பேரிடர் மீட்பு பணியில் உள்ள அரசு ஊழியர்கள் விடுப்பு எடுக்கக் கூடாது... அரசு வலியுறுத்தல்!
Recommended Video

சென்னை: கஜா புயல் 5 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து வருவதாகவும் கடலூர் பாம்பன் இடையே புயல் நவம்பர் 15ம் தேதி கரையை கடக்கும் என்று வானிலை மையம் விடுத்துள்ள எச்சரிக்கையின் அடிப்படையில் முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார். பேரிடர் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ள அரசு ஊழியர்கள் விடுப்பு எடுக்கக் கூடாது என்று உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய போது கூறியதாவது : கஜா புயலினை எதிர்கொள்ள மேற்கொண்டிருக்கக் கூடிய முன்எச்சரிக்கைகள் குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் உயர்அதிகாரிகள், மூத்த அமைச்சர்கள் பங்கேற்ற ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பல்வேறு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன.

உடனடியாக அந்தந்த மாவட்ட கண்காணிப்பு அலுவலர்கள் அந்த மாவட்டத்திற்கு சென்று பொறுப்பேற்க வேண்டும். மருத்துவர்கள் குழுவினர் தயார் நிலையில் இருக்க வேண்டும், பால் விநியோகம் சீராக இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தேவைப்படும் இடங்களில் ஜெனரேட்டர்கள் அமைக்க வேண்டும், நடமாடும் குழுக்கள் ஏற்படுத்த வேண்டும்.
நவம்பர் 15 அன்று கனமழை வாய்ப்பு இருப்பதால் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிப்பது குறித்து மழை நிலவரத்திற்கு ஏற்ப முடிவு எடுத்துக்கொள்ளலாம். களத்தில் முதல்நிலைப் பணியில் இருப்பவர்கள் விடுமுறைகள் எடுப்பதை தவிர்க்க வேண்டும் என்று முதல்வர் அறிவுரை அளித்துள்ளார்.
பேரிடர் காலங்களில் ஆதாரமற்ற செய்திகளை யாரேனும் வெளியிட்டால் அதனை நம்ப வேண்டாம். 24 மணி நேரமும் கட்டுப்பாட்டு அறை இயங்கும் அவர்கள் தரக்கூடிய அதிகாரப்பூர்வமான தகவல்களை மட்டுமே வெளியிடுங்கள்.

புயல் காற்றின் போது பொதுமக்கள் வாகனங்களில் செல்ல வேண்டாம். பேரிடர் காலத்தில் அரசு கொடுக்கும் எச்சரிக்கைகளை மக்கள் பின்பற்ற வேண்டும். கஜா புயல் 3 முறை திசை மாறி இருக்கிறது, தொடர்ந்து கண்காணித்து வருகிறோம்.
[கஜா புயல் பாதிப்பை எதிர்கொள்ள ஆயத்தம்.. கடலோர காவல்படை கப்பல்கள் வருகை]
தற்போதைய நிலவரப்படி கடலூர் - பாம்பன் இடையே கரையை கடக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த வானிலை எச்சரிக்கையானது 12 மணிக்கு வரும் அதனை பொருத்து நடவடிக்கைகள் எடுக்கப்படும். எனினும் கடலூர் - பாம்பன் இடையே கரையை கடக்கலாம் என்பதால் இதனை ஒட்டியுள்ள கடலோர பகுதிகளில் முன்எச்சரிக்கை நடவடிக்கையானது எடுக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications