கொட்டித்தீர்க்கும் கனமழை.. நிரம்பி வழியும் மேட்டூர் அணை..காவிரியில் வெள்ளம்..மக்களுக்கு எச்சரிக்கை
சென்னை: காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மீண்டும் கனமழை நீடிப்பதால் மேட்டூர் அணைக்கான நீர்வரத்து அதிகரித்துள்ளது.
அணையில் இருந்து மீண்டும் ஒரு லட்சம் கன அடி தண்ணீர் வரை திறக்க வாய்ப்புள்ளதால் கரையோரங்களில் வசிக்கும் கிராம மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால், மேட்டூர் அணைக்கு நேற்று முன்தினம் விநாடிக்கு 28 ஆயிரம் கனஅடியாக இருந்த நீர் வரத்து நேற்று விநாடிக்கு 55 ஆயிரம் கனஅடியாக அதிகரித்தது. இது 60 ஆயிரம் கனஅடி வரை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் கூறினர்.
நடப்பாண்டு கடந்த ஜூலை 16ஆம் மேட்டூர் அணை முழு கொள்ளளவான 120 அடியை எட்டிய நிலையில், இரு தினங்களுக்கு முன்பு 2வது முறையாக முழு கொள்ளளவை எட்டியது.
11 மாவட்டங்களுக்கு வெள்ள எச்சரிக்கை.. மேட்டூர் அணையால் காவிரியில் 60,000 கனஅடி நீர் திறக்க வாய்ப்பு!
மேட்டூர் அணை
மேட்டூர் அணை நிரம்பியதால் தண்ணீர் முழுவதும் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது. 16 கண் மதகுகள் வழியாக விநாடிக்கு 60ஆயிரத்து 500 கனஅடி, நீர் மின் நிலையங்கள் வழியாக 23 ஆயிரத்து 500 கனஅடி என மொத்தம் 85 ஆயிரம் கனஅடி திறந்து விடப்பட்டுள்ளது. இதனால், நீர் வளத்துறை மூலம் டெல்டா மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பு எச்சரிக்கை
கரையோர மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர். வருவாய், தீயணைப்பு, காவல், நீர் வளம் உள்ளிட்ட துறைகளின் அதிகாரிகள் கரையோர பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். காவிரி ஆற்றில் குளிக்கவோ, துணி துவைக்கவோ, செல்ஃபி எடுக்கவோ கூடாது என வருவாய்த் துறை மூலம் தடை விதிக்கப்பட்டுள்ளது.
1,10,000 கன அடி தண்ணீர் திறப்பு
இன்றைய தினம் மேட்டூர் அணையில் இருந்து விநாடிக்கு 1,10,000 கன அடிக்கு மேல் நீர் திறக்க வாய்ப்பு உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது.
120 அடியாக நீடிக்கும் மேட்டூர் அணை
மேட்டூர் அணையில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் காவிரி டெல்டா பாசனத்துக்காக ஜூன் மாதம் 12ஆம் தேதி தண்ணீர் திறப்பது வழக்கம். அணையின் நீர் இருப்பை பொறுத்து ஜூன் 12ஆம் தேதிக்கு முன்னதாகவோ அல்லது காலதாமதமாகவோ அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டு வருவது வழக்கம். அவ்வாறு திறக்கப்படும் தண்ணீர் மூலம் டெல்டா பாசனத்துக்குட்பட்ட 12 மாவட்டங்களில் சுமார் 16 லட்சம் ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகிறது. இந்த தண்ணீரை பயன்படுத்தி விவசாயிகள் குறுவை சாகுபடியில் முதலில் ஈடுபடுவார்கள். பின்னர் சம்பா, தாளடி சாகுபடியில் ஈடுபடுவார்கள். நடப்பாண்டு மேட்டூர் அணை மே மாதத்திலேயே 100 அடிக்கு மேல் நிரம்பியதால் மே 24ஆம் தேதி திறக்கப்பட்டது. மழை நீடிப்பதால் அணை 120 அடியாக நீடிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.