சென்னை முழுக்க பலத்த காற்றுடன் வெளுத்து வாங்கிய மழை.. மக்கள் மகிழ்ச்சி.. அடியோடு குறைந்த போன ஹீட்!
சென்னை: சென்னையில் நீண்ட நாட்களுக்கு பின்னர் மழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஊரடங்கால் மழையில் ஆட்டம் போட முடியாமல் குட்டீஸ்கள் ஜன்னல்களிலும் பால்கனிகளிலும் நின்றவாறே மழை ரசிக்கின்றனர்.
Recommended Video
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையான அக்டோபர் முதல் நவம்பர் மாதம் வரை குறைந்த நாட்களில் அதிக மழை பெய்தது. எனினும் சொல்லிக் கொள்ளும்படியாக மழை பெய்யவில்லை.
கடந்த 4 மாதங்களாக வெயில் மக்களை வாட்டி வதைத்தது. இந்த நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன்னர் நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட தென்மாவட்டங்களிலும் மேற்கு தொடர்ச்சியை ஒட்டிய பகுதிகளிலும் அதிக மழை பெய்தது.
சென்னை வானிலை மையம்
திருப்பூரில் நேற்றைய தினம் ஆலங்கட்டி மழை பெய்ததாக செய்திகள் வந்தன. இந்த நிலையில் இன்று முதல் 5 நாட்களுக்கு நல்ல மழை பெய்யும் என தமிழ்நாடு வெதர்மேன் கூறியிருந்தார். சென்னை வானிலை மையமும் நல்ல செய்தியை தெரிவித்தது. இந்த மழை ஏப்ரல் 11-ஆம் தேதி வரை இருக்கும் என கூறுகிறார்கள்
மேகமூட்டம்
தமிழகத்தில் நிலவி வரும் மேலடுக்கு சுழற்சி, வெப்பசலனத்தின் காரணமாக நீலகிரி, தேனி, கோவை, ஈரோடு, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், திருப்பூர், குமரி, நெல்லை உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று முதல் மிதமான அல்லது லேசான மழை பெய்யும் என தெரிவித்தது. மேலும் சென்னையில் வெப்பம் குறைந்த வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என தெரிவித்திருந்தது.
எங்கு மழை
அதன்படி கடந்த இரு தினங்களாக பிற்பகலுக்கு மேல் வெப்பம் தணிந்தே இருந்தது. இன்று மதியம் 3 மணி அளவில் சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. ஏதோ 7 மணி போல் இருட்டிக் கொண்டு வந்தது. இதையடுத்து இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்து வருகிறது. சென்னையில் முகப்பேர் மேற்கு, கிழக்கு, வளசரவாக்கம், அண்ணாநகர், மதுரவாயல், பட்டினப்பாக்கம், மயிலாப்பூர், திருவல்லிக்கேணி, சேப்பாக்கம், திருவொற்றியூர், மணலி, மாதவரம், வண்ணாரப்பேட்டை, கோட்டூர்புரம், செங்குன்றம், ஈக்காட்டுத்தாங்கல், ஆலந்தூர், கிண்டி, சைதாப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் மிதமான மற்றும் அதிகமான மழை பெய்தது.
ரசிக்க முடியவில்லை
இதனால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கோடை வெப்பம் அதிகரித்து வந்த நிலையில் இந்த மழை அவர்களுக்கு இதத்தை கொடுக்கும் என்பதில் சந்தேகமில்லை. குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது. ஃபேன்கள், ஏசிக்கள் ஆஃப் மோடுக்கு சென்றுவிட்டன. எனினும் கொரோனா ஊரடங்கு உத்தரவினால் மழையை ரசிக்க முடியாமல் குட்டீஸ்கள் எல்லாம் ஜன்னல் கம்பிகளை பிடித்தவாறு மழையை ரசித்தனர்.