அடுத்த சிக்கல்.. பொன்முடிக்கு எதிரான லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. அதிரடி காட்டிய சென்னை ஹைகோர்ட்
சென்னை: முன்னாள் அமைச்சர் பொன்முடியின் சொத்துக்கள் முடக்கத்தை நீக்கி சிறப்பு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து லஞ்ச ஒழிப்பு துறை மேல் முறையீட்டு வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2006 - 2011ம் ஆண்டுகளில் திமுக ஆட்சி காலத்தில் உயர்கல்வித் துறை அமைச்சராக பதவி வகித்தபோது, வருமானத்துக்கு அதிகமாக ஒரு கோடியே 75 லட்சம் ரூபாய் அளவுக்கு சொத்துக்கள் சேர்த்ததாக, அமைச்சர் பொன்முடி மற்றும் அவருடைய மனைவி விசாலாட்சி ஆகியோருக்கு எதிராக 2011 ஆம் ஆண்டு லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிவு செய்தது.

அப்போது அவரது சொத்துக்களை லஞ்ச ஒழிப்புத்துறை முடக்கியது. இந்த முடக்கத்தை நீக்கி சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து லஞ்ச ஒழிப்பு துறை தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது.
இந்த மேல் முறையீட்டு வழக்கை விசாரித்த நீதிபதி ஜெயச்சந்திரன், சொத்து முடக்கத்தை நீக்கி சிறப்பு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு தவறாக இருந்தாலும், மேல் முறையீட்டு வழக்கில் தண்டனையும், அபராதமும் விதிக்கப்பட்டுள்ளதால் முந்தைய உத்தரவு நீடிக்காது எனக் கூறி லஞ்ச ஒழிப்புத் துறை மேல் முறையீட்டு வழக்கை தள்ளுபடி செய்து தீர்ப்பளித்தார்.
மேலும், லஞ்ச ஒழிப்புத் துறை புதிதாக நடவடிக்கை எடுக்க வேண்டும். புதிதாக சொத்து முடக்க நடவடிக்கைகளை எடுக்க, இந்த தள்ளுபடி உத்தரவு தடையாக இருக்காது என்றும் நீதிபதி தனது உத்தரவில் சுட்டிக்காட்டியுள்ளார்.
பொன்முடி வழக்கு தீர்ப்பு என்ன: முன்னதாக நேற்று முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு எதிரான சொத்துக்குவிப்பு வழக்கின் மேல்முறையிட்டு மனுவில் நேற்று தீர்ப்பளித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜெயசந்திரன், " குற்றவாளிகள் இருவரும் தங்கள் உடல் நலம் சரியில்லை என்று கூறி மருத்துவ அறிக்கைகளை தாக்கல் செய்திருக்கிறார்கள். இருவரும் உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளவர்களாக இருக்கிறார்கள். அதனால், இந்த வழக்கின் குற்றத்தின் தன்மை, இதன் மூலம் சமுதாயத்தில் ஏற்படும் தாக்கம், அவர்கள் இருவரின் கருத்து ஆகியவற்றின் அடிப்படையில் தண்டனை வழங்க முடிவு செய்துள்ளேன்.
அதன்படி பொன்முடிக்கும், அவரது மனைவி விசாலாட்சிக்கும் 3 ஆண்டு சிறை தண்டனையும், தலா ரூ.50 லட்சம் அபராதமும், அபராதம் செலுத்த தவறினால் கூடுதலாக 6 மாத சிறை தண்டனையும் விதிக்கிறேன்" என்று கூறினார். அதேநேரம் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வதற்காக சிறை தண்டனையை மட்டும் 30 நாட்கள் நிறுத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார். இந்த தீர்ப்பின் காரணமாக அமைச்சர் பதவியை இழந்த பொன்முடி, எம்எல்ஏ பதவியையும் இழந்துள்ளார்.












Click it and Unblock the Notifications