2008ல் அதிமுகவுக்கு வந்தவர் உதயகுமார்.. சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா.. பற்றவைத்த கோவை செல்வராஜ்!
சென்னை: அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமாரின் சொத்து மதிப்பு குறித்து லஞ்ச ஒழிப்புத்துறையினரிடம் புகாரளிக்க உள்ளதாக ஓபிஎஸ் ஆதரவாளர் கோவை செல்வராஜ் தெரிவித்துள்ளார்.
அதிமுகவில் ஓபிஎஸ் - ஈபிஎஸ் தரப்புக்கு இடையேயான மோதல்போக்கு தொடர்ந்து வருகிறது. கடந்த 11ம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டார். இதனைத்தொடர்ந்து ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்களை கட்சியில் இருந்து நீக்கி உத்தரவிட்டார். அவர்களின் பொறுப்புகளுக்கு புதிய நிர்வாகிகளையும் நியமனம் செய்தார்.

ஓபிஎஸ் ஆதரவாளர்கள் நீக்கம்
அதனைத் தொடர்ந்து நேற்று மாலை ஓபிஎஸ் மகன்கள் ஓ.பி.ரவீந்திரநாத், ஜெயபிரதீப் உள்ளிட்ட ஓபிஎஸ் ஆதரவாளர்கள் 18 பேரை அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி நீக்கி உத்தரவிட்டார். இதற்கு பதிலடியாக கட்சியின் ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட 22 பேரை கட்சியில் இருந்து ஓபிஎஸ் நீக்கி அறிவிப்பு வெளியிட்டார்.

ஓபிஎஸ் நடவடிக்கை
இது தொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட அறிக்கையில், கட்சி கொள்கை, குறிக்கோள்களுக்கும், கட்சியின் கண்ணியத்துக்கு மாசு ஏற்படுத்தும் வகையில் நடந்து கொண்டதாலும், கட்சி கட்டுப்பாட்டை மீறி கட்சிக்கு களங்கமும், அவப்பெயரும் உண்டாக்கும் விதத்தில் செயல்பட்ட காரணத்தாலும் கட்சி இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி, திண்டுக்கல் சீனிவாசன், செங்கோட்டையன், நத்தம் விஸ்வநாதன், பி.தங்கமணி, எஸ்.பி.வேலுமணி,டி.ஜெயக்குமார், பா.வளர்மதி, எஸ்.கோகுல இந்திரா ஆகியோரை நீக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

2ம் கட்ட பட்டியல்
இதன் தொடர்ச்சியாக பொள்ளாசி ஜெயராமன், சி.விஜயபாஸ்கர், பெஞ்சமின், கே.சி.வீரமணி, மாதவரம் மூர்த்தி உள்ளிட்ட 44 பேரை அதிமுகவில் இருந்து நீக்குவதாக ஓ.பன்னீர் செல்வம் அறிக்கை வெளியிட்டுள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த ஓபிஎஸ் ஆதரவாளர் கோவை செல்வராஜ், நீக்கப்பட்ட நிர்வாகிகள் வகித்த வந்த பதவிகளுக்கு மாற்று நிர்வாகிகள் நியமிக்கப்படுவார்கள். ஆர்.பி. உதயகுமார் ஓபிஎஸ் பற்றி தரம்தாழ்ந்து பேசுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும். 2008ல் தான் ஆர்.பி.உதயகுமார் அதிமுகவில் இணைந்தார். முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவிடம் ஓபிஎஸால் அறிமுகம் செய்து வைக்கப்பட்டவர் ஆர்.பி.உதயகுமார். ஆனால் இன்று ரூ.5 ஆயிரம் கோடிக்கு அதிபதி.

ஆர்.பி.உதயகுமார் மீது புகார்
விரைவில் அவரது சொத்து மதிப்பு குறித்த அறிக்கை வெளியிடப்படும். இதுகுறித்து லஞ்ச ஒழிப்புத்துறையினரிடம் புகார் அளிக்கப்படும். அதிமுகவில் இருந்து எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்-க்கு தகுதி இல்லை. எடப்பாடி பழனிசாமி ஒரு கம்பெனியை நடத்திக் கொண்டிருக்கிறார். ஓபிஎஸ் தொண்டர்களின் கட்சியாக அதிமுகவை நடத்திக் கொண்டிருக்கிறார். குண்டர்களின் கட்சியாக எடப்பாடி பழனிசாமி நடத்துகிறார். அதனால் அதிமுகவிற்கு அவர்களுக்கும் தொடர்பு இல்லை. கட்சியும், சின்னமும் ஓபிஎஸ் கைகளில் மட்டுமே உள்ளது. வேறு யாரும் சொந்தம் கொண்டாட முடியாது என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications