ஓகே சொன்ன ஸ்டாலின்.. ஆளுநர் பச்சை கொடி? திமுக, அதிமுக மெகா கூட்டணி? 48 மணிநேரம் ரொம்ப முக்கியம்
சென்னை: தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் எந்தக் கட்சிக்கும் மெஜாரிட்டியை வழங்காத நிலையில், தவெக மற்றும் காங்கிரஸின் நகர்வுகளை முறியடிக்க திராவிடப் பேரியக்கங்கள் இரண்டும் கைகோர்க்குமா என்ற விவாதம் அனல் பறக்கத் தொடங்கியுள்ளது. புதுச்சேரி ரிசார்ட் ஆலோசனைகள் முதல் அறிவாலயத்தின் அவசரத் தீர்மானம் வரை அனைத்தும் ஒரு புதிய அரசியல் மாற்றத்தை நோக்கியே நகர்வதாகத் தெரிகிறது. கொள்கை முரண்களைக் கடந்து, 'நிலையான ஆட்சி' என்ற ஒற்றை இலக்கிற்காக அதிமுக - திமுக கைகோர்க்கும் திரைமறைவு வியூகங்கள் தமிழக அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன.
தமிழக அரசியலில் இதுவரைக்கும் யாரும் நினைச்சு கூட பார்க்காத ஒரு மெகா திருப்பம் இப்போ அரங்கேறப் போகுதோ என்ற சந்தேகம் பலமாக எழுந்துள்ளது.

சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் எந்தக் கட்சிக்கும் மெஜாரிட்டி கொடுக்காத நிலையில், அடுத்து யார் ஆட்சி அமைப்பார்கள் என்ற கேள்விக்கு விடையாக திமுக மற்றும் அதிமுக கைகோர்க்கும் சூழல் உருவாகியுள்ளது.. அதிமுகவின் முக்கிய தலைவர்கள் யாரும் இந்தத் தகவலை இதுவரைக்கும் திட்டவட்டமாக மறுக்கவில்லை என்பதுதான் இதில் ரொம்பவே கவனிக்க வேண்டிய விஷயம்.
எடப்பாடி பழனிசாமி முதல்வர்?
இதற்கிடையே பாதுகாப்பு காரணங்களுக்காக அதிமுக எம்எல்ஏக்கள் புதுச்சேரியில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.. அதேபோல திமுக எம்எல்ஏக்களும் சென்னையிலேயே இருக்கும்படி தலைமை அறிவுறுத்தல் கொடுத்துள்ளது..
இந்தச் சூழலில்தான் புதுச்சேரி அதிமுக செயலாளர் அன்பழகன் பேசும்போது, காங்கிரஸின் முயற்சியை முறியடிச்சு பழனிசாமி தலைமையில் தமிழகத்தில் அதிமுக ஆட்சி அமையும் என்று பகிரங்கமாகத் தெரிவித்தார்.. சில நாட்களுக்கு முன்பே அதிமுக எம்எல்ஏ லீமா ரோஸும் பழனிசாமிதான் முதல்வர் என்று சொல்லி ஆச்சரியப்படுத்தினார்.
அறிவாலயம் அதிரடி முடிவு?
வெறும் 47 இடங்களில் மட்டுமே ஜெயித்த அதிமுக எப்படி ஆட்சி அமைக்கும் என்று பார்த்தால், அதற்குப் பின்னால்தான் டெல்லி முதல் அண்ணா அறிவாலயம் வரை நீண்ட பேச்சுவார்த்தைகள் நடந்து வருகிறது.. இதன் தொடர்ச்சியாகத்தான் திமுக எம்எல்ஏக்கள் கூட்டத்தில் ஒரு முக்கியமான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.. அதாவது தமிழ்நாட்டில் இன்னொரு தேர்தலுக்கு மக்கள் தயாராக இல்லை என்றும், ஒரு நிலையான ஆட்சி அமைய வேண்டும் என்றும் அந்தத் தீர்மானத்தில் சொல்லப்பட்டது..
