பின்னுக்கு சென்ற வாரிசு, துணிவு! 1.4 லட்சம் ட்வீட்களுடன் #GetOutRavi ஹேஷ்டேக் இந்திய அளவில் முதலிடம்
சென்னை: "தமிழ்நாடு" பெயர் குறித்த சர்ச்சையை கருத்தை ஆளுநர் ஆர்.என்.ரவியை கண்டித்து ட்விட்டரில் கடந்த சில நாட்களாகவே பதிவுகள் வெளியிடப்பட்டு வரும் நிலையில், நேற்றை சட்டசபை நிகழ்வுக்கு பிறகு அவருக்கு எதிராக #GetOutRavi என்ற ட்விட்டரில் பதிவிடப்பட்ட ஹேஷ்டேக்குகளின் எண்ணிக்கை 1.4 லட்சத்தை தாண்டி 2 வது நாளாக இந்திய அளவில் அது முதலிடத்தில் இருந்து வருகிறது.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களான விஜய் மற்றும் அஜித் ஆகியோரது திரைப்படங்கள் ஒன்றாக வெளியாக உள்ளன. இது தொடர்பாக பேச்சுக்களும், ரசிகர்களுக்கு இடையிலான வாக்குவாதங்களும் கடந்த சில வாரங்களாக ட்விட்டரை ஆக்கிரமித்து வருகின்றன.
தங்களுக்கு பிடித்தமான நடிகர்களையும் அவர்கள் நடித்துள்ள திரைப்படங்களின் பெயர்களையும் வைத்து பாடல்கள், டிரைலர்கள் வெளியாகும் நேரத்தில் ரசிகர்கள் ஹேஷ்டேக்கை டிரெண்ட் செய்து வந்தார்கள்.
கொதித்தெழுந்த மாணவர்கள்.. ஆளுநரை திரும்பப்பெற வெடித்த போராட்டம்! சென்னையில் கல்லூரி முன் முழக்கம்
ஹேஷ்டேக்கள் டிரெண்ட்
கடந்த சில வாரங்களாகவே இந்த ஹேஷ்டேக்குகள் மாறி மாறி தமிழ்நாடு, இந்திய அளவில் முன்னிலை வகித்து வந்தன. நாளை துணிவு மற்றும் வாரிசு ஆகிய திரைப்படங்கள் வெளியாக இருக்கும் சூழலில் இந்த ஹேஷ்டேக்குகள்தான் அடுத்த சில நாட்கள் ட்விட்டரை ஆக்கிரமித்து இருக்கும் என்றே பலரால் எதிர்பார்க்கப்பட்டது.
புரட்டிப்போட்ட எதிர்ப்பு
ஆனால், அனைவரது ஒட்டுமொத்த எதிர்பார்ப்புகளையும் மொத்தமாக புரட்டிப்போட்டுவிட்டது தமிழ்நாடு சட்டசபையில் நேற்று நடந்த ஒரு சம்பவம். தமிழ்நாட்டை "தமிழகம்" என்று உச்சரிக்க வேண்டும் என்று கடந்த சில நாட்களுக்கு முன்பாக என ஆளுநர் ஆர்.என்.ரவி பேசியதற்கு எதிர்ப்பு எழுந்த நிலையில் இன்று திமுக கூட்டணி கட்சிகள் சட்டப்பேரவையில் அவருக்கு எதிராக முழக்கமிட்டு ஆளுநர் உரையை புறக்கணித்தனர்.
ஆர்.என்.ரவி பேச்சு
மறுபக்கம் கூட்டத்தொடரில் பேசத் தொடங்கிய ஆளுநர் ஆர்.என்.ரவி, "தமிழ்நாடு அரசின் நோக்கம், செயல்பாடுகள், வளர்ச்சித் திட்டங்கள் திட்டங்கள் குறித்து பேசினார். ஆனால், ஆளுநர் ஆர்.என்.ரவியின் உரையில், தமிழ்நாடு அரசு தயாரித்து அச்சிட்டு வழங்கியதில் அரசு குறிப்பிட்டு இருந்த தகவல்களை ஆளுநர் ஆர்.என்.ரவி வாசிக்காமல் தவிர்த்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
வார்த்தைகள் இல்லை
சமூகநீதி, சுயமரியாதை, சமத்துவம், பெண்ணுரிமை, மதநல்லிணக்கம், தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர், பெருந்தலைவர் காமராசர், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர், தமிழ்நாடு, திராவிட மாடல் ஆகிய வார்த்தைகளை ஆளுநர் ஆர்.என்.ரவி தவிர்த்தார். உடனே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுந்து ஆளுநர் ஆர்.என்.ரவி அரசின் உரையை படிக்காதது தவறு என்று கண்டித்தார்.
வெளியேறிய ஆளுநர் ரவி
ஆளுநர் ஆர்.என்.ரவி வாசித்த உரை அவைக்குறிப்பில் இடம்பெறக்கூடாது என்று அரசு கொடுத்த உரை மட்டுமே அவைக்குறிப்பில் இருக்க வேண்டும் எனவும் தீர்மானம் கொண்டு வந்து சட்டசபையில் உடனடியாக நிறைவேற்றப்பட்டது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டசபையில் தன் முன்பே கண்டனம் தெரிவித்ததால் தேசிய கீதம் ஒலிப்பதற்கு முன் ஆளுநர் ஆர்.என்.ரவி அவையில் இருந்து வெளியேறினார்.
கெட் அவுட் ரவி
ஆளுநரின் இந்த செயல் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருப்பதுடன் தேசிய அளவில் விவாதத்தை கிளப்பி இருக்கிறது. இந்த நிலையில் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக ட்விட்டரில் பலரும் ஹேஷ்டேக்குகளை டிரெண்ட் செய்து வருகிறார்கள். #GetOutRavi ஹேஷ்டேக்குகளின் எண்ணிக்கை 1.4 லட்சத்தை தாண்டி 2 வது நாளாக இந்திய அளவில் அது முதலிடத்தில் இருந்து வருகிறது.