சத்தமேயில்லை.. தமிழகத்தின் சாலையோர கம்பங்களில் புது மாற்றம்? மின்சார வாரியம் அடுத்த அதிரடி.. ஹேப்பி
சென்னை : பொதுமக்களின் வசதிக்காகவும், நன்மைக்காகவும், தமிழக மின்வாரியம் அடுத்த அதிரடியை கையில் எடுத்துள்ளது.. அது என்ன?
தமிழகத்தில் புதிதாக மின்இணைப்பு கோரி நுகர்வோர் விண்ணப்பிக்கும் இடத்தில் மின்மாற்றிகள் இல்லையென்றால் 90 நாட்களும், மின்கம்பங்கள் இல்லையென்றால் 60 நாட்களுக்குப் பிறகு மின்இணைப்பு வழங்குவது நடைமுறையாக உள்ளது. இந்த நடைமுறையை தமிழக மின்வாரியம் துரிதமாக மாற்றி வருகிறது.

அதேபோல, மின்மாற்றி, பில்லர் பாக்ஸ், மின்கம்பம் ஆகியவை உள்ள இடங்களில் மின்இணைப்பு கோரி விண்ணப்பித்தால் 3 முதல் 7 நாட்களுக்குள் நுகர்வோருக்கு மின்இணைப்பு வழங்க வேண்டுமென மின்வாரியம் கடந்த மே மாதம் உத்தரவிட்டிருந்தது.
தமிழக மின்வாரியம்: இந்நிலையில், மின் கம்பங்களின் தரம் குறித்தும், தமிழக மின்துறையின் கவனம் திரும்பியிருக்கிறது.. நம்முடைய தமிழகத்தை பொறுத்தவரை, சென்னை தவிர்த்த மற்ற இடங்களில், மின் கம்பம் மேல் செல்லும் கம்பி வாயிலாக, மின் வினியோகம் செய்யப்படுகிறது.. அந்தவகையில், மின் வாரியத்திற்கு மாதம், 45,000 மின் கம்பங்கள் தயாரிக்கும் திறனில், 22 உற்பத்திக் கூடங்கள் செயல்பட்டு வருகின்றன.
எப்போதுமே, சிமெண்ட், இரும்பு கம்பிகளை பயன்படுத்தி தயாரிக்கப்படும் மின்கம்பங்களை, குறைந்தது 30 நாட்களாவது தண்ணீரில் மிதக்க விடுவார்கள்.. அப்போதுதான் தண்ணீரின் ஈரப்பதத்தை உறிஞ்சி, கம்பம் பலம் வாய்ந்ததாக இருக்குமாம். இதன்பிறகே தமிழகம் முழுதுமுள்ள குடோன்களுக்கு, நீளமாக உள்ள லாரியில் இந்த கம்பங்கள் ஏற்றி செல்லப்படும். ஆனால், தண்ணீரில் கம்பங்களை ஒருவாரம்கூட மிதக்க விடுவதில்லை என்ற குற்றச்சாட்டு கிளம்பியிருக்கிறது.
சிறிய லாரிகள்: அதுமட்டுமல்ல, பெரிய லாரிகளில் வைத்து கொண்டுபோகாமல், சின்ன லாரிகளில் கம்பத்தை கொண்டு உற்பத்தி கூடங்களுக்கு கொண்டு செல்லப்படுகிறதாம். இதனால், பாதி கம்பம் லாரிக்கு உள்ளேயும், மீதி வெளியேயும் நீட்டிக்கொண்டு, கம்பத்திற்குள் விரிசல் ஏற்படுவதாகவும், லாரிகளில் வந்திறங்கும் கம்பங்களை செயற்பொறியாளர் முறையாக ஆய்வு செய்வதில்லை என்றும் புகார்கள் கிளம்பி உள்ளன.
இப்படி கம்பங்கள் தரமற்று இருப்பதால்தான், சின்ன மழைக்கே அவைகள் சாய்ந்து கீழே விழுவதும், மின் கம்பியை பழுதுபார்க்க ஊழியர்கள் கம்பங்களில் ஏறும்போது விபத்தில் சிக்கி உயிரிழக்க நேரிடுவதும் என துயரங்கள் ஏற்படுவதாக புகார்கள் வெடித்துள்ளன.
உரிமம் ரத்து: இந்த குறைபாடுகளை போக்கவே தமிழக மின்வாரியம் தற்போது களமிறங்கியிருக்கிறது. அதன்படி, மின் கம்பத்தில், அந்த கம்பம் தயாரிக்கப்படும் மாதம், ஆண்டு, எந்த கூடத்தில் எந்த ஒப்பந்ததாரரால் தயாரிக்கப்பட்டது போன்ற விபரங்களும் இடம் பெறும் வகையில் அச்சிட போகிறதாம்.
இனிமேல், மின்கம்பங்களின் தரம் குறைந்திருப்பது ஆய்வில் நிரூபிக்கப்பட்டால், சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரரின் உரிமம் ரத்து செய்வது உட்பட பல்வேறு கடுமையான நடவடிக்கைகளை எடுக்கவும் முடிவெடுத்துள்ளதாம். இதுபோன்ற மின்வாரியத்தின் அதிரடி நடவடிக்கைகளினால், மின்கம்பங்கள் இனி தரமானதுடன் தயாராகும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications