5 நாட்கள் ரெஸ்ட் எடுத்த கனமழை..திங்கட்கிழமை முதல் மீண்டும் வருதாம்..தமிழகத்தை புயல் தாக்குமா?
சென்னை: தமிழ்நாடு, புதுச்சேரியில் வரும் 19ஆம் தேதி கனமழைக்கான வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் நேற்று குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. மேலும், குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி 12 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 9ஆம் தேதி மாண்டஸ் புயல் மாமல்லபுரம் அருகே புயல் கரையை கடந்தது. அப்போது வீசிய பலத்த காற்று கடலோர கிராமங்களை சூறையாடியது. மரங்களும் வேரோடு சாய்ந்தன. மின் கம்பங்களும் சாய்ந்து விழுந்தன.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளிலும், மாமல்லபுரம் சுற்று வட்டார பகுதிகளிலும் புயலால் ஏற்பட்ட பாதிப்புகளை அதிகாரிகள் உடனுக்குடன் சரி செய்த காரணத்தால் இயல்பு வாழ்க்கை உடனடியாக திரும்பியது.

புயல் கரையை கடந்தும் கடந்த இரண்டு நாட்களாக தமிழகத்தில் பரவலாக மழை பெய்தது. மேற்கு தொடர்ச்சி மலையோர மாவட்டங்களில் கனமழை கொட்டி வருகிறது.
இந்த நிலையில் இந்திய பெருங்கடல், தெற்கு அந்தமான் கடல் மற்றும் தென்கிழக்கு வங்க கடலில் ஒட்டிய பகுதிகளில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி மேற்கு நோக்கி நகர்ந்து இன்று மேலும் வலுவடையும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் அது படிப்படியாக மேற்கு நோக்கி நகர்ந்து நாளை மறுநாள் வரை தீவிர நிலையிலேயே இருக்கும் எனவும் கூறப்பட்டுள்ளது. இதனால் அந்தமான் நிகோபார் தீவுகளில் இன்று கன மழை பெய்யயும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய வானிலை ஆய்வு மையம் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் நேற்று குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. மேலும், குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி 12 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த காற்றழுத்த தாழ்வு வலுப்பெற்று புயலாக மாறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 13ஆம் தேதி வளிமண்டல மேலடுக்கு சுழற்சி உருவான பின்னர் அது 17, 18, 19 ஆகிய தேதிகளில் புயலாக மாறி கரையை கடக்க வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த புதிய புயல் இலங்கை மற்றும் அதனை ஒட்டிய தமிழக பகுதிகளின் அருகில் கரையை கடக்க வாய்ப்புள்ளது என்றும் கூறப்படுகிறது.
இதனிடையே கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழ்நாட்டில் வருகிற 18 ஆம் தேதி வரை ஒரு சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மத்தியகிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். அந்தமான் கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
16ஆம் தேதியன்று தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். 17ஆம் தேதியன்று தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
18ஆம் தேதி மன்னார் வளைகுடா பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். இலங்கை கடலோரப்பகுதிகளை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications