பருப்பு, எண்ணெய் கொள்முதல் டெண்டருக்கு தடையை நீக்க வேண்டும்: தமிழக அரசு ஹைகோர்டில் முறையீடு
சென்னை: பொது விநியோகத் திட்டத்திற்காக பருப்பு மற்றும் சமையல் எண்ணெய் கொள்முதல் செய்வதற்கான டெண்டருக்கு மதுரை கிளை விதித்த தடையை நீக்க கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசுத்தரப்பில் முறையீடு செய்யப்பட்டது.
பொது வினியோக திட்டத்தின் கீழ், பருப்பு மற்றும் எண்ணெய் கொள்முதலுக்கான ஏல அறிவிப்பை தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம், கடந்த ஏப்ரல் 26ம் தேதி வெளியிட்டது. இந்த டெண்டருக்கு தடை விதிக்க கோரி கரூர் மாவட்டத்தை சேர்ந்த மணிகண்டன் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் வழக்கு தொடர்ந்தார்.

அவர் தனது மனுவில், முந்தைய நிபந்தனைகளை பின்பற்றாமல் தற்போது புதிய நிபந்தனைகள் வெளியிடப்பட்டுள்ளதாகவும், முந்தைய நிபந்தனைகள் படி, டெண்டரில் கலந்து கொள்ளும் நிறுவனங்கள், கடைசி 3 ஆண்டுகளில் 71 கோடி ரூபாய்க்கு விற்றுமுதல் கொண்டிருக்க வேண்டும்... ஆனால் தற்போது வெளியாகியுள்ள நிபந்தனையில் கடைசி 3 ஆண்டுகளில் 11 கோடி ரூபாய் என விற்றுமுதல் குறைக்கப்பட்டுள்ளதாக கூறியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த மதுரைக் கிளை, தமிழக அரசின் டெண்டருக்கு இடைக்கால தடை விதித்து நேற்று உத்தரவிட்டது. இந்த தடையை நீக்க கோரி தமிழக அரசுத்தரப்பில், சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதிகள் ஜெயச்சந்திரன் மற்றும் சரவணன் அடங்கிய அமர்வில் முறையிடப்பட்டது. இதைக் கேட்ட நீதிபதிகள், இதுசம்பந்தமாக மதுரைக் கிளையை தான் அணுக வேண்டும் எனத் தெரிவித்தனர்.
அதற்கு கொரோனா ஊரடங்கு காலம் என்பதால் பொது வினியோக திட்டத்தின் கீழ் மக்களுக்கு பருப்பு, எண்ணெய் வினியோகம் செய்ய வேண்டியுள்ளதாகவும், தடை விதித்த நீதிபதி தலைமையில் தான் இரு நீதிபதிகள் அமர்வு உள்ளதாகவும் அரசுத்தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, மனுவாக தாக்கல் செய்ய நீதிபதிகள் அனுமதியளித்தனர்.












Click it and Unblock the Notifications