக்கை
பரபரப்பு ஆடியோ
பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, பாஜக அமைப்புச் செயலாளர் கேசவ விநாயகம் உள்ளிட்ட பலரது பெயர்களை திருச்சி சூர்யா டெய்சியிடம் பேசும் தொலைபேசி உரையாடலில் கூறி இருந்தார்.
காயத்ரி ரகுராம் கண்டனம்
இந்த ஆடியோ வெளியாகி பல்வேறு தரப்பிலிருந்து கடும் விமர்சனங்களை எதிர்கொண்டது. குறிப்பாக பாஜகவை சேர்ந்த நடிகை காயத்ரி ரகுராம் திருச்சி சூர்யாவை விமர்சித்ததுடன் அவருக்கு பதவி வழங்கியது பற்றியும் கேள்வி எழுப்பி இருந்தார். "சொந்த கட்சிப் பெண்களை ஏன் தாக்க வேண்டும்? இந்த ஹைனாக்களுக்கு அழகு பார்க்க கட்சியில் மாநில பதவி கொடுத்தது மிகப்பெரிய தவறு." என்று அவர் குறிப்பிட்டு இருந்தார்.
அண்ணாமலை நடவடிக்கை
இதனை தொடர்ந்து சூர்யா சிவா மீது கட்சித் தலைமை நடவடிக்கை எடுக்க வேண்டும் என பலர் மாநில பாஜக தலைவர் அண்ணாமலைக்கு அழுத்தம் கொடுத்தனர். ஆனால், காயத்ரி ரகுராம் கட்சிக் கட்டுப்பாட்டை மீறி செயல்படுவதால் ஆறு மாத காலம் நீக்கப்படுவதாக அறிவித்தார் அண்ணாமலை. அத்துடன், சூர்யா சிவா கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்க வேண்டாம் என்று அறிவுறுத்துகிறோம் என உத்தரவிட்டார்.
அக்கா - தம்பி உறவு
இதையடுத்து பாஜக தலைமை டெய்சி சூர்யா சிவா ஆகியோரை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தியது. அதன் பின்னர் திருச்சி சூர்யாவும் டெய்சியும் ஒன்றாக கமலாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது, பேசிய டெய்சி "எனக்கு திருச்சி சூர்யா தம்பியை போன்றவர். எங்களுக்கு இடையே அக்கா - தங்கை போன்ற உறவு உள்ளது." என்றார்.
வானதி சீனிவாசன்
இந்த நிலையில் நேற்று முந்தினம் கோவையில் செய்தியாளர்களை சந்தித்த பாஜக எம்.எல்.ஏவும், தேசிய மகளிரணி தலைவருமான வானதி சீனிவாசனிடம் காயத்ரி ரகுராம் விவகாரம் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினார்கள். இதற்கு பதிலளித்த அவர், "காயத்ரி ரகுராமுக்கு ஏதேனும் சிக்கல்கள் அவருக்கு இருந்திருந்தால், கட்சியில் இருப்பவர்களிடம் அது குறித்து அவர் தெரிவித்து நடவடிக்கை எடுத்திருக்கலாம்." என்றார்.
அண்ணாமலை விளக்கம்
இதுபோல் தனியார் ஆங்கில இதழுக்கு பேட்டியளித்த அவரிடம் சூர்யா சிவாவின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு பறிக்கப்படாத நிலையில் காயத்ரி ரகுராம் மட்டும் 6 மாதங்கள் அடிப்படை உறுப்பினரிலிருந்து நீக்கப்பட்டது ஏன் என்று கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த வானதி, "காயத்ரி ரகுராம் விசயத்தில் எதுவும் செய்ய முடியாது என்று அண்ணாமலை கூறிவிட்டார். கட்சி விதிகளை மீறிவிட்டதால் இது ஏற்கனவே எடுக்கப்பட்ட முடிவு எனவும் கூறினார்." என்றார்.
காயத்ரி கருத்து
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள காயத்ரி ரகுராம், "இதில் எனக்கு புரியாத விசயம் என்னவென்றால், எனக்கு எந்த நோட்டீசும் வரவில்லை. இது சட்டத்துக்கு எதிரானது. விசாரணையும் நடத்தவில்லை. தாமதிக்க்கப்பட்ட நீதி மறுக்கப்பட்ட நீதி. அவசரமாக வழங்கப்படும் நீதி புதைக்கப்படும் நீதி. இன்று நான். நாளை யாரோ. இதை வெளியில் சொல்ல முடியாத மற்ற தொண்டர்களை நினைத்துப் பார்க்கிறேன். உங்கள் அனைவருக்கும் என் ஆதரவு.