மக்கள் அனுமதியில்லாமல் டாஸ்மாக் கடைகளை திறக்கக்கூடாது - தமிழக அரசு அரசாணை வெளியீடு
டாஸ்மாக் கடைகளை அமைக்க மக்கள் எதிர்ப்பு தெரிவித்தால், அதை மாவட்ட ஆட்சியர்கள் கண்டிப்பாக பரிசீலிக்கும் வகையில் விதிகளில் தமிழக அரசு திருத்தம் கொண்டு வந்துள்ளது.
சென்னை: டாஸ்மாக் மதுக்கடையைத் திறக்க அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தால், அதை பரிசீலித்து கடையை திறக்கக்கூடாது என சட்டத்தில் திருத்தம் கொண்டுவந்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
மக்கள் அதிகம் கூடும் இடங்கள், கோவில்கள், பள்ளிகள், கல்லூரிகளின் அருகில் மதுபானக் கடைகள் திறக்கக்கூடாது. ஆனால் அத்தகைய இடங்களில் சில ஊர்களில் கடைகள் அமைக்கப்படுகின்றன. இதை எதிர்த்து மக்கள் தொடர்ந்து போராட்டம் நடத்துகின்றனர். இதனையடுத்து சில நாள்கள் கடைகள் அடைக்கப்பட்டு பின்னர் மீண்டும் அதே இடத்தில் கடைகள் திறக்கப்படுகின்றன.

இந்நிலையில் புதிய டாஸ்மாக் கடைகள் திறக்கப்படுவதை தடுக்க மக்களுக்கு அதிகாரம் அளித்து தமிழ்நாடு அரசு சட்டத்திருத்தம் செய்துள்ளது.
டாஸ்மாக் மதுக்கடை விவகாரம் தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில், டாஸ்மாக் கடைகளை அமைக்க மக்கள் எதிர்ப்பு தெரிவித்தால், அதை மாவட்ட ஆட்சியர்கள் கண்டிப்பாக பரிசீலிக்கும் வகையில் விதிகளில் தமிழக அரசு திருத்தம் கொண்டு வந்துள்ளது.
அதன்படி, மக்கள் தெரிவிக்கக் கூடிய ஆட்சேபங்களைப் பரிசீலித்து தகுந்த உத்தரவுகளைப் பிறப்பிக்காமல், எந்த டாஸ்மாக் கடைகளையும் திறக்க அனுமதி வழங்க கூடாது என மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
மேலும், மாவட்ட ஆட்சியர்களின் முடிவை எதிர்த்து 30 நாட்களுக்குள் மதுவிலக்கு ஆயத்தீர்வை ஆணையருக்கு மேல்முறையீடு செய்யவும் திருத்த விதிகளில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications