அதிமுக பொதுக்குழு நடக்கும் பகுதியில் போலீஸ் குவிப்பு.. கெடுபிடிகள் தீவிரம்- இன்றே பரபரக்கும் வானகரம்
சென்னை : அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெறும் பகுதியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் அளிக்கப்பட்டுள்ளன. அந்த வழியாகச் செல்லும் வாகனங்கள் தீவிர சோதனைக்குப் பிறகே அனுமதிக்கப்பட்டு வருகின்றன.
ஒற்றைத் தலைமை தொடர்பாக கட்சிக்குள் இருவேறு கருத்துகள் நிலவி வரும் நிலையில், நாளை பொதுக்குழுக் கூட்டத்தை திட்டமிட்டப்படி நடத்த எடப்பாடி பழனிசாமி தரப்பினர் தயாராகி வருகின்றனர்.
பொதுக்குழு நடைபெற இருக்கும் பகுதியில் பாதுகாப்பு பணியில் 500க்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபட்டுள்ளனர். பொதுக்குழு நடைபெறும் இடத்திலிருந்து 100 மீட்டருக்கு முன்பாக, பேரிகார்டுகள் அமைத்து பலத்த சோதனை நடைபெற்று வருகிறது.

ஒற்றைத் தலைமை
அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரத்தால் பெரும் குழப்பங்கள் நிகழ்ந்து வரும் நிலையில், அதிமுக பொதுக்குழுக் கூட்டம் நாளை சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாசலபதி திருமண மண்டபத்தில் நடைபெற உள்ளது. இந்தப் பொதுக்குழு கூட்டத்தில் ஓ.பன்னீர்செல்வத்தின் எதிர்ப்புக்கு மாறாக ஒற்றைத் தலைமையை கொண்டுவர அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி முயற்சித்து வருகிறார்.

எடப்பாடி பதில்
ஒற்றைத் தலைமையை கொண்டு வந்தால், கட்சியில் பிளவு ஏற்பட்டு, தொண்டர்கள் மத்தியில் அதிருப்தி உருவாகி, சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்பட வாய்ப்பு உள்ளது என்பதால் பொதுக்குழுவை ரத்து செய்ய வேண்டும் என ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் இணை ஒருங்கிணைப்பாளரான எடப்பாடி பழனிசாமிக்கு கடிதம் எழுதியுள்ளார். ஆனால், திட்டமிட்டபடி அதிமுக பொதுக்குழு நடைபெறும் என்றும் அதில் நீங்களும் பங்கேற்க வேண்டும் என்றும் ஓ.பன்னீர்செல்வத்திற்கு எடப்பாடி பழனிசாமி பதில் கடிதம் அனுப்பியுள்ளார்.

இன்று விசாரணை
பொதுக்குழு கூட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்று ஓபிஎஸ் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. பொதுக்குழுவிற்கு தடை கோரிய வழக்கு இன்று பிற்பகல் 3 மணிக்கு நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி முன்பு விசாரணைக்கு வரவுள்ளது. கட்சி விதிகளை திருத்த தடை கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கும் இன்று பிற்பகலில் விசாரிக்கப்படுகிறது.

சட்டம் ஒழுங்கு
மேலும் பொதுக்குழு கூட்டத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்பட வாய்ப்புள்ளதால் பொதுக்குழுவிற்கு காவல்துறை அனுமதி கொடுக்கக்கூடாது என்று ஆவடி மாநகர காவல் ஆணையரிடம் ஓபிஎஸ் மனு அளித்தார். ஆனால், தனியார் மண்டபத்தில் நடப்பதால் அனுமதி மறுக்க முடியாது என காவல்துறை மறுத்துள்ளது. அதேநேரம், அதிமுக பொதுக்குழுவுக்கு பாதுகாப்பு கேட்டு தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணையில், பாதுகாப்பு வழங்கி சட்டம் ஒழுங்கை நிலை நாட்ட வேண்டும் என காவல்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

விறுவிறு ஏற்பாடு
சென்னையை அடுத்த வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாசலபதி திருமண மண்டபத்தில் பொதுக்குழு நடைபெறுவதையொட்டி ஏராளமான வரவேற்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. கட்அவுட், பேனர்கள் வைக்கும் பணிகளிலும், அலங்காரப் பணிகளிலும் நூற்றுக்கணக்கானோர் ஈடுபட்டுள்ளனர். பொதுக்குழு நடைபெறும் மண்டபத்திற்கு முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, நத்தம் விஸ்வநாதன், தங்கமணி, விஜயபாஸ்கர் ஆகியோர் வருகை தந்து ஏற்பாடுகளை பார்வையிட்டனர்.

தீவிர பாதுகாப்பு
அதிமுகவில் நிலவி வரும் ஓபிஎஸ் -ஈபிஎஸ் தரப்பினருக்கு இடையேயான மோதல் போக்கு காரணமாக, வானகரம் மண்டபத்தில் கூடுதல் பாதுகாப்பு வழங்க காவல்துறை திட்டமிட்டுள்ளது. காலை முதல் தற்போது வரை 500க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு, பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும், பொதுக்குழு நடக்கும் இடத்திற்கு 100 மீட்டர் தொலைவுக்கு முன்பாக, பேரிகார்டுகள் போடப்பட்டு, பலத்த சோதனைக்கு பின்பே உள்ளே அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

2500 போலீசார்
நாளை சோதனைகள் இன்னும் தீவிரப்படுத்தப்படும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர். நாளை மண்டபத்தை சுற்றிலும் 2500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த ஆவடி காவல் ஆணையரகம் முடிவு செய்துள்ளது. ஈபிஎஸ் - ஓபிஎஸ் தரப்பினரின் மோதல் போக்கால் அசம்பாவிதம் ஏதும் ஏற்படாமல் இருக்க போலீசார் தொடர்ந்து தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் பொதுக்குழு கூட்டம் நடக்கும் பகுதியில் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.












Click it and Unblock the Notifications