இலங்கை தமிழர்கள் கொல்லப்பட்டனர்.. ராகுல் காந்தி தமிழன் என்று எப்படி சொல்லலாம்? ஆவேசமான ஜெயக்குமார்
ராகுல்காந்தி தமிழன் என்று சொல்வதில் என்ன முகாந்திரம் உள்ளது என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னை: திமுக உடன் சேர்ந்து ஒன்றரை லட்சம் தமிழினத்தையே கொலை செய்து விட்டு இன்றைக்கு தமிழன் என்று சொல்கிறார் ராகுல் காந்தி. அவர் தமிழன் என்று சொல்வதற்கு என்ன முகாந்திரம் உள்ளது என்று கேட்ட ஜெயக்குமார் வரலாறு அவரை மன்னிக்காது என்று ஆவேசமாக தெரிவித்தார்.
லோக்சபாவில் நேற்று குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் பங்கேற்று காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும் வயநாடு தொகுதி எம்.பியுமான ராகுல் காந்தி பேசினார்.
நீட் தேர்வு விலக்கு வேண்டும் என தமிழகம் உங்களிடம் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகிறது. தமிழகத்தின் கோரிக்கைகள் உங்கள் காதுகளுக்கு எட்டவில்லை. தமிழகம் மீண்டும் மீண்டும் நீட் தேர்விலிருந்து விலக்கு வேண்டும் என்று உங்களிடம் கோரிக்கை வைக்கும். நீங்கள் மறுத்து அவர்களை வெளியேற்றுகிறீர்கள் என்று தெரிவித்தார்.

சம உரிமை கொடுங்கள்
மக்களின் கருத்தை அரசர் கேட்காது போல உங்கள் அரசு செயல்படுகிறது. தமிழ் மொழியும், தமிழ் கலாச்சாரமும் தனித்துவம் கொண்டவை. அவற்றை மதித்து சம உரிமை கொடுக்கப்பட வேண்டும். அனைத்து மாநில மக்களுக்கும் சமஉரிமை கொடுக்கப்பட வேண்டும்.

மாநிலங்களின் ஒன்றியம்
நீங்கள் அரசியலமைப்பைப் படித்திருந்தால், இந்தியாவை மாநிலங்களின் ஒன்றியம் என்று குறிப்பிட்டிருப்பதைக் காண முடியும். இந்தியா என்றால் இரண்டு விதமான பார்வைகள் உள்ளன. அதில் ஒன்று இந்தியா என்பது மாநிலங்களின் ஒன்றியம். ஒரு மாநிலத்துடன் பேசுவது, அதன் பிரச்சனைகள் பற்றி பேச்சுவார்த்தை நடத்துவதுதான் ஒன்றியத்தின் பணிகள்.

தமிழகத்தை உங்களால் ஆள முடியாது
கூட்டாட்சி என்பதே அதன் அர்த்தம். தமிழகத்தில் உள்ள என் சகோதரரிடம் உங்களுக்கு என்ன வேண்டும் என நான் கேட்பேன். அவர் தேவையை என்னிடம் சொல்வதுபோல எனக்கு தேவையானதை நானும் கேட்டுப் பெறுவேன். இதுதான் கூட்டாட்சி. இது ராஜ்ஜியம் அல்ல. இந்தியா ஒரு ராஜ்ஜியம் கிடையாது; நீங்கள் ராஜாவும் இல்லை. இதை மறந்துவிடாதீர்கள். மாநில சுயாட்சியில் மொத்த இந்தியாவும் தமிழகத்திடம் இருந்து கற்றுக்கொள்ள வேண்டும். உங்கள் வாழ்நாள் முழுவதும் தமிழக மக்களை உங்களால் ஆள முடியாது. அது உங்களால் முடியவே முடியாது என்று ஆவேசமாக பேசினார் ராகுல்காந்தி.

தமிழன் என்று சொல்வதா?
நாடாளுமன்ற வளாகத்தைவிட்டு வெளியேவரும் போது, தமிழகத்தை அதிகமுறை உச்சரித்தது ஏன் என அவரிடம் ஒருவர் கேள்வியெழுப்பினார். அதற்கு நானும் ஒரு தமிழன்தான் என்று பதில் அளித்தார். ராகுல்காந்தியின் பேச்சு தற்போது சமூக வலைத்தளங்களில் பேசு பொருளாகி உள்ளது. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரிடம் இது குறித்து செய்தியார்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த அமைச்சர் ஜெயக்குமார், தமிழன் என்று சொல்வதற்கே அவருக்கு முகாந்திரம் இல்லை என்று தெரிவித்தார்.

வரலாறு மன்னிக்காது
ஒட்டு மொத்தமாக திமுக உடன் சேர்ந்து ஒரு தமிழினத்தையே குளோஸ் செய்தவர்கள். வரலாறே அவர்களை மன்னிக்காது. ஒன்றரை லட்சம் தமிழர்களின் ஆன்மா அவர்களை மன்னிக்கவே மன்னிக்காது. தமிழினத்தையே கொன்று குவித்து விட்டு இப்போது தமிழன் தமிழன் என்று பேசினார் தமிழர்கள் நம்ப மாட்டார்கள் என்றும் ஜெயக்குமார் ஆவேசமாக தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications