ஆளுநர் ரவியும், அண்ணாமலையும் செய்யும் வேலையை பார்த்தீங்களா.. சீறும் பாலகிருஷ்ணன்
சென்னை: தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி மற்றும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஆகியோர் தேவையற்ற சர்ச்சைகளை உருவாக்குவதாக சிபிஎம் பாலகிருஷ்ணன் விமர்சித்துள்ளார். ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழ்நாடு அரசுக்கும், தமிழக மக்களுக்கும் எதிராக செயல்பட்டு வருவதாகவும், அவரின் செயல்பாடுகளை கண்டித்து கூட்டணி கட்சிகள் இணைந்து போராட்டம் செய்ய பேசுவோம் என்றும் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை தலைமைச் செயலகத்தில் இன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் நேரில் சந்தித்து புத்தாண்டு மற்றும் பொங்கல் வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து புரட்சியாளர் சே குவேராவின் மகள் அலெய்டா குவேராவும் மற்றும் ஸ்டெஃபானி ஆகியோருக்கு சென்னையில் 18ம் தேதி நடைபெறவுள்ள வரவேற்பு விழா மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்தின் தோள்சீலைப் போராட்டத்தின் 200-வது ஆண்டு விழா ஆகியவற்றில் கலந்துகொள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அழைப்பு விடுத்தார்.

பாலகிருஷ்ணன் பேட்டி
அப்போது, ஓய்வுபெற்ற போக்குவரத்து தொழிலாளர்கள் கோரிக்கைகளை விரைந்து நிறைவேற்ற வேண்டும் என்று சிபிஎம் பாலகிருஷ்ணன் கோரிக்கை வைத்தார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பாலகிருஷ்ணன் கூறுகையில், தமிழக அரசுக்கும், தமிழக மக்களுக்கும் விரோதமாகவும், பழமைவாத சனாதன கருத்துக்களையும், அரசியல் சாசனத்திற்கும் முரண்பாடாக பேசி வருவதை ஆளுநர் ஆர்.என்.ரவி தொடர்ந்து கொண்டுள்ளார்.

ஆளுநர் ஆர்.என்.ரவி செயல்
புதிய கல்விக் கொள்கையை அமலாக்குவது, தமிழக அரசின் மசோதாக்களுக்கு ஒப்புதல் கொடுக்க மறுப்பது, குறிப்பாக நீட் விலக்கு, ஆன்லைன் ரம்மி மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க மறுத்து கிடப்பில் போட்டுள்ளார். நாடாளுமன்றத்தால் அங்கீகரிக்கப்பட்ட தமிழ்நாடு பெயரை பயன்படுத்துவது தவறு என பேசியுள்ளது அரசியல் சாசனத்திற்கு விரோதமானதாகும். அதிகாரத்தில் உள்ள ஒருவர் தவறு செய்யும்போது, அதை சுட்டிக் காட்டினால், தவறை திருத்திக் கொள்வது தான் நல்ல பண்பாகும்.

போராட்டம்
ஆனால் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, சுட்டிக்காட்ட, சுட்டிக்காட்ட மேலும் தீவிரமாக தவறுகளை செய்து கொண்டு வருகிறார். இதனால் கூட்டணி கட்சிகள் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக இணைந்து செயல்பட வேண்டும். கூட்டணி கட்சிகள் இணைந்து போராட்டத்தை நடத்த வேண்டும். இதுகுறித்து சட்டமன்ற கட்சி தலைவர்களுடன் நாங்கள் பேசுவோம் என்று தெரிவித்தார்.

அண்ணாமலை பற்றி கருத்து
தொடர்ந்து அண்ணாமலை பற்றிய கேள்விக்கு, அரசியல் கட்சி பத்திரிக்கையாளர் சந்திப்புக்கு அழைத்தால், பத்திரிகையாளர்கள் கேட்கும் கேள்விக்கு பதில் அளிக்க வேண்டும். பதில் இல்லை என்றாவது சொல்ல வேண்டும். ஆனால் மூன்றாம் தர அரசியல்வாதி போன்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நடந்து கொள்வது ஏற்புடையதல்ல.

தேவையற்ற சர்ச்சை
நான் ரூ.5 லட்சம் வாட்ச் கட்டி உள்ளேன். இது மிகவும் பெருமைக்குரியது என்று அண்ணாமலை தான் கூறுகிறார். அதற்கு பில் கேட்பதால் ஆத்திரம் அடைந்தால் என்ன செய்ய முடியும். ஆளுநரும், பாஜக தலைவரும் தேவையற்ற சர்ச்சையை உருவாக்குவதை ஏற்றுக் கொள்ள முடியாது என்று தெரிவித்தார்.











Click it and Unblock the Notifications