எம்எல்ஏ மகன் வீட்டில் சாதிய கொடுமை.. பாதிக்கப்பட்ட பெண் நேரில் ஆஜராகனும்! உயர்நீதிமன்றம் உத்தரவு
சென்னை: வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்ட திமுக எம்.எல்.ஏ.வின் மகன் மற்றும் மருமகளின் ஜாமீன் மனுவுக்கு காவல்துறை மற்றும் பாதிக்கப்பட்ட பெண் பதிலளிக்க வேண்டும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.
சென்னை பல்லாவரம் தொகுதி திமுக எம்.எல்.ஏ. கருணாநிதியின் மகன் மதிவாணன். அவரும் அவரது மனைவி மெர்லினும் சென்னை திருவான்மியூர் பகுதியில் வசித்து வந்த இவர்கள் வீட்டில் பணிப்பெண்ணாக கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையை அடுத்த திருநருங்குன்றம் என்ற கிராமத்தை சேர்ந்த ஒரு சிறுமி சேர்ந்து உள்ளார். பட்டியல் சமூகத்தை சேர்ந்த இவர் 12 ஆம் வகுப்பு படித்து முடித்து நீட் தேர்வு எழுதி மருத்துவம் படிக்க வேண்டும் என்ற கனவுடன் இருந்தவர்.

ஆனால், வறுமை அவரது கனவுக்கு தடையாக இருந்தது. விளைவு மருத்துவராக வேண்டிய இவர் மதிவானன் வீட்டில் பணிப்பெண்ணாக சேர்ந்து இருக்கிறார். இந்த நிலையில்தான் மதிவாணனின் மனைவி மெர்லின் பல வகைகளில் தன்னை கொடுமைப்படுத்தியதாக சிறுமி குற்றம்சாட்டினார். அவரது வீட்டில் பணிக்குச் சேர்ந்ததில் இருந்தே முறையாக ஊதியம் வழங்காமல் பெற்றோரை சந்திக்க அனுமதிக்காமலும் இருந்ததாக மாணவி குற்றம்சாட்டினார்.
தினமும் 16 மணி நேரம் தன்னிடம் வேலை வாங்கி கொடுமைப்படுத்தியதாக தெரிவித்த சிறுமி, தன்னை பயங்கரமாக அடித்து கொடுமைப்படுத்தி, சாதி பெயரைச் சொல்லி இழிவுபடுத்தியதாகவும் தெரிவித்தார். இவரது குற்றச்சாட்டுகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் திமுக எம்.எல்.ஏ மகனையும் அவரது மனைவியையும் கைது செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வலுத்தது. அதன் தொடர்ச்சியாக சென்னை திருவான்மியூர் மகளிர் காவல் நிலையத்தில் எஸ்சி, எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கில் தலைமறைவாக இருந்த கணவன், மனைவியை கடந்த ஜனவரி 25 ஆம் தேதி தனிப்படை போலீசார் ஆந்திராவில் கைது செய்தனர். இருவரும் நீதிமன்ற காவலில் புழல் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். இதனிடையே, இருவரும் ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுவை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இந்த நிலையில் ஜாமின் கோரி இருவரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்து உள்ளனர்.
இந்த மனு நீதிபதி எம்.நிர்மல்குமார் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனு குறித்து காவல்துறை மற்றும் பாதிக்கப்பட்ட பெண் பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதி விசாரணையை பிப்ரவரி 21ம் தேதிக்கு ஒத்திவைத்தார். பாதிக்கப்பட்ட பெண் அன்றைய தினம் நேரில் ஆஜராக வேண்டுமென்றும் நிதிபதி உத்தரவிட்டு உள்ளார்." என்று குறிப்பிட்டு உள்ளார்.












Click it and Unblock the Notifications