குறிப்பாக திராவிட கொள்கைகளுக்கு எதிராக இருக்கும் மதவாத சக்திகளுக்கு இடம் கொடுக்கக் கூடாது என்பதும், கடந்த 5 வருஷமாக திமுக அரசு கொண்டு வந்த திட்டங்கள் தொய்வில்லாமல் நடக்க வேண்டும் என்பதும் திமுகவின் விருப்பமாக உள்ளது.
ஓகே சொன்ன ஸ்டாலின்
இந்தச் சூழலைச் சமாளிக்க அவசர முடிவுகளை எடுக்கும் அதிகாரத்தை முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு திமுக ஒருமனதாக வழங்கியுள்ளது.. இந்தத் தீர்மானத்தை உற்றுப் பார்த்தால், தமிழகத்தில் மறு தேர்தலைத் தவிர்க்கவும் பாஜக-வை தள்ளி வைக்கவும் அதிமுகவுக்கு ஆதரவு கொடுக்க திமுக தயாராகிவிட்டதோ என்று எண்ணத் தோன்றுகிறது.. அதேசமயம் தவெக ஆட்சி அமைக்க திமுக ஒருபோதும் விரும்பாது என்பதால், அவர்களுக்கு இருக்கும் ஒரே வழி அதிமுக கூட்டணிதான்..
இந்தத் தீர்மானம் வந்த பிறகு பேசிய திமுக செய்தித் தொடர்பாளர் டிகேஎஸ் இளங்கோவனும், ஸ்டாலின் முடிவெடுத்தால் திமுக - அதிமுக கூட்டணியை ஏற்போம் என்று பச்சைக் கொடி காட்டியுள்ளார்.
திமுக அதிமுக திடீர் பாசம்
இவர்களின் இந்தத் திடீர் பாசத்தை பாஜக ஏற்குமா என்ற கேள்வி வந்தாலும், தவெக தலைவர் விஜய் தங்களை ஒதுக்கி வைப்பதால் அவரை வளரவிடுவது ஆபத்து என்று பாஜக-வும் கணக்குப் போடலாம்.. தவெகவோடு காங்கிரஸ் கைகோர்த்தால் அது தென்னிந்தியா முழுவதும் பாஜக-வுக்குச் சிக்கலாக மாறும்.. அதனால் திமுக - அதிமுக கூட்டணியை இலைமறை காயாக பாஜக ஆதரிக்க வாய்ப்பு இருக்கிறது..
இதற்கிடையே புதுச்சேரி ரிசார்ட்டுக்கு வியாழக்கிழமை இரவு வந்த எடப்பாடி பழனிசாமி, 40-க்கும் மேற்பட்ட எம்எல்ஏக்களிடம் முக்கிய ஆலோசனை நடத்தி கையெழுத்து வாங்கியுள்ளதாக தெரிகிறது. அங்கு அவர் சட்டமன்ற குழுத் தலைவராகவும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.. காங்கிரஸின் பதவி வெறியைத் தடுக்கவே எடப்பாடி இப்படி செயல்படுகிறார் என்று அங்கிருப்பவர்கள் சொல்கிறார்கள்.
ஆளுநர் பச்சைக்கொடி
ஒருபுறம் இப்படி இருக்க, தமிழக பொறுப்பு ஆளுநர் அர்லேகரோ திமுக - அதிமுக சேர்ந்து ஆட்சி அமைக்க உரிமை கோரினால் அது சாத்தியம்தான் என்று சொல்லி அரசியல் சூட்டை இன்னும் அதிகப்படுத்தியுள்ளார்.. 2018-ல் கர்நாடகாவில் குமாரசாமி முதல்வரான அதே பாணி இப்போது தமிழ்நாட்டில் எடப்பாடி பழனிசாமிக்கு அமையுமா என்பது இன்னும் சில மணி நேரங்களில் தெரிந்துவிடும்..
திராவிடப் பேரியக்கங்கள் இரண்டும் ஒன்றிணைவது என்பது புதிய மாற்றங்களை உருவாக்கும் என்றாலும், இது அந்தந்த கட்சிகளின் வாக்கு வங்கியை வருங்காலத்தில் எப்படிப் பாதிக்கும் என்று தெரியவில்லை.. பொறுத்திருந்து பார்ப்போம்..!!












Click it and Unblock the Notifications