திருச்சி எஸ்எஸ்ஐ பூமிநாதனை ஏன் கொலை செய்தேன்?.. ஆடு திருடிய மணிகண்டன் பரபரப்பு வாக்குமூலம்!
சென்னை: திருச்சி நவல்பட்டு எஸ்எஸ்ஐ பூமிநாதனை கொலை செய்தது எப்படி என்பது குறித்து கைது செய்யப்பட்டுள்ள தஞ்சை மணிகண்டன் வாக்குமூலம் அளித்துள்ளார்.
திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே நவல்பட்டு காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் பூமிநாதன் கடந்த இரு தினங்களுக்கு முன்பு இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அவ்வழியாக சென்ற ஆடுகளுடன் வந்த இரு சக்கர வாகனத்தை தடுத்து நிறுத்த முயன்றபோது அவர்கள் நிறுத்தாமல் வேகமாக சென்றனர்.
சர்ச்சைக்குரிய 3 வேளாண் சட்டங்களும் வாபஸ்.. மத்திய அமைச்சரவை ஒப்புதல்.. விவசாயிகள் ஹேப்பி
இதனால் அவர்கள் ஆடு திருட்டு கும்பல் என்பதை அறிந்த பூமிநாதனும் மற்ற காவலர்களும் தனித்தனி பாதையில் அவர்களை துரத்தி சென்றனர்.
மூகாம்பிகை கல்லூரி
அப்போது திருச்சி- புதுக்கோட்டை மெயின் ரோட்டில் உள்ள மூகாம்பிகை கல்லூரிக்கு அருகே களமாவூர் ரயில்வே கேட் பகுதியில் உள்ள பள்ளத்துப்பட்டி அருகில் சென்ற போது பூமிநாதன் இருவரை சுற்றி வளைத்து பிடித்தார். இதுகுறித்து அறிந்த இன்னொரு வாகனத்தில் சென்றவர் சம்பவ இடத்திற்கு வந்து இருவரையும் விட்டுவிடுமாறு கூறினார்.
ஆத்திரம்
ஆனால் பூமிநாதனோ அவரை விடுவிக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த அவர்கள் பூமிநாதனை அரிவாளால் வெட்டி கொன்றுவிட்டு தப்பினர். இதையடுத்து 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டு குற்றவாளிகளை தேடி வந்த நிலையில் இரு சிறுவர்கள் உள்பட 3 பேரை கைது செய்தனர். அதில் கைது செய்யப்பட்ட இளைஞர் மணிகண்டன் என்பதும் அவர் தஞ்சை மாவட்டம் கல்லணையை சேர்ந்தவர் என்றும் தெரியவந்தது.
மணிகண்டனிடம் விசாரணை
இதையடுத்து மணிகண்டனிடம் விசாரணை நடத்தப்பட்டது. அந்த விசாரணையில் அவர் அளித்த வாக்குமூலத்தில் அந்த இரு சிறுவர்களும் எனது உறவினர்கள். அவர்களை கபடி விளையாட போகலாம் என அழைத்து வந்தேன். அப்போது எங்களை பிடித்த பூமிநாதன் எனது தாய்க்கும் சக காவலர்களுக்கும் போன் செய்தார்.
அவமானம்
எனது தாய்க்கு தெரிந்தால் அவமானம் ஏற்படும், மற்ற போலீஸ் வந்துவிட்டால் எங்களை கைது செய்துவிடுவர் என்ற அச்சத்தால் எஸ்எஸ்ஐ பூமிநாதனிடம் இருந்து தப்புவதற்கு நினைத்தேன். அப்போது அவர் போன் பேசி கொண்டிருக்கும் சந்தர்ப்பத்தை பயன்படுத்தி அவரை கல்லால் தாக்குமாறு இரு சிறுவர்களுக்கும் சைகை காட்டினேன். அது போல் அவர்களும் கல்லால் தாக்கினர்.
அரிவாள் வெட்டு
இதில் தடுமாறி கீழே விழுந்த பூமிநாதனை தலையில் அரிவாளால் மூன்று இடங்களில் வெட்டினேன். இதையடுத்து ரத்த வெள்ளத்தில் அவர் இறந்துவிட்டார். பின்னர் அவரிடம் இருந்து செல்போன் மற்றும் வாக்கி டாக்கியை பறித்து அங்கிருந்த மழைநீர் குட்டையில் வீசிவிட்டேன். இதனால் தான் போலீஸாரிடம் சிக்க மாட்டேன் என நினைத்தேன். ஆனால் பூமிநாதன எனது தாயிடம் பேசியதை வைத்து போலீஸார் கல்லணை வீட்டிற்கு வந்து என்னை கைது செய்தார்கள் என மணிகண்டன் வாக்குமூலம் அளித்துள்ளார்.