சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் வெற்றியை எதிர்த்து வழக்கு.. உதயநிதிக்கு நோட்டீஸ்
சென்னை: சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதி திமுக சட்ட மன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் வெற்றி பெற்றதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் தேர்தல் ஆணையம் மற்றும் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் பதில் அளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் சட்டசபை தேர்தல் கடந்த ஏப்ரல் மாதம் நடந்தது. அதிமுக பாஜக பாமக உள்ளிட்ட கட்கிள் அடங்கிய கூட்டணி ஒரு அணியாகவும், திமுக காங்கிரஸ், இடதுசாரிகள் அடங்கிய கூட்டணி ஒரு அணியாகவும் பிரதானமாக மோதின. இது தவிர, மக்கள் நீதி மய்யம் ஒரு அணியாகவும், அமமுக ஒரு அணியாகவும், நாம் தமிழர் கட்சி தனியாகவும் போட்டியிட்டது.

இந்த தேர்தலில் திமுக கூட்டணி மிகப்பெரிய வெற்றி பெற்று 10 வருடங்களுக்கு பின் ஆட்சியை பிடித்தது. திமுக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியைகைப்பற்றிய நிலையில் திமுக தலைவர் முக ஸ்டாலின் முதலமைச்சராக மே 7ம் தேதி பொறுப்பேற்றார்.
திமுக இளைஞரணி செயலாளரும், ஸ்டாலினின் மகனுமாகிய உதயநிதி ஸ்டாலின் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில், தாத்தா கருணாநிதிக்கு பிடித்த தொகுதியான சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் திமுக வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி பெற்று எம்எல்ஏ ஆனார். தன்னை எதிர்த்து போட்டியிட்ட பா.ம.க. வேட்பாளர் கசாலியை விட 69 ஆயிரத்து 355 வாக்குகள் வித்தியாசத்தில் உதயநிதி ஸ்டாலின் வெற்றி பெற்றார்.
இந்நிலையில் உதயநிதி ஸ்டாலினின் வெற்றியை எதிர்த்து, அத்தொகுதியின தேசிய மக்கள் கட்சி வேட்பாளரான வழக்கறிஞர் எம்.எல்.ரவி என்பவர், உயர் நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கு தொடர்ந்தார்.
அதில், "உதயநிதி ஸ்டாலின் தாக்கல் செய்த வேட்பு மனுவில், தன் மீதான குற்ற வழக்குகள் குறித்து தவறான தகவல்களைத் தெரிவித்துள்ளார். அவரது வேட்பு மனுவை ஏற்றுக்கொண்டதை செல்லாது என அறிவிக்க வேண்டும். தொகுதியில் தேர்தல் நியாயமாக நடைபெறவில்லை என அறிவிக்க வேண்டும்" என மனுவில் கோரியிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பாரதிதாசன், தேர்தல் ஆணையம் மற்றும் உதயநிதி ஆகியோர் 2 வாரத்தில் பதில் அளிக்க உத்தரவிட்டு, விசாரணையை அக்டோபர் 1ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.












Click it and Unblock the Notifications