நானும் உதயநிதியும் விளையாடிய மைதானம்.. அப்போ நாங்க எதிரணி.. நினைவுகள் பகிர்ந்த அன்பில் மகேஷ்!
சென்னை: ஒய்எம்சிஏ மைதானத்தில் நடைபெற்ற சர்வதேச புத்தக கண்காட்சி நிறைவு விழாவில், தானும் உதயநிதியும் எதிர் எதிர் அணிகளுக்காக இந்த மைதானத்தில் விளையாடி இருக்கிறோம் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் நினைவுகளை பகிர்ந்து கொண்டார். அதேபோல் சர்வதேச புத்தக கண்காட்சி மூலம் 365 புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளதாகவும், விரைவில் கலைஞர் நூலக பணிகள் முடிக்கப்பட உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
கடந்த 16ஆம் தேதி சென்னை ஒய்எம்சிஏ மைதானத்தில் சர்வதேச புத்தக கண்காட்சி தொடங்கியது. இந்த புத்தக கண்காட்சி இன்றுடன் நிறைவு பெறுகிறது. இதன் நிறைவு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டார்.
இந்த நிறைவு விழாவில், தமிழ்நாடு மற்றும் வெளிநாட்டு பதிப்பாளர்கள் இடையே புத்தகங்களின் பதிப்புரிமை தொடர்பான 365 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகிவுள்ளது. இதனைத் தொடர்ந்து தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட 5 மருத்துவ பாடப் புத்தகங்களை மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.

அன்பில் மகேஷ் பேச்சு
இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் அன்பில் மகேஷ் பேசுகையில், இந்த ஒய்எம்சிஏ மைதானத்தில் உதயநிதி ஸ்டாலினும், நானும் விளையாடி இருக்கிறோம். அப்போது எதிரெதிர் அணிகள் விளையாடினோம். ஆனால் இப்போது ஒரே அணியில் இருக்கிறோம். அதனால் இந்த மைதானம் கொஞ்சம் சிறப்பானது. அறிவு சார்ந்த சமூகத்தை உருவாக்க வேண்டும் என்று அதிகாரிகளுடம் நாங்கள் இணைந்து பணியாற்றி வருகிறோம்.

90 புத்தகங்கள்
365 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளது. கடந்த 100 ஆண்டுகளில் மொத்தமாகவே தமிழ்நாட்டில் இருந்து 100 புத்தகங்கள் மட்டுமே வெளிநாடுகளில் மொழிபெயர்க்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டுள்ளன. ஆனால் இந்த 3 நாட்களில் 90 புத்தகங்கள் வெளிநாடுகளில் அனைவருக்கும் செல்ல உள்ளன. இனி வரும் காலத்தில் இதனை அதிகப்படியான நாட்கள் நடத்த ஏற்பாடு செய்வோம்.

நம்பிக்கை
வெறும் ஒன்றரை மாதங்களில் திட்டமிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட சர்வதேச புத்தக கண்காட்சியில் 30 நாடுகள் பங்கேற்கும் வகையில் நடத்தி முடித்திருக்கிறோம். இது எங்களுக்கு பெருமை. அதேபோல் தமிழ்நாடு அரசின் மீதான நம்பிக்கையாகவும் பார்க்கிறேன். இன்னும் பல திட்டங்களை பள்ளிக்கல்வித்துறைக்காக அறிவிக்கிறார். அதற்காக நிதி ஒதுக்குகிறார்.

எழுத்தாளர்கள்
அதனை பார்த்து பார்த்து செலவு செய்ய வேண்டிய கட்டாயம் எங்களுக்கும் உள்ளது. இதுதான் திராவிட மாடல் ஆட்சியின் பெருமை என்பதை விடவும், கடமை என்றே கருதுகிறோம். தமிழ்நாட்டின் எழுத்தாளர்களும், இலக்கியவாதிகளுமே மாநிலத்தின் சொத்து. அவர்களை உலகம் முழுவதும் கொண்டு செல்லும் பணியை தொடங்கி இருக்கிறோம்.

கலைஞர் நூலகம்
இனி ஒவ்வொரு ஆண்டும் இது அதிகமாகும். இம்முறை 30 அரங்குகள், அடுத்த முறை 60 அரங்குகளாக மாறும். இலக்கியவாதிகளின் கனவை தமிழ்நாடு அரசு நிறைவேற்றி இருக்கிறது. திமுக ஆட்சியில் தான் அறிவுசார் சமூகம் உருவாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதேபோல் மதுரையில் கலைஞர் நூலகத்தை கட்டி வருகிறோம். அதுவும் விரைவில் மக்கள் பயன்பாட்டுக்கு வரும் என்று தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications