சிவகார்த்திகேயன் தந்தை மரணம்.. கண்டதையும் பேசி.. போலீஸ்வரை போன புகார்! "வருத்தம்" தெரிவித்த எச்.ராஜா
சென்னை: நடிகர் சிவகார்த்திகேயனின் தந்தை மரணம் தொடர்பாக சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்திருந்தார், பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா. போலீஸ் புகார்களை அடுத்து தனது கருத்தை வாபஸ் பெற்றுக் கொள்வதாக அறிவித்து அதற்கு வருத்தம் தெரிவித்துள்ளார்.
Recommended Video
நடிகர் சிவகார்த்திகேயனின் தந்தை ஜெயபிரகாஷ் ஜெய்லர் பதவியில் இருந்ததாகவும், அவர் கொலை செய்யப்பட்டதாகவும், அதற்கு மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் மற்றும் தற்போதைய பாபநாசம் தொகுதி எம்எல்ஏ ஜவாஹிருல்லாவுக்கு தொடர்பு இருப்பது போலவும் சமீபத்தில் எச்.ராஜா பேசியிருந்தார்.
இந்த பேச்சு மனிதநேய மக்கள் கட்சித் தொண்டர்களுக்கு மட்டுமில்லாமல் சிவகார்த்திகேயன் ரசிகர்களுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.

போலீசில் புகார்
இந்த நிலையில்தான் மனிதநேய மக்கள் கட்சியின் வழக்கறிஞர் பிரிவு சார்பில் எச் ராஜா மீது டிஜிபி அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதில், சிவகார்த்திகேயனின் தந்தை பெயர் தாஸ். அவர் ஜெய்லர் பதவி வகித்து வந்தார். மாரடைப்பு காரணமாக 19 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். ஆனால் ஜவாஹிருல்லா பெயரைக் கெடுப்பதற்காக எச்.ராஜா பொய்யான கருத்துக்களை பரப்பி உள்ளார்.

மோதல் சதி
சிவகார்த்திகேயன் ரசிகர்களுக்கும், பிற இஸ்லாமியர்களுக்கும் மோதலை ஏற்படுத்த இதுபோல கருத்து பரப்பப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டது. தமிழகம் முழுவதும் ராஜா மீது புகார்கள் கொடுக்க ஆரம்பித்தனர், மனிதநேய மக்கள் கட்சி நிர்வாகிகள். இந்த நிலையில்தான் தனது கருத்துக்கு மன்னிப்பு கேட்டுள்ளார் எச்.ராஜா.

மதுரை ஜெயிலர்
காரைக்குடியில் செய்தியாளர்களை சந்தித்த ராஜா, மதுரையில் ஜெயிலர் ஜெயப்பிரகாஷ் கொலை செய்யப்பட்டார். அல் உம்மா இயக்கம் அவரை கொலை செய்தது. கோவை குண்டு வெடிப்பு சம்பவத்திற்கு பிறகுதான் அல்-உம்மா தீவிரவாத அமைப்பு தடை செய்யப்பட்டது. முன்பு அந்த இயக்கத்தில் ஜவாஹிருல்லா உறுப்பினராக இருந்தவர். ஆனால் அந்த இயக்கத்தை தடை செய்தவர் முன்னாள் முதல்வர் கருணாநிதி. இப்படி இருக்கும்போது திமுக சின்னத்தில் பாபநாசம் தொகுதியில் ஜவாஹிருல்லா போட்டியிட அனுமதிக்கப்பட்டுள்ளார்.

வருத்தம் தெரிவிப்பு
இது குறித்து தேர்தல் ஆணையத்தில் புகார் செய்யப்படும். ஏனென்றால் ஜவாஹிருல்லா திமுக உறுப்பினர் கிடையாது. நான் பேசியதில் நடிகர் சிவகார்த்திகேயன் தந்தை பெயரை தவறாக குறிப்பிட்டு விட்டேன். அவருக்கு தர்ம சங்கடத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற எந்த உள்நோக்கமும் எனக்கு கிடையாது. இதற்காக நான் வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

கோவில் நிலம்
மேலும் அவர் கூறுகையில் இந்து அறநிலையத்துறை நிர்வாகத்திலுள்ள பல ஆயிரம் ஏக்கர் கோயில் நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. அதைப் பற்றி நான் பேசுவதால் என்னை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார் தமிழக நிதித்துறை அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன். நான் பயப்பட மாட்டேன். இவ்வாறு எச்.ராஜா தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications