யார் மனதையும் புண்படுத்தக்கூடாதுன்னு சொல்லியிருக்கிறோம் - சென்னை போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன்
காவல் நிலையத்திற்கு அழைத்து வருபவர்களை அடிப்பதோ, துன்புறுத்துவதோ கூடாது, யார் மனதையும் புண்படும் வகையில் பேசக்கூட கூடாது என அடிப்பது சட்டப்படி தவறு என்று காவல்துறையினருக்கு அறிவுறுத்தி இருப்பதாக சென்ன
சென்னை: லாக்டவுன் காலத்தில் விதிமீறலில் ஈடுபட்டவர்களை கைது செய்து காவல் நிலையத்திற்கு கொண்டு வரும் போது எப்படி கையாள வேண்டும் என்பது தொடர்பான வழிமுறைகள் குறித்து நீதிமன்ற உத்தரவுகள் இருக்கிறது. யார் மனதையும் புண்படும் வகையில் பேசக்கூட கூடாது, அடிப்பது சட்டப்படி தவறு என அனைத்து காவல்துறையினருக்கும் வலியுறுத்தி உள்ளோம் என்று சென்னை பெருநகர காவல்துறை ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் கூறியுள்ளார்.
கொரோனா வைரஸ் பாதிப்பு சென்னையில் அதிகரித்து வருகிறது. வைரஸ் பரவலை கட்டுப்படுத்த சில தளர்வுகளுடன் லாக்டவுன் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ஞாயிறுகிழமை தளர்வுகள் ஏதும் இல்லாத முழு லாக்டவுன் அமல்படுத்தப்பட்டுள்ளதால் காவல்துறையினர் தீவிர வாகன தணிக்கை மேற்கொண்டுள்ளனர்.
சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் தங்க சாலை மணிகூண்டு அருகே வாகன தணிக்கை மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது பேசிய அவர், தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு சென்னையில் இன்று அமல்படுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு கொடுத்துள்ளார்கள்.
இன்று அதிகாலையில் இருந்தே காவல்துறை அதிகாரிகள் ரோந்து பணியை தீவிரப்படுத்தி உள்ளனர். 52, 234 வாகனங்கள் பறிமுதல், 60,131 வழக்குகள் பதிவு, 24,704 முக கவசங்கள், தனி மனித இடைவெளி பின்பற்றாதவர்கள், போலி இ-பாஸ் மூலம் சென்றதற்காக 58 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. பத்திரிகையாளர்கள், மருத்துவர்கள் என கூறி போலி இபாஸ் மூலம் பயணித்த வாகனங்கள், பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
பொதுமக்கள் எப்போதும் இதே போல முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இ-பாஸை யாரும் தவறாக பயன்படுத்த வேண்டாம். அது குற்றம். போலியாக தயாரித்து இது போன்ற செயலில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்தார்.
சாத்தான்குளம் தந்தை, மகன் மரணம்.. காத்திருப்பு பட்டியலில் இருந்த இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் சஸ்பெண்ட்!
தொடர்ந்து பேசிய அவர், லாக்டவுன் காலத்தில் விதிமீறல் தொடர்பாக கைது செய்து காவல் நிலையத்திற்கு கொண்டு வரப்படுபவர்களை எப்படி கையாள வேண்டும் என்பது தொடர்பான வழிமுறைகள் நீதிமன்ற உத்தரவுகள் இருக்கிறது. குறிப்பாக அடிப்பதோ, துன்புறுத்துவதோ கூடாது, யார் மனதையும் புண்படும் வகையில் பேசக்கூட கூடாது, யாரையும் அடிப்பது சட்டப்படி தவறு என அனைத்து காவல்துறையினருக்கும் வலியுறுத்தி உள்ளோம் என்று கூறினார்.
சென்னை காவல்துறையில் இதுவரை 1065 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 410 பேர் பூரணகுணமடைந்துள்ளனர். கொரோனாவால் பாதிக்கப்பட்ட காவல்துறையினருக்கு நிவாரண நிதி கிடைப்பது தொடர்பான நடவடிக்கை பரிசீலனையில் இருப்பதாகவும் ஏ.கே விஸ்வநாதன் கூறியுள்ளார்.