கமல் கட்சிக்கு டார்ச் லைட் சின்னம் கிடைக்குமா - தேர்தல் ஆணையம் பதில் தர ஹைகோர்ட் உத்தரவு
கமல் கட்சிக்கு டார்ச் லைட் சின்னம் கிடைக்குமா - தேர்தல் ஆணையம் பதில் தர ஹைகோர்ட் உத்தரவு
சென்னை: தமிழகத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு பேட்டரி டார்ச் லைட் சின்னம் ஒதுக்க கோரிய மனுவுக்கு பதிலளிக்கும்படி, தேர்தல் ஆணையத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி கடந்த லோக்சபா தேர்தலில் போட்டியிட்ட போது பேட்டரி டார்ச் லைட் சின்னம் ஒதுக்கப்பட்டது. கையில் டார்ச் உடன் பிரச்சாரம் செய்தார் கமல். இந்த ஆண்டு நடைபெற உள்ள லோக்சபா தேர்தலில் டார்ச் லைட் சின்னமே கிடைக்கும் என்ற நம்பிக்கையில் தனது பிரச்சார வாகனத்திலும் டார்ச் லைட் சின்னத்தை வரைந்து பிரச்சாரத்தை ஆரம்பித்து விட்டார்.
இந்த நிலையில் சட்டசபைத் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு புதுச்சேரியில் மட்டும் டார்ச் லைட் சின்னம் ஒதுக்கப்பட்டது. தமிழகத்தில் எம்ஜிஆர் மக்கள் கட்சிக்கு பேட்டரி டார்ச் லைட் சின்னம் ஒதுக்கப்பட்டது. இதனால் கமல்ஹாசன் மட்டுமல்லாது தொண்டர்களும் அதிர்ச்சியடைந்தனர்.
மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு புதுச்சேரியில் மட்டும் பேட்டரி டார்ச் லைட் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், தமிழகத்தில் இந்த சின்னம் ஒதுக்கப்படவில்லை எனக் கூறி, கட்சியின் வடக்கு மற்றும் கிழக்கு அமைப்பு பொதுச்செயலாளரான, ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரி ஏ.ஜி.மவுரியா சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
அந்த மனுவில், மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு கடந்த தேர்தல்களில் பேட்டரி டார்ச்லைட் சின்னம் ஒதுக்கப்பட்டு மக்களை சந்தித்து வந்துள்ளது. தற்போது நடைபெறவுள்ள தேர்தலில் புதுச்சேரியில் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு பேட்டரி டார்ச் லைட் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால் தமிழகத்தில் இந்த முறை அந்த சின்னம் கட்சிக்கு ஒதுக்கப்படாதது அதிர்ச்சியளிக்கிறது எனக் கூறியுள்ளார்.
எம்ஜிஆர் மக்கள் கட்சிக்கு பேட்டரி டார்ச் லைட் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், அந்த சின்னத்தை பயன்படுத்த அக்கட்சிக்கு தடை விதிக்க வேண்டும் எனவும், தேர்தல் சின்னங்கள் ஒதுக்கீடு உத்தரவுப்படி, பேட்டரி டார்ச் லைட் சின்னத்தை மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு ஒதுக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் எனவும் கோரப்பட்டுள்ளது.
இந்த வழக்கு நீதிபதிகள் சத்தியநாராயணன் மற்றும் நக்கீரன் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்த போது, தேர்தல் சின்னங்கள் ஒதுக்கீட்டு உத்தரவின்படி, அங்கீகரிக்கப்படாத பதிவு செய்யப்பட்ட கட்சிகளுக்கு இரு தேர்தல்களில் பொது சின்னம் ஒதுக்கப்பட வேண்டும் எனவும், அந்த வகையில் லோக்சபா தேர்தலிலும், சட்டமன்ற இடைத் தேர்தலிலும் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு பேட்டரி டார்ச் லைட் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், புதுச்சேரிக்கு மட்டும் டார்ச் லைட் சின்னம் ஒதுக்கப்பட்டதாகவும், எதிர்வரும் சட்டமன்ற தேர்தலுக்கு பிரச்சாரம் துவங்கியுள்ள நிலையில், அந்த சின்னத்தையே ஒதுக்கக் கோரிய விண்ணப்பத்தை பரிசீலிக்க உத்தரவிட வேண்டும் என மக்கள் நீதி மய்யம் கட்சி தரப்பில் வாதிடப்பட்டது.
மனு குறித்து தேர்தல் ஆணையத்தின் கருத்துக்களைப் பெற அவகாசம் வழங்க வேண்டும் என தேர்தல் ஆணையம் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதையடுத்து, மனுவுக்கு விளக்கமளிக்கும்படி தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை பிப்ரவரி 2ம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.