ஐயா போகாதீங்க.. பார்க்கிங்கிலேயே தொடங்கிய சண்டை.. ஜெ.நினைவிடம் வரை நீண்ட அதிமுக மோதல்.. என்ன நடந்தது
சென்னை: தமிழக எதிர்க்கட்சி தலைவர் யார் என்பதை தேர்வு செய்வதில் அதிமுகவினர் இடையே கடும் மோதல் ஏற்பட்டுள்ளது. இன்று நடந்த கூட்டத்தில் ஓபிஎஸ்- இபிஎஸ் ஆதரவாளர்கள் இடையே கடுமையான மோதல் ஏற்பட்டு, கூட்டம் முடிவு எதுவும் எட்டப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது.
தமிழக சட்டசபைக்கான எதிர்க்கட்சி தலைவரை தேர்வு செய்வதற்கான ஆலோசனை கூட்டம் அதிமுக எம்எல்ஏக்கள் சார்பாக நடத்தப்பட்டது. தமிழக சட்டசபை தேர்தலில் அதிமுக தனியாக 66 இடங்களில் வென்றது.
ஏமாற முடியாது.. நான்தான் எதிர்க்கட்சி தலைவர்.. ஓபிஎஸ் விடாப்பிடி.. அதிமுக மீட்டிங்கில் என்ன நடந்தது?
இந்த நிலையில் இன்று எதிர்க்கட்சி தலைவரை தேர்வு செய்ய அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம், துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் கூட்டம் நடந்தது. 63 அதிமுக எம்எல்ஏக்கள் இதில் கலந்து கொண்டனர்.
மோதல்
இதில் கூட்டம் தொடங்கும் முன்பே அதிமுகவினர் இடையே மோதல் வெடித்துவிட்டது. அதிமுக அலுவலகத்தில் பார்க்கிங்கிலேயே அதிமுகவில் ஓபிஎஸ் - இபிஎஸ் ஆதரவாளர்கள் இடையே காரை நிறுத்துவதில் மோதல் ஏற்பட்டது. அங்கேயே ஓபிஎஸ்ஸுக்கு ஆதரவாக ஒரு கோஷ்டி கோஷம் எழுப்பியது. இன்னொரு பக்கம் இபிஎஸ்ஸுக்கு ஆதரவாக இன்னொரு கோஷ்டி கோஷம் எழுப்பியது.
உள்ளே மோதல்
அதன்பின் உள்ளேயும் அதிமுக எம்எல்ஏக்கள் மோதல் நீண்டது. இதில் ஓபிஎஸ் தரப்பு கண்டிப்பாக எதிர்க்கட்சி தலைவர் பதவி வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தது. கட்சியில் நான்தான் முக்கிய தலைவர், நீங்கள் எடுத்த தவறான முடிவால்தான் நாம் தோல்வி அடைந்தோம். அனுபவம், கட்சி ஒருங்கிணைப்பாளர் என்ற அடிப்படையில் எனக்கே எதிர்க்கட்சி தலைவர் பதவி கொடுக்க வேண்டும் என்று, ஓபிஎஸ் மீட்டிங்கில் அடித்து பேசி இருக்கிறார்.
கோபம்
இதற்கு எதிராக பேசிய இபிஎஸ்.. தமிழகம் முழுக்க நான்தான் பிரச்சாரம் செய்தேன். இந்த 66 வெற்றி நான் பெற்றுக்கொடுத்தது. தேனி மாவட்டத்தில் கூட உங்களால் முழுமையாக வெல்ல முடியவில்லை. அப்படி இருக்கும் போது எப்படி உங்களுக்கு எதிர்க்கட்சி தலைவர் பதவி கொடுக்க முடியும். நான்தான் எதிர்க்கட்சி தலைவர் என்று இபிஎஸ் உறுதியாக பேசி இருக்கிறார்.
மோதல்
உள்ளே கூட்டத்தில் இந்த மோதல் நடக்கும் போதே வெளியே கட்சி ஆபிசுக்கு அருகில் ஓபிஎஸ் - இபிஎஸ் ஆதரவாளர்கள் கடுமையாக மோதி உள்ளனர். மாறி மாறி கோஷம் எழுப்பி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளனர். ஓபிஎஸ்தான் எதிர்கட்சித் தலைவர் என்று ஒரு தரப்பு சொல்ல, இபிஎஸ்தான் எதிர்கட்சித் தலைவர் என்று இன்னொரு தரப்பு கோஷம் எழுப்பி பரபரப்பை கூட்டியது.
மீட்டிங்
இந்த நிலையில் அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டத்தில் முடிவு எதுவும் எட்டப்படாததால், கூட்டம் மே 10ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. இதனால் மரியாதை நிமித்தமாக இபிஎஸ், ஓபிஎஸ் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவிடத்திற்கு சென்றனர். ஆனால் அங்கும் அதிமுகவினர் மாற்றி மாற்றி கோஷம் எழுப்பினார்கள்.. ஐயா போயிடாதீங்க.. யாருக்கும் விட்டு தராதீங்க என்று இபிஎஸ் தொண்டர்கள் அவர் காரை மறித்து கோஷம் எழுப்பினார்கள்.
கோஷம்
பதிலுக்கு ஓபிஎஸ் ஆதரவாளர்களும் ஜெ நினைவிடத்தில் கோஷம் எழுப்பி ஓபிஎஸ்ஸுக்கு ஆதரவு தெரிவித்தனர். இதனால் மெரினா வந்த ஓபிஎஸ் - இபிஎஸ் உடனே சில நிமிடங்களில் கிளம்பி சென்றனர். அதிமுகவில் இரண்டு தரப்புக்கும் இடையே உருவாகி உள்ள மோதலால் கட்சியில் அடுத்து என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.