பணி காலத்தில் உயிரிழந்த அரசு மருத்துவர்களின் வாரிசுகளுக்கு கருணை வேலை.. மா.சுப்ரமணியன் அறிவிப்பு
சென்னை: பணி காலத்தில் உயிரிழந்த அரசு மருத்துவர்களின் வாரிசுகளுக்கு இனி அரசுப்பணி வழங்கப்படும் என்று அமைச்சர் மா. சுப்ரமணியன் கூறியுள்ளார். அனைத்து துறைகளிலும் கருணை அடிப்படையில் பணி வழங்கப்படுவதைப் போல மருத்துவத்துறையிலும் பணி வழங்கப்படுவதாக தெரிவித்தார்.
மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் பணிக்காலத்தில் இறந்த அரசு மருத்துவர்களின் குடும்ப வாரிசுகளுக்கு பணி வழங்கப்படும். மருத்துவர்கள் பணி காலத்தில் உயிரிழந்து 3 ஆண்டுகளுக்குள் அவர்களின் வாரிசுகள் பதிவு செய்தால் இளநிலை உதவியாளர், தட்டச்சர், அலுவலக உதவியாளர் ஆகிய 3 பணிகளில் ஏதாவது ஒன்றை வாரிசுகளுக்கு வழங்க முடியும்.

பணிக்காலத்தில் இறந்த மருத்துவர்கள் குடும்பத்தினரை தொடர்பு கொண்டு இதுகுறித்து பேச உள்ளோம் என்றும் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் கூறியுள்ளார். அனைத்துத்துறையிலும் கருணை அடிப்படையில் பணி தரப்படும் நிலையில் மருத்துவத்துறையிலும் பணி வழங்கப்படும் என்றும் அமைச்சர் மா.சுப்ரமணியன் கூறியுள்ளார்.
பணியில் சேர்பவர்கள் உடல் நிலை சரியில்லாத காரணத்திலோ, விபத்திலோ உயிரிழந்தால், கருணை அடிப்படையில் இறந்தவரின் குடும்பத்தில் உள்ள யாரேனும் ஒருவருக்கு அரசுப்பணியினை வழங்கும் திட்டம் 1972-ம் ஆண்டு முதல் தமிழகத்தில் நடைமுறையில் இருந்து வருகிறது. 1.4.2003க்கு முன் பணியில் சேர்ந்தவர் எனில், கணவன் அல்லது மனைவிக்கு ஓய்வூதியமும் வழங்கப்படுவதோடு, விண்ணப்பத்தின் அடிப்படையில் வேலை வாய்ப்பும் வழங்கப்படும்.
இறந்தவர் அரசாங்கத்தில் எந்தத் துறையில் பணியாற்றியவராக இருந்தாலும், அவரின் குடும்பத்தினர், கருணை அடிப்படையிலான அரசாங்க பணிக்கு விண்ணப்பிக்கலாம். இறந்தவரின் திருமணம் ஆகாத சகோதரன், சகோதரி அல்லது மகன், மகள், மனைவி, தந்தை, தாய் என யார் வேண்டுமானாலும் வேலை பெற விண்ணப்பிக்க முடியும்.
விண்ணப்பிப்பவர்களுக்கு 18 வயது நிரம்பியிருக்க வேண்டும். இறந்தவரின் பெற்றோர் அல்லது மனைவி விண்ணப்பம் செய்கிறார்கள் எனில், அவர்கள் 50 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும். மகன், மகள், சகோதரன், சகோதரி எனில் 40 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும். தற்காலிகப் பணி நீக்கத்தில் இருந்து இறந்தவர்களுக்கும் இது பொருந்தும்
இறந்தவர் எந்தப் பொறுப்பில் அல்லது பதவியில் இருந்து இறந்திருந்தாலும், அவரின் வாரிசுகளுக்கு கல்வி அடிப்படையில் குரூப் 'சி' அல்லது குரூப் 'டி' பணியிடங்களே வழங்கப்படும். கல்வித்தகுதியே இல்லாதவர்கள் எனில் துப்புரவுப் பணியாளர்களாக நியமிக்கப்படுவார்கள்.
சம்பந்தப்பட்டவர் இறந்து மூன்றாண்டுகளுக்குள் வாரிசுகள் வேலைக்கு விண்ணப்பிக்க வேண்டும். இறந்தவரின் குடும்பத்தில் வேறு யாரேனும் அரசாங்கப் பணியிலிருந்தால் அந்தக் குடும்பத்தில் உள்ள யாரும் கருணை அடிப்படையிலான பணிக்கு விண்ணப்பிக்க இயலாது. அதேபோன்று குடும்பத்தின் ஆண்டு வருமானம் 2 லட்சத்திற்கு உட்பட்டதாக இருக்க வேண்டும். அசையும் சொத்துகளும் அசையா சொத்துகளும் இல்லாமல் இருத்தலும் அவசியம்.
இறந்தவர் பணியாற்றிய துறையில் காலிப்பணியிடங்கள் இல்லாத பட்சத்தில், அந்த மாவட்ட ஆட்சியரின் பரிசீலனையின் அடிப்படையில் வேறு துறையில்கூட பணி நியமனம் செய்ய இயலும். அதே போன்று எந்த மாவட்டத்தில் வேண்டுமானாலும் பணி நியமனம் செய்யப்படும். இதற்கு விண்ணப்பதாரர் சம்மதம் தெரிவிக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications