தமிழர்களை எரிக்கும் “இந்தீ”.. சின்னசாமி முதல் தங்கவேல்! 100ஐ தொட்ட பலி.. ஓயாத திணிப்பும் எதிர்ப்பும்
சென்னை: இந்தி திணிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக மூத்த பிரமுகர் தங்கவேல் என்பவர் மேட்டூரில் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டு இருக்கிறார். இந்தி திணிப்பு போராட்டம் தொடங்கப்பட்டது எப்போது? எத்தனை பேர் தற்கொலை செய்து கொண்டார்கள்? என்பது பற்றி விரிவாக பார்ப்போம்.
இந்திய வரைபடத்தில் தமிழ்நாடு கீழே இருந்தாலும், அனைத்து முக்கிய விவகாரங்களிலும் அனைத்து மாநிலங்களுக்கும் முன்னோடியாக இருந்து வழிநடத்துவது தமிழ்நாடுதான். இடஒதுக்கீடு தொடங்கி நீட் வரை பல விசயங்களை இதில் அடுக்கிக்கொண்டே செல்லலாம்.
அதில் முதன்மையானது இந்தி எதிர்ப்பு. பல மொழிகளை பேசும் இந்தியாவில் மொழிவாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்டு இருக்கும் சூழலில் சுதந்திரத்திற்கு முன்பிருந்தே தமிழ்நாட்டில் இந்தியை திணிக்கும் முயற்சி தொடர்ந்து நடந்துகொண்டு இருக்கிறது.
இந்தி திணிப்புக்கு எதிராக கொதித்தெழுந்த திமுக நிர்வாகி.. தீக்குளித்து தற்கொலை.. பதற்றம்!
1937 முதல்
இதற்கு எதிராக இந்தியாவிலேயே முதன்முதலில் குரல் எழுப்பியது தமிழ்நாடுதான். கடந்த 1937 ஆம் ஆண்டு சென்னை மாகாண தேர்தலில் காங்கிரஸ் வெற்றிபெற்று ராஜாஜி முதலமைச்சராகி சில நாட்களே ஆன நிலையில், இந்தி கட்டாயமாக்கப்படும் என்ற அறிவிப்பை வெளியிட்டார். பள்ளிகளில் இந்தியை கட்டாயமாக கற்பிக்க வேண்டும் என்ற உத்தரவு 1938 ஆம் ஆண்டு பிறப்பிக்கப்பட்டது.
சிறையில் அடைக்கப்பட்ட பெரியார்
வெகுண்டெழுந்தது தமிழ்நாடு. தந்தை பெரியார் தலைமையிலும், தமிழ் அமைப்புகள் தலைமையிலும் மாபெரும் போராட்டங்கள் மாநிலம் முழுவதிலும் இருந்து வெடித்தன. இதற்காக பெரியாரை சிறையில் அடைத்தது அரசு. இருப்பினும் தீரமுடன் போராட்டத்தை தொடர்ந்தார்கள் தமிழர்கள். இதனை தாக்குபிடிக்க முடியாமல் கட்டாய இந்தி உத்தரவை கைவிடுவதாக அறிவித்தது ராஜாஜி அரசு.
சிறையில் மரணம்
இந்த போராட்டத்தால் சிறையில் அடைக்கப்பட்ட நடராசன் மற்றும் தாளமுத்து ஆகியோர் அங்கேயே உயிரிழந்தனர். அதன் பின்னர் 1948 சுதந்திரத்துக்கு பிறகு மீண்டும் இந்தி கட்டாயமாக்கப்பட்டு, தீவிர போராட்டம் காரணமாக 1950 ஆம் ஆண்டு உத்தரவு திரும்பப்பெறப்பட்டது. பிறகு சுமார் 13 ஆண்டுகள் ஓய்ந்திருந்த இந்தி திணிப்பு முயற்சி, 1963 ஆம் ஆண்டு வேறு வடிவில் முளைத்து வரத்தொடங்கின.
இந்தி எதிர்ப்பு போராட்டம்
அந்த ஆண்டு கொண்டு வரப்பட்ட ஆட்சி மொழி சட்டத்தில், இந்தியுடன் ஆங்கிலத்தையும் ஆட்சி மொழியாக "தொடரலாம்" என்று இடம்பெற்றதை
"தொடரும்" என்று மாற்ற வலியுறுத்தினார் அறிஞர் அண்ணா. அதனை பொருட்படுத்தாமல் கடும் எதிர்ப்பை மீறி அந்த சட்டத்தை முன்னாள் பிரதமர் நேரு நிறைவேற்ற, தமிழ்நாட்டில் மீண்டும் வெடித்தது இந்தி எதிர்ப்பு போராட்டம்.
கீழப்பழுவூர் சின்னசாமி
போராட்டம் உக்கிரமடைந்த நேரத்தில் தமிழ்நாட்டையே திரும்பிப்பார்க்க வைத்த துயரம் திருச்சியில் அரங்கேறியது. அங்கு கீழப்பழுவூர் சின்னசாமி என்ற தமிழ் ஆர்வலர் இந்தி திணிப்புக்கு எதிராக தீக்குளித்து தன் உயிரையே தமிழுக்கு விலையாக கொடுத்தார். இந்த சூழலில் தகித்துக் கொண்டிருந்த தமிழ்நாட்டில் கூடுதலாக எண்ணெய் ஊற்றும் வகையில் 1964 ஆம் ஆண்டு மும்மொழிக் கொள்கையை அறிவித்தார் தமிழ்நாடு முதலமைச்சராக இருந்த பக்தவத்சலம்.
அறிஞர் அண்ணா கைது
எதிர்ப்புகளை பொருட்படுத்தாமல் பிடிவாதமாக இருந்த பக்தவத்சலம் அரசுக்கு எதிராக பெரும் போராட்டத்துக்கு தயாரானது தமிழ்நாடு. இந்தி எதிர்ப்பு சங்கம் உருவாக்கப்பட்டு மாபெரும் போராட்டம் நடைபெற்றது. அறிஞர் அண்ணா உள்ளிட்ட பலர் தடுப்புக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டார்கள்.
வெடித்த கலவரம்
இந்தி திணிப்பை எதிர்த்து மதுரையில் ஊர்வலம் நடைபெற்றது. அப்போது அங்கு இருந்த காங்கிரஸ் அலுவலகத்தின் பந்தல் தீ வைக்கப்பட்டது. இதனால் மதுரை மாவட்டம் முழுவதும் மூண்ட கலவரம் தமிழ்நாடு முழுவதும் பரவியது. ரயில்கள் எரிக்கப்பட்டன. அப்போது ஜனவரி 26 ஆம் தேதி சென்னை கோடம்பாக்கத்தில் சிவலிங்கம் என்பவர் தீக்குளித்து இறந்தார்.
தொடர்ந்த தற்கொலைகள்
ஜனவரி 27 ஆம் தேதி அரங்கநாதன் என்பவர் தீக்குளித்து உயிர் துறந்தார். அவரை தொடர்ந்து சாரங்கபாணி, வீரப்பன், முத்து ஆகியோரும் தீக்குளித்து உயிரிழந்தனர். விராலிமலையை சேர்ந்த சண்முகம் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார். மேலும் பலர் ஆங்காங்கே இதுபோல் தற்கொலை செய்ததால் தமிழ்நாடே சோகத்தில் மூழ்கியது.
100 ஐ தாண்டு மரணம்
ஜனவரி 25 ஆம் தேதிக்கு பிறகு தமிழ்நாடு முழுவதும் நடைபெற்ற போராட்டங்கள் மற்றும் கலவரங்களின்போது பல இடங்களில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. அதில் போராட்டத்தில் பங்கேற்ற மாணவர்கள், தமிழ் ஆர்வலர்கள் என பலர் கொல்லப்பட்டனர். ஏராளமான மாணவர்கள் தீக்குளித்து இறந்தனர். இந்த எண்ணிக்கை 70ல் இருந்து 100 ஐ தாண்டும் என்றும் கூறப்படுகிறது. தமிழுக்காக உயிர் தியாகம் செய்த இந்த தியாகிகளின் வரிசையில் தற்போது இணைந்து இருக்கிறார் தங்கவேல்.
தற்போது பயன்
இந்தியாவையே திரும்பிப் பார்க்க வைத்த 1965 இந்தி எதிர்ப்பு போராட்டத்தின் விளைவாகவே இன்று வரை மற்ற மாநிலங்களைபோல் தமிழ்நாட்டில் இந்தியை திணிக்க முடியவில்லை. அப்போதைய முதலமைச்சர் பக்தவத்சலம் கொண்டு வந்த மும்மொழிக்கொள்கை அடுத்த உடனே அகற்றப்பட்டு 2 மொழிக் கொள்கையே இன்றளவும் தமிழ்நாட்டில் தொடர்ந்து அமலில் இருந்து வருகிறது.
திமுகவின் போராட்டம்
இந்த சூழலில் வேறு சில வழிகளில் தமிழ்நாட்டில் இந்தியை திணிப்பதற்கான முயற்சிகள் நடந்து வருவதாக தமிழார்வலர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். அண்மையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் நடைபெற்ற அலுவல் ஆய்வுக் கூட்டத்தில் இந்தியை திணிக்கும் பரிந்துரைகள் இடம்பெற்றதாக கூறி சில வாரங்களுக்கு முன் பெரும் போராட்டத்தையே திமுக நடத்தி முடித்தது. இது மேற்கு வங்கம், கர்நாடகம், கேரளாவிலும் எதிரொலித்தது.
ஓயாத மத்திய அரசு
இந்த சம்பவங்களை வைத்து பார்க்கையில் சுதந்திரம் பெற்று 75 வது ஆண்டு அமுத பெருவிழா கொண்டாடும் காலம் வரையிலும் தமிழ்நாட்டில் இந்தியை திணிப்பதற்கான முயற்சிகள் ஒரு பக்கம் தொடர்ந்து கொண்டே இருக்க மறுபக்கம், அதே வீரியத்துடன் எதிர்க்கும் நிலையும் தொடர்வதை அறியமுடியும். தங்கவேலுவின் தற்கொலையும் இதற்கு ஓர் உதாரணம். ஆனால், காரணம் எதுவாக இருப்பினும் தற்கொலையை நியாயப்படுத்த முடியாது.