தமிழ்நாடு.. இ-பாஸ் கேட்டு எல்லோரும் விண்ணப்பிக்க முடியாது.. யாருக்கெல்லாம் அனுமதி?
சென்னை: இ-பாஸ் மறுபடியும் தமிழ்நாட்டில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. முன்பு ஊட்டி, கொடைக்கானல் உட்பட 5 கோடை வாசஸ்தலங்களுக்கு மட்டுமே இ-பாஸ் அறிமுகம் செய்யப்பட்டது. இப்போது திருமணத்திற்கும் இ-பாஸ் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
ஊரடங்கு மிக கடுமையாக பின்பற்றப்பட்டபோது, திருமணத்திற்கு செல்ல இ-பதிவு ஆப்ஷன் நீக்கப்பட்டது. இப்போது தமிழ்நாடு இ-பதிவு தளத்தில் திருமணத்திற்கு பதிவு செய்ய ஆப்ஷன் இணைக்கப்பட்டுள்ளது.
அதேநேரம், திருமணங்களுக்கு செல்ல, இ-பதிவு செய்தால் போதாது. இ-பாஸ் அவசியம்.
எப்படி பதிவு செய்ய வேண்டும்
மணப்பெண் அல்லது மணமகன், அல்லது அவர்களின் பெற்றோர், இ-பாஸ் கேட்டு விண்ணப்பிக்கலாம். வேறு யாரும் விண்ணப்பிக்க முடியாது. சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களுக்கு ஊரடங்கில் தற்போது அதிக தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளன. ஆனால், இந்த மாவட்டங்களுக்கு இடையே திருமணத்திற்காக வாகனங்களில் பயணிக்கவும் இ-பாஸ் அவசியம். ஆம்.. சென்னையிலிருந்து ஒருவர் காஞ்சிபுரத்திற்கோ, செங்கல்பட்டுக்கோ, திருவள்ளூருக்கோ பயணிக்கவும், அதேபோல அந்த மாவட்டக்காரர்கள் சென்னைக்கு பயணிக்கவோ திருமணம் தவிர்த்த பிற காரணம் என்றால் இ-பதிவும், திருமணம் என்றால் இ-பாஸ்சும் அவசியம்.
50 பேருக்கு அனுமதி
திருமணத்தில் அதிகபட்சம் 50 பேருக்கு மட்டுமே, அனுமதி வழங்கப்படும். எனவே அதற்கு ஏற்பத்தான், இ-பாஸ் வழங்கப்படும். இஷ்டத்திற்கு எல்லாம் நிறைய பேர் இ-பாஸ் வாங்கிவிட முடியாது. தவிர்க்க முடியாத திருமணம் என்றால் மட்டுமே இ-பாஸ் கேட்டு விண்ணப்பியுங்கள். அல்லது போகாமல் இருந்த இடத்திலிருந்தே வாழ்த்துவது நாட்டுக்கும், வீட்டுக்கும் நல்லது.
இ-பாஸ் லிங்க்
இ-பாஸ் தேவைப்படுவோர்கள், இ-பதிவு செய்ய விரும்புவோர்கள், https://eregister.tnega.org/#/user/pass என்ற லிங்க்கை பயன்படுத்தலாம். அவசிய தேவை உள்ளவர்கள் மட்டும் இ-பாஸ் கேட்டு விண்ணப்பிக்க கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
வீட்டு பொருட்கள்
இன்னொரு சந்தேகம் பலருக்கும் எழுகிறது. ஓரிடத்தில் வீட்டை காலி செய்து இன்னொரு இடத்திற்கு பொருளை கொண்டு செல்ல வேண்டும். இதற்காக சரக்கு எடுத்துச் செல்லும் வாகனத்தை ஏற்பாடு செய்துள்ளோம். அதற்கு இ-பாஸ் அல்லது பதிவு தேவையா என்பதுதான் அன்த சந்தேகம். ஆனால், சரக்கு வாகனங்களுக்கு எந்த பதிவும் தேவையில்லை என்பதால் உங்கள் பொருட்களை கொண்டு செல்ல தடையில்லை.
சந்தேகங்கள்
கொரோனா தொடர்பான சந்தேகங்களுக்கு, 108/ 104 or 044-4612 2300/ 044 2538 4520 போன்ற ஏதாவது ஒரு எண்ணில் தொடர்பு கொள்ளலாம். மருத்துவமனை படுக்கை வசதி தொடர்பான தகவல்களுக்கு https://stopcorona.tn.gov.in/beds.php என்ற வெப்சைட்டில் பார்க்கலாம்.