டெல்டா மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மிக கனமழை - வானிலை ஆய்வு மையம்
தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி காரணமாக தமிழ்நாட்டில் டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது.
சென்னை: வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று 7 டெல்டா மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது. கடந்த சில நாட்களாகவே மழை தீவிரமடைந்துள்ள நிலையில் மிக கனமழை நீடிக்கும் என வானிலை மையம் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் கடந்த ஒரு வார காலமாகவே பருவமழை தீவிரமடைந்துள்ளது. இன்னும் சில நாட்களில் தென்மேற்குப் பருவமழை முடிவுக்கு வரப்போகிறது. வடகிழக்குப் பருவமழை அடுத்தவாரம் தொடங்க உள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் தமிழ்நாட்டில் அதிகபட்சமாக விழுப்புரம், ஊத்தங்கரையில் தலா 8 சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் ,ராமேஸ்வரம் ,முசிறி , கிருஷ்ணராயபுரத்தில் 6 சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. மாயனூர், திருக்கோயிலூர், பாம்பம், மைலம், வேப்பூரில் 5 செமி மழை பதிவாகியுள்ளது. கீழ்பெண்ணாத்தூர், ஊத்துக்குளி, தேன்கனிக்கோட்டை, முதுகுளத்தூர், ராசிபுரம் அவினாசியில் தலா 4 செமீ மழை பதிவாகியுள்ளது.

இதனிடையே இன்றும் நாளையும் இடி மின்னலுடன் கூடிய கனமழை நீடிக்கும் என்று வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. புவியரசன் வெளியிட்டுள்ள அறிவிப்பில் வளிமண்டல மேலடுக்கில் நிலவும் சுழற்சி காரணமாக டெல்டா மாவட்டங்களான தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருச்சி, அரியலூர், பெரம்பலூரில் மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
அதேபோல் திருநெல்வேலி, தூத்துக்குடி, புதுக்கோட்டை, சிவகங்கை, சேலம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்டங்கள் மற்றும் காரைக்காலில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கன மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
தமிழகத்தில் நாளைய தினம் மதுரை, தேனி, திண்டுக்கல், தென்காசி, சேலம் ஆகிய மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. ஏனைய மாவட்டங்கள் புதுச்சேரி, காரைக்காலில் பெரும்பாலான இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
4ஆம் தேதி தென்மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. சேலம், தருமபுரி, ஈரோடு, கோவை, அரியலூர், பெரம்பலூர் டெல்டா மாவட்டங்கள், காரைக்காலில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
5 மற்றும் 6ஆம் தேதிகளில் கடலோர மாவட்டங்கள் வட உள் மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழையும் பெய்ய வாய்ப்பு உள்ளது. ஏனைய மாவட்டங்கள் புதுச்சேரி காரைக்காலில் கனமழையும் மிதமான மழையும் பெய்ய வாய்ப்பு உள்ளது.
சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் நகரின் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்சியஸ் ஆகவும் குறைந்த பட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸ் ஆகவும் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை கடற்கரைக்கு அப்பால் தென்மேற்கு வங்கக் கடல் மன்னார் வளைகுடா பகுதிகளில் பலத்த சூறாவளிக்காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications