“ஒரே போடு.. உடனடி மாற்றம்” இதுல திமுகவை அடிச்சிக்க முடியுமா? - திரும்பிப் பார்க்க வைத்த எம்.பி!
சென்னை: ரயில்வே இணையதள பக்கங்களில் திவ்யங்ஜன் எனும் இந்தி வார்த்தை இருப்பதை ஆங்கிலத்தில் மாற்ற வேண்டும் என நாடாளுமன்றத்தில் தி.மு.க எம்.பி கோரிக்கை விடுத்தார்.
தி.மு.க எம்.பி செந்தில் குமாரின் கோரிக்கையை ஏற்று அந்த வார்த்தை ஆங்கிலத்தில் மாற்றப்படும் என மத்திய அரசின் ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மத்திய அரசின் இந்தி திணிப்பு முயற்சிகளை தி.மு.க தொடர்ந்து எதிர்த்து வரும் நிலையில், தி.மு.க எம்.பியின் கோரிக்கையால் இந்தி வார்த்தை ஆங்கிலத்தில் மாற்றப்பட்டுள்ளதற்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
மோடி ஊழல்வாதியா? அவர் நேர்மையானவர், தூய்மையானவர்! கொந்தளித்த இந்நாள் திமுக ஆதரவாளர் ராமசுப்ரமணியன்
இந்தியில் பெயர்கள்
மோடி தலைமையிலான பாஜக அரசு மத்தியில் ஆட்சிப் பொறுப்பேற்றது முதல் இந்தி திணிப்பு முயற்சியை கடுமையாக மேற்கொண்டு வருகிறது. பாஜக அரசின் திட்டங்களின் பெயர்கள் தொடங்கி, இணையதளம், அலுவலக பயன்பாடு வரை இந்தியை முன்னிறுத்தி வருகின்றனர்.
அதுவும் சமீபகாலமாக இந்தி திணிப்பு முயற்சிகள் அடிக்கடி சர்ச்சைக்கு உள்ளாகி வருகின்றன. ஆனாலும், மத்திய அரசும், மத்திய அமைச்சர்களும் கொஞ்சமும் சளைக்காமல் தொடர்ந்து மொழிப் பிரச்சனைகளைக் கிளப்பி வருகின்றனர்.
திமுக எதிர்ப்பு
அன்றைய காங்கிரஸ் அரசின் இந்தி திணிப்பு முயற்சிகளை எதிர்த்து பெரும் போராட்டங்களை நிகழ்த்திய இயக்கம் தி.மு.க. இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டங்களின் வழியாகவே இன்றும் தி.மு.கவின் ஆரம்பகாலம் நினைவுகூரப்படுகிறது. அந்தளவுக்கு இந்தி எதிர்ப்பும், தி.மு.கவும் பிண்ணிப் பிணைந்தது.
பா.ஜ.க ஆட்சிக்கு வந்த பிறகு அவ்வப்போது மேற்கொள்ளப்பட்டு வரும் இந்தி திணிப்பு முயற்சிகளுக்கு தமிழகத்திலிருந்து அதிகமான எதிர்ப்புக் குரல் எழுந்து வருகிறது. குறிப்பாக, தி.மு.க எம்.பிக்கள் இந்தி திணிப்புக்கு எதிராக நாடாளுமன்றத்திலும், பொதுவெளியிலும் தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றனர்.
திவ்யங்ஜன்
இந்நிலையில், இந்திய ரயில்வேயின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான டிக்கெட், அறிவிப்பு குறித்த விபரங்கள் திவ்யங்ஜன் (Divyangjan) என்ற இணைப்பின் கீழ் உள்ளன. இந்த வார்த்தையை இந்தி பேசாத மாநில மக்கள் உச்சரிக்கக் கூட சிரமப்படுகின்றனர். அதன் அர்த்தம் யாருக்கும் தெரியாது. பிறகு எப்படி மாற்றுத்திறனாளிகள் இதை பயன்படுத்த முடியும்?
சமூக நீதி கொள்கையின் படி இந்தி வார்த்தையை 'Persons with Disabilities' என்று மாற்ற வேண்டும் எனக் கோரி நாடாளுமன்றத்தில் கேள்வி நேரத்தின் போது மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தார்.
ரயில்வே ஏற்பு
தி.மு.க எம்.பி செந்தில் குமாரின் கோரிக்கையை ஏற்ற இந்திய ரயில்வே விரைவில் அதற்கான மாற்றத்தைச் செய்யவுள்ளதாக தருமபுரி தி.மு.க எம்.பி செந்தில் குமாருக்கு கடிதம் எழுதியுள்ளது. இந்த தகவலை எம்.பி செந்தில் குமார் தனது ட்விட்டர் பக்கத்திலும் தெரிவித்துள்ளார்.
தி.மு.க எம்.பியின் கோரிக்கையால் இந்தியில் இருந்த வார்த்தை ஆங்கிலத்திற்கு மாற்றப்படுவது வரவேற்பை பெற்றுள்ளது. இதன் காரணமாக செந்தில் குமார் எம்.பியை பலரும் பாராட்டி வருகின்றனர்.